Chapter 24
கரடு முரடானது இந்த பிரதேசமல்ல..
பொய்முகம் கொண்ட மனிதர்களின் மனம்
சுயநலம் நிரம்பிய அவர்களின் குணம்..
ஊசிக்குளிர் உடல் துளைக்க மலைச்சாரலில் நனைந்தபடி மொட்டை மாடியில் அசையாமல் நின்றிருந்தான் சித்தார்த்தன்.. எப்படி அவனால் இந்தக் குளிரையையும், மழையையும் தாங்கிக் கொண்டு நிற்க முடிகிறது என்று வெடவெடத்தாள் ப்ரீதி.. ஸ்வெட்டரையும் தாண்டி அவளது உடலை குளிர் துளைக்கிறது.. சால்வையைக் கொண்டு தலையைச் சுற்றி மூடினாள்.. எஸ்கிமோ போல தன்னை உணர்ந்தாள்.. அவனருகில் சென்று அவன் முதுகைத் தொட்டாள்.. திரும்பியவனின் கண்கள் சிவந்திருந்தன..
“போய் விடு..” உருமினான்..
“நான் என்ன செய்தேன்..?” தீனமான குரலில் கேட்டாள் ப்ரீதி..
“அதைத்தான் நானும் கேட்கிறேன்.. நீ என்ன செய்த..? உன் அத்தை மகனுக்கு பரிந்து கொண்டு உன் அப்பா என் அரண்மனையிலிருக்கும் அறையை விட்டு என்னை வெளியே போகச் சொல்கிறார்.. நீ பார்த்துக்கிட்டு பேசாமல்தானே இருந்த..? என்ன செய்த..?”
“எதுவும் செய்யலைன்னு உங்களுக்குத் தெரியுமா..? அப்பா அப்படி பிஹேவ் பண்ணுவார்ன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை.. ஸ்டன் ஆகிட்டேன்.. நீங்க ஏன் உங்களைப் பற்றி என்னிடம் சொல்லவே இல்லை..”
“ஏன் சொல்லனும்…? உன் அத்தைதானே உன்னிடம் சொல்லனும்..? அவங்க ஹஸ்பெண்ட் வாழ்ந்த இரட்டை வாழ்க்கையைப் பற்றி அவங்களுக்குத் தெரியுமில்ல.. அவங்க ஏன் உன்னிடம் சொல்லலை..? உன் அத்தை மகன்.. அத்தான்.. அழகு ஆதவன்.. அவன் ஏன் உன்னிடம் சொல்லலை..? நேர்மையின் திருவுருவம் ஆர்த்தி.. அவ ஏன் உன்னிடம் சொல்லலை..? உன் அத்தையின் ஹஸ்பெண்ட் மாறன் எனப்படும் மகாத்மா.. அவர் ஏன் உன்னிடம் சொல்லலை..? உன்னை இங்கே விருந்தாட அனுப்பி வைத்த உன் அப்பாவும் அம்மாவும் ஏன் உன்னிடம் சொல்லலை..? உன்னைச் சேர்ந்தவங்க உன்னிடம் சொல்லாத உண்மையை நான் ஏன் சொல்லனும்..?”
“ஏனா..? எனக்கு உங்களைப் பற்றித் தெரிய வேண்டாமா..?”
“ஏன் தெரியனும்..? நீ யார்..? நான் யார்..?”
“சித்தார்த்தன்..!”
ப்ரீதி பதைத்தாள்.. அவளுடைய சித்தார்த்தனின் ஒட்டாத குரல் அவளை உலுக்கியது… அவனுக்காக தகப்பனையே தூக்கியெறிந்து பேசிவிட்டு வந்திருந்தவளின் இதயம் துடித்தது.. அவன் யாரோ.. அவள் யாரோவா..? அவனுக்கு அவள் யாரோதானா..? எதுவுமே இல்லையா..?
“மாமா.. உங்க பெண் உங்க தங்கையையும், தங்கை பிள்ளைகளையும்.. அவங்க வாழ்கிற வாழ்க்கையையும் அவமதித்துப் பேசுகிறா.. நீங்க அதைக் கேட்டுக்கிட்டு இருக்கீங்களே..”
ஆதவன் கங்காதரனை உசுப்பி விட்டானே.. அவரும் மகளைக் கோபித்துக் கொண்டாரே…
“இது சரியில்லை ப்ரீதி.. மாறன் இருக்கும் இடத்தில் விசாகாவும் அவளோட பிள்ளைகளும் இருக்காங்க.. இதை நீ குறைவாய் பேசுவதா..?”
