Chapter 08
உன் மனதில் நானிருந்தும்…
ஊமையாக.. ஏன் நின்றாய்..?
புன்னைவனத்தில் இப்படி ஒரு பூங்கொடியின் அறிமுகம் கிடைக்கும் என்று மித்ரன் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அவள் பார்வையால் கவரப்பட்டவன், அவள் பின்னாலேயே.. அரசமரத்தடி பிள்ளையார் வீற்றிருந்த மேடைக்குச் சென்றான்.
“என் பின்னாலேயே வராதீங்க. யாராவது பார்த்தால், ஏதாவது சொல்லுவாங்க…” குடத்திலிருந்த தண்ணீரால் பிள்ளையாரை குளிப்பாட்டிக் கொண்டே அவள் சொன்னாள்.
“ஏங்க.. இந்த ஊரில் இருக்கறவங்களுக்கு உங்களையும்… என்னையும் பார்த்து ஏதாவது சொல்வது தான் வேலையா..? அவங்கவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்குங்க…” மித்ரன் அவளைப் பார்த்த பார்வையை விலக்காமல் சொன்னான்.
“எல்லோருக்கும் ஆயிரம் வேலை இருக்குன்னு சொல்கிறீங்களே. உங்களுக்கு.. அந்த ஆயிரத்தில்.. ஒரு வேலைகூட இல்லையா..?” அவள் கேலியாகக் கேட்டபடி.. மீண்டும் படித்துறைக்கு போனாள்.
“ஏனில்லை.. இதோ உங்கள் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறேனே.. இதைப்பார்த்தால்.. உங்களுக்கு வேலையாகத் தெரியவில்லையா..?”
மித்ரனின் தைரியம் காயத்ரிக்கு வியப்பை அளித்தது. அவனது துணிச்சல் அவளைக் கவர்ந்து.. அவன் பக்கம் இழுக்கவும் செய்தது. அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளது பார்வையைக் கண்டதும் அவன் வரிசைப் பற்கள் தெரியச் சிரித்தான்.
‘எப்படிச் சிரிக்கிறான்..? அரும்பு கட்டிய முல்லைப் பூக்கள் வரிசை கட்டி நிற்பது போல.. அழகான பல் வரிசையைக் காட்டிக் கொண்டு.. மனம் விட்டுச் சிரிக்கிறானே..’
அவள் அவனது சிரிப்பை ரசித்தாள். மற்றவர்களை வசீகரிக்கும் மித்ரனின் அந்தச் சிரிப்பு.. அவளையும் வசீகரித்தது.. அவள் மயங்கிப் போனாள்.
“நேற்றுப் போல்.. இன்றும் பாட்டுக் கச்சேரி செய்யவில்லையா..?”
வெகுநாள் பழகியதைப் போல.. அவள் கிண்டலாகக் கேட்ட விதம்.. அவனுக்குப் பிடித்திருந்தது.
“கச்சேரி செய்ய நான் ரெடிதான். கேட்க நீங்கள் ரெடியா..?” என்று கேட்டான் அவன்.
“நான் எதற்கு..? அதுதான் உங்கள் ரசிகர் வட்டாரமான நாணல்கள் இருக்கின்றதே.. அது தலையாட்டுவது உங்களுக்குப் போதாதா..? நான் வேறு தலையாட்டணுமா..?” அவள் இரண்டாவது குடத்துத் தண்ணீரையும்.. பிள்ளையாரின் மேல் சரித்தவாறு அவனைப் பார்த்துக் கேட்டாள்..
“நாணல்கள் இவ்வளவு வாய் பேசுமா..?” அவன் அவளது பின்னலை ரசித்தவாறு சொன்னான்.
“வாய் பேசாதுங்கிற தைரியத்தில்தானே… நேற்று.. அவ்வளவு கர்ணகடூரமாக.. கத்திக் கொண்டிருந்தீங்க…” அவள் படித்துறையில் இறங்கி ஆற்று நீரில் குடத்தை அமிழ்த்தியவாறு நிமிர்ந்து மேல் பார்வையாக அவனைப் பார்த்துக் கொண்டே கூறினாள்.
“என்னது.. கத்தினேனா…?”
“பின்னே இல்லையா…?”
“அபாண்டமாய் சொல்லக்கூடாது…”
“உண்மையைச் சொன்னால் அது அபாண்டமா..?”
“என் பாட்டு கத்துவதுன்னா… உங்கள் பாட்டு என்ன..?”
“அது குயிலின் பாட்டு…”
“அதை நீங்க சொல்லக்கூடாது..”
“வேறு யார் சொல்லணும்..?”
“கேட்கிற.. நான்.. சொல்லனும்…”
“நிறைய பேர் என் பாட்டைக் கேட்டிருக்கிறாங்க. அவங்க என்பாட்டை குயிலின் பாட்டுன்னு சொல்லியிருக்கிறாங்க..”
“ஆனால்.. நான் அதைச் சொல்லணுமே…”
“நான் உங்க பாராட்டைக் கேட்கவில்லையே…”
அவள் மூன்றாவது குடத்து நீரை பிள்ளையார் சிலையின் மேல் ஊற்றி நீராட்டலை முடித்தாள். அவள் பூப்பறிக்க இறங்குகையில்.. அவன் கையிலிருந்த மலர்களை அவளிடம் நீட்டினான். அவள் அதை வாங்காமல்.. அவனைப் பார்த்தாள்.
