Chapter 22
ஏரிக்கரை பிள்ளையாருக்கு நீர் ஊற்றி அபிசேகம் செய்து கொண்டிருந்தாள் கீதா.. அவளது மனம் ரணமாக இருந்தது.. அரசபட்டினத்தின் திருவிழாவுக்காக வந்திருந்த கீதாவின் சித்தி மகள் கமலா சலசலத்துக் கொண்டிருந்தாள்.. எப்போதும் அவளுடன் வாயடிக்கும் கீதா தனக்குள் மறுகியபடி பதில் பேசாமல் கடமையே கண்ணாக இருந்ததில் ஆச்சரியமாகி கீதாவை விசித்திரமாக பார்த்து வைத்தாள்..
“நானே.. நானா..? யாரோதானான்னு.. ஒரு பாட்டு இருக்குது..” கீதாவின் வாயைக் கிளறினாள்..
“அதுக்கென்னடி இப்ப..” மௌனத்தைக் கலைத்து வெடு வெடுத்து வைத்தாள் கீதா..
“உன்னைப் பார்க்கிறப்ப இதுவும் நீதானா..? வேற யாரோதானான்னு பாட்டுப் பாடத் தோணுது..”
“தோணும்.. தோணும்..”
சலித்துக் கொண்ட கீதா ஏரிக்கரையின் சரிவில் இறங்கி ஏரித் தண்ணீரை குடத்தில் நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டு கரையேறி வந்தாள்.. அரச மரத்தடியில் சட்டமாக உட்கார்ந்திருந்த பிள்ளையார் ஆனந்தமாக அவளது குடத்து நீரில் நீராடினார்.. புது வஸ்திரம் உடுத்தி.. சந்தன, குங்குமம், திருநீறுடன் பூக்களைச் சூடி சர்வாலங்கார பூஷிதராய் இருந்தவரின் முன்னால் இருந்த கல் தீபத்தில் எண்ணை ஊற்றி விளக்கேற்றி கும்பிட்டாள் கீதா.. முணுமுணுத்த அவளது வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் மந்திரங்களோ என்று காதைத் தீட்டிக் கொண்டு கவனித்தாள் கமலா.. காதில் விழுந்த வார்த்தைகளில் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.
“உனக்கென்ன பிள்ளையாரப்பா.. தினமும் குளிப்பாட்டி அலங்கரிச்சு விட நானிருக்கேன்.. நீயும் ஜம்முன்னு ரெடியாகி ஏரிக்கரைக்கு வர்ற பொண்ணுகள்ல உங்கம்மா பார்வதி போல எவ இருக்கான்னு தேடி சைட்டடிச்சுக்குட்டு உக்காந்திருக்க.. இந்தப் பார்வதி பெத்த மகளைப் பத்தி நீயேன் நினைக்கப் போற..?”
“அடிப்பாவி..! இப்படியாடி சாமி கும்பிடுவ.. பிள்ளையாரு சைட்டடிக்கிறாரா..? உருப்படுவியா நீ..”
பொங்கின கமலாவை ‘யார் நீ..’ என்பதைப் போல பட்டுக் கொள்ளாமல் பார்த்து விட்டு குங்குமத்தையும், திருநீறையும் நெற்றியில் இட்டுக் கொண்டு குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்தபடி நடையைக் கட்டினாள் கீதா..
“என்னடி இப்படி யாரோ போல பார்த்துட்டுப் போற..?”
அரண்டு போன கமலா பூஜைக் கூடையைக் கையில் எடுத்துக் கொண்டு..
“போயிட்டு வரேன் பிள்ளையாரப்பா..” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு கீதாவை பின் தொடர்ந்து ஓடினாள்..
வேகுவேகு என்று பித்துப் பிடித்தவளைப் போல விரைந்து கொண்டிருந்த கீதாவின் நடை தளர்ந்தது.. அவளது பார்வை கூர்மையானது.. அங்கே மரத்தடியில் சாய்ந்து நின்று பாடிக் கொண்டிருப்பது யார்..? ஆனந்தனா..?