“அப்பா.. சித்தார்த்தனின் நிழலில் இருந்துக்கிட்டே இவங்கதான் அவரைக் குறைவாய் பேசறாங்க.. விரோதியைப் போல நினைக்கிறாங்க..”
“அது அவங்க குடும்ப விசயம் ப்ரீதி.. நமக்கு என்ன வந்தது..? நீ உன் திங்ஸை பேக் பண்ணி ரெடியாகு.. நாம் கிளம்பனும்..”
“கிளம்பனுமா..? எங்கே..?”
“இப்போதைக்கு நான் ரூம் போட்டிருக்கிற ரிசார்ட்டுக்குப் போறோம்.. நாளைக்குக் காலையிலே பிளைட் பிடிச்சு பூனாவுக்கு போறோம்..”
“இல்லைப்பா.. நான் வரமாட்டேன்..”
“ப்ரீதி..”
மகளின் மறுப்பில் கோபமாக புருவங்களை நெரித்தார் கங்காதரன்.. இதுவரை ப்ரீதி தந்தையின் கட்டளையை மீறியதில்லை.. அவரும் மகளிடம் கட்டளையிட்டதில்லை என்பதை அப்போது மறந்து போனார்.. தனக்குப் பிடிக்காத ஒன்றை அவள் நாசுக்காக மறுத்து விடுவாள்.. அடுத்து கங்காதரன் அதைப்பற்றிய பேச்சையே எடுக்க மாட்டார்.. ஆதவனின் விசயத்திலும் அப்படித்தான் நடந்தது..
“அப்பா.. நீங்க என்னை ஃபோர்ஸ் பண்ணியதில்லை.. என்னால் ஆதவன் அத்தானை மேரேஜ் பண்ணிக்க முடியாது..”
ஆதவனை முன்னால் வைத்துக் கொண்டே ப்ரீதி இதைச் சொல்ல.. ஆதவனின் முகம் சிறுத்துப் போனது.. அவன் சினத்துடன் கங்காதரனைப் பார்த்தான்..
“ஐ ஆம் ஸாரி ஆதவா..” என்று அவர் அவன் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டார்..
எதிர்பார்த்ததுதான் என்றாலும் ஆதவனின் மனதுக்குள் ஏமாற்றம் சூழ்ந்தது.. அவனிடம் சித்தார்த்தன் கொடுத்த அந்தஸ்து இருந்தது.. சித்தார்த்தனால் கிடைக்கப் போகும் கம்பெனி அவனது ஒட்டு மொத்த அடையாளத்தையும் மாற்றிவிடும்.. வால்பாறை வட்டாரத்திலிருந்தால்
அவன் சித்தார்த்தனின் தயவில் வாழ்கிறான் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டி ஏளனமாகப் பேசுவார்கள்.. பூனாவுக்குப் போய்விட்டால் அவன் அந்த ஊரின் கோடிஸ்வரர்களில் ஒருவனாகி விடுவான்.. அவன் பிறந்து வளர்ந்த ஊர்.. அங்கே கோடிஸ்வரனாக வாழ்வதில் ஆதவனுக்கு ஓர் சந்தோசம்.. ப்ரீதி மனைவியாகக் கிடைத்தால் சரி.. இல்லையென்றால் அவனுக்கு இணையான (?) மேல்தட்டு வர்க்கத்தில் அழகான ஓர் பெண்ணை மணம் முடித்து இன்னும் தன் வாழ்வை வளம் படுத்திக் கொள்ளலாம் என்ற எதிர்காலத்திட்டம் அவன் மனதில் இருந்தது.. ப்ரீதியின் மீது ஒன்றும் அவனுக்குக் காவியக் காதல் இல்லையே..
சித்தார்த்தன் ப்ரீதியின் மீது ஈடுபாட்டைக் காட்டும் வரை ஆதவன் அலட்சியமாகத்தான் இருந்தான்.. எப்போது ப்ரீதியை சித்தார்த்தன் விரும்புகிறான் என்று ஆதவனுக்குத் தோன்ற ஆரம்பித்ததோ.. அப்போதே அவன் மனதிலிருந்த வஞ்சகம் விழித்துக் கொண்டது.. அவனுடைய தாய்மாமன் மகளை சித்தார்த்தன் மணந்து கொள்வதா..? ஆதவன் அதற்கு விடவே மாட்டான்.. ஒன்று, சித்தார்த்தனின் கண் முன்னே ஆதவன் ப்ரீதியை மணந்து கொண்டு சித்தார்த்தனை வென்று காட்ட வேண்டும்… இல்லையென்றால் ஆதவனுக்குக் கிடைக்காத ப்ரீதி சித்தார்த்தனுக்கும் கிடைக்கக் கூடாது..