“உங்களை யார்.. பூப்பறிக்கச் சொன்னது..?”
“ராமர் பாலம் கட்டும்போது… அணில் உதவி செய்ததாம்…”
“இதை ஏன்.. இப்போது சொல்கிறீங்க…?”
“நீங்க செய்யும் இந்தத் திருத்தொண்டில்.. என் சிறுதொண்டும் கலந்திருக்கட்டுமேன்னுதான்…”
அவன் பதவிசாக பூவை நீட்டினான். அவனது கண்கள்.. குறும்பில் நீந்திக் கொண்டிருந்தன.
அவனது துறுதுறுப்பு அவளைக் கவர்ந்தது. அவள் புன்னகையுடன்… பூக்களை வாங்கி.. பிள்ளையாரை அலங்கரித்தாள். விளக்கேற்றிவிட்டு குடத்தை எடுக்கத் திரும்பியவள் திகைத்து நின்றாள்.
குடத்தை மித்ரன் கைப்பற்றியிருந்தான்.
“ஏன்.. என் குடத்தை எடுத்தீங்க..?” காயத்ரி.. அவன் அமர்ந்திருந்த படித்துறையின் பக்கவாட்டுச் சுவரின் அருகே சென்றாள்.
“குயில் பாட்டு எப்படியிருக்குன்னு தெரியாமல்.. நான் இந்தக் குடத்தைத் தரமாட்டேன்..” அவன் பிடிவாதம் பிடித்தான்.
“தயவு செய்து என் குடத்தைக் கொடுத்துடுங்க…”
அவன் அவளைப் போலவே பேசிக் காட்டவும்.. அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“சிரிக்கச் சொல்லாமலேயே.. சிரிக்க மட்டும் தெரிகிறது. பாடச் சொன்னால் பாடத் தெரியாதா..? இல்லை.. குயில் பாட்டுன்னு அள்ளி விட்டதெல்லாம் புருடாவா…?”
“புருடாவா…” அவள் ரோசத்துடன் நிமிர்ந்தாள். படித்துறையின் மேல்படியில் அமர்ந்தவள்.. தன் நீண்ட பின்னலை.. முன்னால் எடுத்து விட்டுக் கொண்டாள். பின்னலை நீவியபடி பாட ஆரம்பித்தாள்.
“கண்ணன்.. மனநிலையை.. தங்கமே தங்கம்.
கண்டுவர வேணுமடி.. தங்கமே தங்கம்..
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம்…
பின்னர்.. ஏதேனும் செய்குவோமடி தங்கமே தங்கம்..”
மித்ரன் உண்மையிலேயே அயர்ந்து விட்டான். அவள் குரல்.. இத்தனை இனிமையாக இருக்குமென்று அவனுக்குத் தெரியாது..
‘குயில் பாட்டுன்னு.. இந்தப் பாட்டை ஏன் சொல்ல மாட்டாங்க…’
“ஆற்றங்கரையருகே.. அன்று ஒரு நாள்…
என்னை அணைத்து பல கதைகள்..
பேசியதெல்லாம்…
தூற்றி நகர் முரசு.. சாற்றுவேனென்றே..
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்..”
அவள் விழி மூடியிருந்தாள். ஆற்றங்கரை அருகில் அமர்ந்து அவள் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த மித்ரனுக்கு.. அவளை அணைக்கும் ஆசை.. மனதில் தோன்றியது..
“நேரம் முழுதும்… அப்பாவிதனையே…
நெஞ்சம்.. நினைத்து உருகுதடி..
தங்கமே.. தங்கம்…
தீர.. ஒருசொல்.. இன்று கேட்டு வந்திட்டால்..
அந்த தெய்வம் இருக்குதடி…
தங்கமே.. தங்கம்..”
காயத்ரி.. மித்ரனை நினைத்துத்தான் உருகிப் பாடிக் கொண்டிருந்தாள் என்பது. மித்ரனுக்குத் தெரியாது.. முதல்நாள் இரவு முழுவதும்.. அவள் தன்னை எண்ணி.. ரகசியக் கனவு கண்டு கொண்டிருந்த செய்தி அறியாதவனாய்.. அவன்.. அவளது குரலினிமையால் வசீகரிக்கப்பட்டு கிறங்கிப் போய் அமர்ந்திருந்தான்.
“சொன்ன மொழி தவறு.. மன்னவனுக்கே..
எங்கும்.. தோழமை இல்லையடி…
தங்கமே.. தங்கம்..
என்ன தவறுகளிங்கே கண்டிருக்கிறான்..
அவையாவும்.. தெளிவு பெறக் கேட்டு விடடி..”
உண்மையிலேயே.. தோழியொருத்தியிடம் காதலனுக்கு தூது சொல்லி விடும் பாவனையில்.. முகம்.. அபிநயிக்க.. கண்களை மூடி பாரதியின் கண்ணம்மாவாக.. அவரது பாடல் வரிகளை ரசித்துப் பாடிக் கொண்டிருந்தாள் காயத்ரி..
Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.