உற்றுப் பார்த்ததில் அது ஆனந்தன்தான் என்று ஊர்ஜிதமானது.. கூடவே ஒட்டுப்புல்லைப் போல ஒட்டிக் கொண்டிருக்கும் அன்பழகனும் இருந்தான்.. மரத்தின் வேரில் கால் நீட்டி உட்கார்ந்து ஆனந்தன் பாடுவதை இரக்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான்..
‘இப்படி இந்த அன்ப பாவமா பார்க்கிறாப்புல என்னத்தை இவன் பாடித் தொலைக்கிறான்..’
கமலாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு பக்கத்து மரத்தின் மறைவில் பதுங்கினாள் கீதா.. எதையோ கேட்கப் போன கமலாவை பார்த்து வாயில் ஆள் காட்டி விரலை வைத்து..
“உஷ்..” என்று எச்சரித்தாள்..
“ஓடும் மேகங்களே..!
ஒரு சொல் கேளிரோ..
ஆடும் மனதினிலே..
ஆறுதல் தாரீரோ..”
ஆனந்தனின் கண்ணில் குரலில் கண்கலங்கி விட்டாள் கீதா.. பெரியம்மாவின் மகளை வினோதமாக பார்த்தாலும் ஆனந்தனின் பாடலின் சோகத்தில் தாக்கப் பட்டவளாக மௌனமானாள் கமலா..
“நாடாளும் வண்ண மயில்
காவியத்தில் நான் தலைவன்..!
நாட்டிலுள்ள அடிமைகளில்
ஆயிரத்தில் நான் ஒருவன்..!
மாளிகையில் அவள் வீடு..!
மரக்கிளையில் என் கூடு..!
வாடுவதே என் பாடு..
இதில் நான் அந்தமான்
நெஞ்சை நாடுவதெங்கே கூடும்..?”
கரகரவென கண்ணீர் விட ஆரம்பித்த கீதாவை திகைப்புடன் பார்த்தாள் கமலா.. அந்த பாடலின் ஜீவன் கீதாவுக்கானது என்பதை அவளது இளம் மனம் உணர்ந்து கொண்டது..
“ஊரெல்லாம் தூங்கையிலே..
விழித்திருக்கும் என் இரவு..!
உலகமெல்லாம் சிரிக்கையிலே..
அழுதிருக்கும் இந்த நிலவு..!
பாதையிலே வெகுதூரம்
பயணம் போகும் நேரம்
காதலை யார் மனம் நாடும்..?
இதல் நான் அந்தமான்
நெஞ்சை நாடுவதெங்கே கூடும்..?”
பாடலை நிறுத்திய ஆனந்தன் கைலியை மடித்துக் கட்டியபடி நடந்து விட்டான்.. பெருமூச்சுடன் எழுந்து நின்று கைலியில் படிந்திருந்த தூசியைத் தட்டி விட்டு சைக்கிளை நகர்த்தப் போன அன்பழகன்..
“பாட்டுக் கச்சேரி முடிஞ்சுருச்சு போல..” என்றபடி மரத்தின் மறைவிலிருந்து வெளிப்பட்ட கீதாவைப் பார்த்ததும்..
“அந்தக் கோராமையை ஏம்மா கேக்கறிங்க..? எப்பப் பார்த்தாலும் இந்தப் பாட்டைப் பாடிக்கிட்டே திரியறார்ம்மா.. இதை விட்டா யார் அந்த நிலவு.. ஏன் இந்தக் கனவுன்னு பாட ஆரம்பிச்சுடறாரு..” என்று ஆதங்கப்பட்டபடி நின்று விட்டான்..
“பாருப்பா.. அரசபட்டினத்துக்கு வந்த வாழ்வை.. புதுப்பாடகர் கிடைச்சிட்டார்.. ம்ம்ம்.. நமக்கு என்ன குறை அன்பு..?”
சிவந்திருந்த கீதாவின் விழிகளை ஆழ்ந்து பார்த்தான் அன்பழகன்.. அவளது மனதின் குருதி கண்களில் வடிவதைப் போல இருந்தது அவனுக்கு.. இரு மனங்கள் தவிக்கும் தவிப்பை அவனால் தாங்க முடியவில்லை..
“அந்த வாத்தி கெட்டிக்காரன்ம்மா.. எதை வைச்சு மடக்கனுமோ அதை வைச்சு மடக்கிட்டான்..” பொருமினான்..