“என் கணவரை அவ பறித்துக்கிட்டா.. முறைப்படி முதல்தாரம் நான்தான்.. ஆனா.. மறைவா வாழ்க்கை நடத்துகிறவளின் வீட்டிற்கு வந்து போவதைப் போல என் கணவரை என் வீட்டுக்கு வந்து போக வைத்தா.. இப்ப அவ மகன் என் மகனோட முறைப் பெண்ணை பறித்துக்கப் பார்க்கிறான்.. இதெயெல்லாம் தாங்கிக்கிட்டு இன்னும் நான் உயிரோடு இருக்கனுமா..?”
கங்காதரனிடம் போனில் விசாகா கதறிய கதறலில் அவர் மைத்துனன் வீட்டு விசேத்தையும் பொருட்படுத்தாமல் கொல்கத்தாவிலிருந்து கிளம்பி வால்பாறைக்கு வந்து சேர்ந்து விட்டார்..
“விசாகா மீது எனக்கு அளவு கடந்த பாசமிருக்கு ஆதவா.. அதேபாசம் என் மகளின் மீதும் எனக்கு இருக்கு.. அவள் பூனாவிலேயே உன்மீது பிரியமில்லைன்னு சொல்லிட்டா.. பேசிப் பழகிப் பாருன்னு நான்தான் இங்கே அனுப்பி வைத்தேன்.. இப்போதும் அதையேதான் சொல்கிறா.. ஸோ.. ப்ரீதியை கல்யாணம் பண்ணிக் கொள்ளனும் என்கிற எண்ணத்தை மறந்துவிடு..”
“ஆகட்டும் மாமா..” வாதாடாமல் ஒப்புக் கொண்டான் ஆதவன்..
பிடிக்கவில்லை என்பதை முகத்துக்கு நேரே சொல்லி விட்ட ஒருத்தியை மணந்து கொள்வதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை.. அந்தக் கொடுமை அவனுக்கு எதற்கு..? நரியே.. சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லி பின்வாங்கவில்லையா..? அவன் வேறு.. நரி வேறா..?
“ஆனால் ப்ரீதி.. நீ என்னுடன் கிளம்பியே ஆக வேண்டும்..”
“அப்பா.. நான்.. சித்தார்த்தனை…” ப்ரீதி தவியாய் தவித்தாள்..
அவளால் சித்தார்த்தனைப் பிரிந்து ஒரு எட்டுக்கூட எடுத்து வைக்க முடியாது.. இதை எப்படி அவள் கங்காதரனுக்குப் புரிய வைப்பாள்..?
“லுக் ப்ரீதி.. நீ என்ன சொல்ல நினைக்கிறேன்னு அப்பாவுக்குப் புரியுது.. உன் உணர்வுகளுக்கு நான் மதிப்புக் கொடுத்தேனா இல்லையா..? ஆதவனுக்கு ‘நோ’ சொல்லிட்டேனா இல்லையா..? அதுபோல.. நீயும் என் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துத்தான் ஆகனும்.. நீ ஆதவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டாம்.. அதே சமயம்.. சித்தார்த்தனையும் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கக் கூடாது.. சித்தார்த்தனைத் தவிர வேறு யாரை நீ கை காட்டினாலும் தடை சொல்லாமல் அவருக்கே உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறேன்.”
“அதுதான் ஏன்..? சித்தார்த்தர் ரொம்ப நல்லவர் அப்பா..”
“இல்லைன்னு யார் சொன்னது..? பட்.. அவர் என் தங்கையின் கணவருக்கு மகனாகப் பிறந்து விட்டாரே..”
“அதில் அவருடைய தவறென்ன இருக்கிறது..? இன்னும் சொல்லப் போனால் அவருடைய அம்மாவின் மீதோ, தாத்தாவின் மீதோ தவறு சொல்லிவிட முடியுமா..? குடும்பத்துக்குத் தெரியாமல் காதலித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை மறந்து கல்யாணமும் பண்ணிக் கொண்ட மாமாவின் மீதுதானே மொத்த தவறும் இருக்கிறது..?”
“அவையெல்லாம் எனக்குத் தேவையில்லாத விசயங்கள்.. எனக்குத் தேவை விசாகாவின் பக்கம் இருக்கிற நியாயம் மட்டும்தான்..”
“சித்தார்த்தனின் பக்கம் யார் நிற்பது அப்பா..? அவர் பக்கமிருக்கிற நியாயத்தை யார் சொல்வது..?”
“அவருக்கென்ன..? பரம்பரை கோடிஸ்வரர்.. ராஜவம்சம் வேறு.. அவர் பக்கம் நிற்க ஆயிரம் பேர் இருப்பார்கள்..”
“அந்த ஆயிரத்தில் ஒருத்தியாக நானும் நிற்பேன் அப்பா.. அந்தப் பரம்பரை கோடிஸ்வரரின் பெயரைச் சொல்லித்தான் உங்கள் தங்கை மகன் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. படிக்க ஃபாரின்.. ஓட்ட ஃபாரின் கார்.. கம்பெனி ஆரம்பிக்க கோடிக்கணக்கில் பணம்.. இதற்கெல்லாம் சித்தார்த்தன் வேண்டும்.. இவருடைய தாய் மாமன் மகளை மேரேஜ் பண்ணிக்கொள்ள மட்டும் சித்தார்த்தன் வேண்டாமா..? இவரும் ஆர்த்தியும் என்ன சித்தார்த்தனின் சொத்து சுகத்திற்கு பிறந்தார்களா..? அவருடைய நேர்மையில்லாத அப்பாவிற்குப் பிறந்திருக்கிறார்கள்.. உங்கள் தங்கை சித்தார்த்தனனின் அப்பாவுக்கு முதல் மனைவி என்பதற்காக.. சித்தார்த்தனிடம் கூலி வாங்கிக் கொண்டிருக்காங்களா..?”
“ப்ரீதி..”
“எதுக்குப்பா உங்களுக்கு கோபம் வருது..? எந்த உரிமையில் அவங்க இந்த அரண்மனையில் ராணி மாதிரி வாழ்கிறாங்க..? அவங்க ஹஸ்பெண்டை சாருலதா ஆண்ட்டிக்கு விற்ற உரிமையில்தானே வாழ்கிறாங்க..?”
“வாயை மூடு..”
“மாட்டேன்.. ஒவ்வொரு முறை அத்தையைப் பார்க்க வரும் போதும் மாமா வைர நகைகளாக வாங்கிக் கொண்டு வருவாரே.. எங்கிருந்து அந்தப் பணம் வந்ததுன்னு அத்தைக்குத் தெரியும்தானே.. அதை வாங்கிப் போட்டுக் கொள்ள அவங்களுக்கு உடம்பு கூசலை.. மாமா கொட்டிக் கொடுத்த பணம் சாருலதா ஆண்ட்டியின் பணம்ன்னு தெரிந்தும் அதை கைகுளிர செலவளிக்க அவங்களுக்கு கை கூசலை.. ச்சே..”
“சொல்லிக்கிட்டே இருக்கேன்.. நீ பேசிக்கிட்டே போற..”
கங்காதரன் ஆத்திரத்துடன் மகளை அடித்து விட்டார்.. வலி தாங்காமல் கன்னத்தைப் பிடித்துக் கொண்ட ப்ரீதியின் அதிர்ந்த தோற்றத்தில் கங்காதரனின் மனதில் குற்றஉணர்வு எழுந்தது.. இது அப்பாதானா என்று அடையாளம் பார்ப்பதைப் போல மகள் பார்த்து வைத்ததில் ஏதோ கூற முயன்றார்..
“கண்ணம்மா..” கண்கலங்க ஏதோ கூற முயன்றார்..
“வேண்டாம்ப்பா..” கை உயர்த்தி தடுத்து விட்டாள் ப்ரீதி..
“ஏம்ப்பா அடிச்சீங்க..? ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது…? அத்தை உங்களோட தங்கை என்கிறதினாலதானே.. அப்ப நான் உங்களுக்கு இரண்டாம் பட்சமா அப்பா..? என்மேல் உங்களுக்குப் பாசமில்லையா..?”
“பாசமிருக்கிறதினாலதானே என் தங்கை மகனுக்கு உன்னைப் பெண் கொடுக்க மறுத்துவிட்டேன்.. உனக்கு சித்தார்த்தன் வேண்டாம்ன்னு மட்டும்தானே.. சொல்கிறேன்.. மற்றபடி எதில் உன்னிடம் ஃபார்சியலிட்டி காட்டினேன்..?”
“அத்தையின் காதலை அங்கீகரித்து அவங்க விருப்பப்படி மேரேஜ் பண்ணி வைத்தீங்களேப்பா.. என் காதலை நீங்க அங்கீகரிக்கலையே.. ஏன்ப்பா..? மாறன் மாமாவைப் போல சித்தார்த்தன் ஒன்றும் நேர்மையில்லாத வரில்லையே அப்பா.. ஒன்றை நினைத்து அதிலேயே நிலைத்து நிற்கும் குணம்ப்பா.. அவரோட பணத்தை வைத்து உங்க தங்கை மகன் சிட்டியிலே கம்பெனி ஆரம்பித்து சிட்டி லைஃபை வாழனும்னு நினைக்கிறார்ப்பா.. அவரோ.. கோயம்பத்தூரில் மில், ஹைதராபாத்தில் ஐ.டி கம்பெனி, மும்பையில் ஷாப்பிங் மால், இன்னும் உலகம் முழுதும் பல பிஸினெஸ்கள்ன்னு இருந்தும் இந்த வால்பாறை கானவயலின் காட்டைத்தான் தன் வேரா நினைக்கிறார் அப்பா.. இந்த காடு வேறு, அவர் வேறுன்னு இல்லைங்கிறார்.. அவரோட பிரின்சிபல்ஸ் என்னை இம்ப்ரெஸ் பண்ணுதுப்பா.. அவரோட பேக்ரவுண்டைப் பற்றி ஒருவார்த்தை.. ஒரேயொரு வார்த்தைகூடச் சொன்னதில்லை.. அவரைப் போல யாரிருக்கிறாங்க..? இருந்தும் என் காதலை நீங்க அங்கீகரிக்கலை.. ஏன்னா.. சித்தார்த்தன் உங்க தங்கைக்கும், தங்கை பிள்ளைகளுக்கும் வேண்டாதவர்.. அதுதானே அப்பா..?”
ப்ரீதி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் கங்காதரன் சங்கடம் கொண்டார்.. மகள் சொல்வதுதான் உண்மை என்பதில் அவரால் உடனடியாக பதில் சொல்லமுடியவில்லை.. அதில் ஆதவன் சீற்றம் கொண்டான்..
“ஆமாம்.. அதுக்கு இப்ப என்னங்கிற..?” என்ற அவனது கோபத்திற்கு..
“சித்தார்த்தன் வேண்டாதவர்ன்னா அவர் கொடுக்கிற பணமும், பெயரும் மட்டும் உங்களுக்கு வேண்டுமா அத்தான்..? கானவயலை விட்டுக் கையும் காலோடு வெளியேறி உங்கள் சொந்தக்காலில் நின்று உழைத்துப் பிழைக்கலாமே அத்தான்.. அதுதானே சுயமரியாதை..?” என்ற ப்ரீதியின் பதிலடி கிடைத்தது..
“மாமா..” ஆதவனாலும் பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது..
அவன் கங்காதரனை உதவிக்கு அழைக்க.. இதனால்தானே வாய்மூடி நிற்கின்றேன்..? பெரிய இவனாட்டம் பேசப் போனாயல்லவா..? அனுபவி.. என்று அவர் கடும் தனலாக தங்கை மகனை முறைத்தார்..
“காதலிக்கவும்.. அதில் பிடிவாதமாக நிற்கவும் உங்க தங்கைக்கு உரிமை இருக்குன்னா.. எனக்கும் அந்த உரிமை இருக்குப்பா.. நான் சித்தார்த்தனைத்தான் மேரேஜ் பண்ணிக்குவேன்.. அதை உறுதி பண்ணிக்காம இந்த கானவயலை விட்டு நகரமாட்டேன்..” கோபமாக அறிவித்து விட்டு அறையை விட்டு வெளியேறி விட்டாள் ப்ரீதி.. தடுக்க முயன்ற ஆதவனை..
“வேண்டாம் ஆதவா.. அவளை விட்டுவிடு..” என்ற கங்காதரனின் குரல் தடுத்து நிறுத்தி விட்டது..
அறையை விட்டு வெளியேறிய ப்ரீதி.. அரண்மனை முழுதும் சித்தார்த்தனைத் தேடினாள்.. எங்கும் அவன் இல்லையென்பதில் தோட்டத்திற்குப் போனாள்.. அங்கும் அவன் இல்லை..
“அம்மா.. ஹி..ஹி..” என்றபடி வனிதாமணி வந்தாள்..
“உங்க சித்தார்த்தன் அய்யா இருந்தால் ஊரைச் சுற்றிப் பார்க்கக் கூப்பிட்டுக்கொண்டு போவார்ன்னு பார்த்தா அவர் தனியே எஸ்கேப் ஆகிட்டாரே..” வனிதாமணியின் வாயைப் பிடுங்குவதை அவள் உணர்ந்து விடாமல் இயல்பாக பேசுவதைப் போல அவளது வாயைக் கிளறினாள்..
சித்தார்த்தன் எங்கே என்று வெளிப்படையாக கேட்க முடியாது.. வனிதாமணி வெகுளி.. ப்ரீதி அம்மா, சித்தார்த்தன் ஐயா எங்கே போனார்ன்னு கேட்டாங்க என்று அரண்மனை முழுதும் பரப்பி விடுவாள்.. ஆதலால் இவ்விதமாகத் தூண்டிலை வீசி விட்டுக் காத்திருந்தாள்.. மீன் வகையாக சிக்கி விட்டது..
“அய்யா மொட்டைமாடியில நின்றுக்கிட்டு இருக்காரும்மா.. இப்பத்தான் சூடா டீ கொண்டு போய் கொடுத்தேன்.. உங்களுக்கும் கொண்டாந்தேன்..”
வனிதாமணி நீட்டிய டீயை வாங்கி ஓரே மூச்சில் குடித்து விட்டு மாடிப்படிகளில் தாவினாள்.. அசையாமல் நின்றிருந்தவனின் மனம் அசைந்துவிடாதா என்ற ஏக்கத்துடன் அவனருகே சென்றாள்.. அவனோ..
‘யார்.. நீ..?’ என்று முள்ளாகக் குத்தினான்..
“நான் யாரா..? உங்களைக் காதலிக்கிறவள்.. போதுமா..? ஐ லவ் யு.. இதை என் கண்களில் சொல்லி வந்தேன்.. வாய் விட்டும் சொல்லி விட்டேன்.. என் மனதில் உங்கள் மேல் காதல் வந்தப்ப எனக்கு உங்கள் பெயர் மட்டும்தான் தெரியும்.. இந்த அரண்மனையில் நீங்க தங்கியிருக்கீங்கன்னு மட்டும்தான் நினைத்தேன்.. உங்க உயரத்தைப் பற்றித் தெரியாது சித்தார்த்.. நான் உங்க ஸ்டேடஸிற்காக காதல் சொல்கிறேன்னு நினைத்து விட்டிங்களா..?” ப்ரீதி தழுதழுத்தாள்..
“முட்டாள்..” அவளது முகத்தை இறுக்கிப் பற்றிச் சீறினான் சித்தார்த்தன்..
ப்ரீதியின் கன்னத் தசை வலித்தது.. ஆனால் மனம் முழுவதும் சந்தோசம் நிரம்பியது.. அவனது கோபத்திற்கான காரணம் அவள் மனதில் இனிப்பை நிரப்பியது.. ப்ரீதியின் விழிகள் அவனை காதலுடன் பார்த்தன..
“உனக்குத் தெரியுமா..? என் உயரத்தைப் பற்றி மட்டும் பேசுகிறாயே.. என் மனதில் நிரம்பியிருக்கும் வேதனையைப் பற்றி உனக்குத் தெரியுமா..? கேட்டவருக்கு இல்லைன்னு சொல்லாமல் அள்ளி வழங்கற வள்ளல்தான் நான்.. எனக்கான நிம்மதியைத் தேடுகிறேன்.. கொடுப்பதற்கு யாருமில்லை என்பது உனக்குத் தெரியுமா..? ஸ்டேட்டஸாம்.. ஸ்டேட்டஸ்.. இந்த ஸ்டேட்டஸை வைத்து என்ன பண்ண..? பணமிருந்தால் மட்டும் போதாதுடி.. கொஞ்சம் வஞ்சகமும் சூதும் இருக்கனும்.. அப்படியிருந்திருந்தா என் அம்மா தான் காதலிக்கிறவன் நல்லவனா, ஏமாற்றுக்காரனான்னு முதலில் விசாரிக்கச் சொல்லியிருப்பாங்க.. எங்க பாட்டி அதைத்தானே சொன்னாங்க.. யாரும் கேட்கலையே.. அம்மாவின் காதலை அவங்க எதிர்த்த ஒரு காரணத்துக்காகவே அவங்க சொல்கிற எதையும் காதில் போட்டுக்கலையே..”
சித்தார்த்தனின் கரம் துடித்தது.. ப்ரீதி அவனது கைகளை இறுக்கிப் பற்றி அதில் முகம் பதிக்க முனைந்தாள்.. அவன் கைகளை உருவிக் கொண்டதில் அதிர்ச்சியாகி அவனை இறைஞ்சலுடன் கெஞ்சுதலாகப் பார்த்தாள்..
சித்தார்த்தன் அவளிடமிருந்து விலகி நின்று வானைப் பார்த்தான்..
“தாத்தா விசாரித்தார்.. கானவயலில் மாறனா.. அவன் தங்கக்கம்பியாச்சேன்னு செர்டிபிகேட் கொடுத்தாங்க.. பூனாவுக்கு இந்த மனிதர் படிக்கப் போனார்ன்னுதான் எல்லோரையும் போல தாத்தாவும் நினைத்து விட்டார்.. அம்மாவை இவர் கையில் பிடித்துக் கொடுத்து விட்டார்..”
மாறனை சித்தார்த்தன் அப்பா என்று அழைக்கவில்லை என்பதை கவனித்தாள் ப்ரீதி.. அவரைப் பற்றிப் பேசியவனின் குரலில் வெறுப்பு விரவியிருந்தது..
“எனக்குப் பதினைந்து வயதாகும்வரை ஃபேமிலியில் சந்தோசம் நிறைய இருந்தது.. இந்த மனிதரை அப்பான்னு கூப்பிட்டேன்.. பாசம் காட்டினேன்.. இவரும் அதற்குத் தகுந்தாற்போலதான் இருந்தார்.. இவருடைய இரட்டை வேடம் ஓர்நாள் வெளிப்பட்டபோது என் அம்மா வாழ்க்கையில் தோற்றுப் போன அதிர்ச்சியைத் தாங்க முடியாம மரணப் படுக்கையில் விழுந்துட்டாங்க.. படிப்பு.. அழகு.. பணம்ன்னு எல்லாத்திலயும் நம்பர் ஒன்னா இருந்தவங்க தன் ஹஸ்பெண்டுக்கு தான் நம்பர் ‘டூ’ வொய்ப்ன்னு தெரிந்த போது டைஜெஸ்ட் பண்ணிக்க முடியலை.. நான் அப்ப ஊட்டி காண்வென்டில் படித்துக்கிட்டு இருந்தேன்.. தாத்தா என்னைக் கூப்பிட வந்தார்.. என்னன்னு சொல்லலை.. இங்கே வந்து பார்த்தா அம்மா தன்னோட கடைசி நிமிடங்களில இருக்காங்க.. என்னைப் பார்த்ததும் கையைப் பிடித்துக்கிட்டு.. ‘சித்தார்த்’துன்னு கதறி அழுகிறாங்க.. அவருக்கு ஏற்கனெவே கல்யாணம் ஆகி விட்டதாம்டா.. அதை மறைத்து என்னைக் கல்யாணம் பண்ணியிருக்கிறார்.. உன் வயதில் அந்த வொய்புக்கு ஒரு மகன் இருக்கிறானாம்.. அவனுக்கு ஒரு தங்கையும் இருக்கிறாளாம்.. இதற்கு அர்த்தம் என்ன தெரியுமாடா.. என்னுடன் குடும்பம் நடத்திய காலகட்டத்தில் அவளுடனும் குடும்பம் நடத்தியிருக்கிறார்.. இதில் அவளை மட்டுமே காதலித்து என்னுடன் கடமைக்குக் குடும்பம் நடத்தியிருக்கிறார்.. அதன் அடையாளம்தான் அந்தப் பையனுக்குத் தங்கை இருப்பது.. இதுதான் அம்மா கடைசியாய் என்னிடம் பேசியது..”
சித்தார்த்தனின் புருவச் சுளிப்பில் ப்ரீதியின் உயிர் துடித்தது..
Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.