“ம்ப்ச்.. என் விதி அன்பு.. வேற என்னத்தைச் சொல்ல.. விதி வலியதுன்னுதான் சொல்ல முடியும்..”
“வாழற வாழ்க்கையில நல்லவனா மட்டும் இருக்கக் கூடாதும்மா.. ஒரே சமயத்தில நூறுபேரை பந்தாடறவருதான் ஆனந்தன் சார்.. அவரையே ஒரு வாக்குறுதியில கட்டிப் போட்டுட்டான்னா இந்தக் காலக் கொடுமைய எங்கே போய் சொல்றது..?”
“அதைச் சொல்லு..”
“என்னவோ வாத்தியோட அம்மா வழிப் பாட்டி மேலே உங்கப்பாவுக்கு பாசமாம்.. சாகக்கிடக்கிறப்ப அந்த பாட்டி பண்ணையாருகிட்ட சத்தியம் கேட்டுச்சாம்..”
“என்னன்னு..?”
“உங்களை சுகுமாறன் வாத்தியாருக்கு கட்டிக் கொடுக்கனும்ன்னு..”
“இது என்ன புதுக்கதை.. அன்பு..?”
“இந்தக் கதையைச் சொல்லித்தான் ஆனந்தன் சாரோட மனசை கரைச்சிருக்கான் அந்த சுகுமாறன்.. அந்த சத்தியத்தைக் காப்பாத்தத்தான் சாரு பெட்டி படுக்கையோட அரச பட்டினத்துக்கு வந்து இறங்கியிருக்காராம்.. அது நிறைவேறுகிறது ஆனந்தன் சாரோட கையிலதான் இருக்குன்னு முதலைக் கண்ணீர் விட்டா இந்த மனுசன் பாவம் என்ன பண்ணுவார்..? இப்படித்தான் பித்துப் பிடிச்சுப் போய் ஏரிக்கரை மேலே பாட்டுப் பாடிக்கிட்டே அலைவார்..”
அன்பழகன் சைக்கிளை உருட்டியபடி போய் விட்டான்.. கீதா பதுமைபோல யோசனையுடன் நடந்து கொண்டிருந்தாள்.. அவள் முகத்தையே பார்த்த கமலா..
“சுகுமாறன் உன்மேல ஆசைப்படறாரா..?” என்று பொறாமையுடன் கேட்டு வைத்தாள்..
அவளது பொறாமையை புரிந்து கொண்ட கீதாவுக்கு ஆச்சரியமாகி விட்டது.. கமலாவுடன் விளையாடிப் பார்க்க ஆசை கொண்டாள்..
“ஆமாம்.. என்மேல அவருக்கு ஆசைதான்.. அதுக்கு என்னாங்கிற..?”
“உனக்கும் அவர்மேல ஆசையா..?”
“ஆமான்னுதான் வைச்சுக்கயேன்..”
“ஊமை போல இருந்துக்கிட்டு கவண்ட்மென்ட் பள்ளிக் கூடத்தில வேலை பாக்கிற வாத்தியாரைக் கட்டிக்கப் போகிற.. உங்கப்பாவைப் போல எங்கப்பாவும் ஊர் பண்ணையார்தான்.. சொத்து சுகம் இருக்கிறவர்தான்.. நானும் அழகிதான்.. இருந்து என்ன பண்ண..? இப்படியாப்பட்ட மாப்பிள்ளையை வளைச்சுப் போட முடியலையே..”
“இந்த மாப்பிள்ளை கிடைக்கலேன்னா என்ன.. இப்ப பாட்டுப் பாடிக் கிட்டுப் போனவரும் கவர்ண்மெண்ட் வேலை பார்க்கிறவருதான்.. அதிலும் சென்ட்ரல் கவர்ண்மெண்டு.. அவரை வளைச்சுப் போடு..”
“அய்யே..! யாருக்கு வேணும் போஸ்ட் ஆபிசில வேலை பார்க்கிற மாப்பிள்ளை..? இருபத்தி நாலு மணி நேரமும் ஆபிசே கதின்னு கிடக்கனும்.. வருசத்துக்கு எட்டு நாள்தான் கேசுவல் லீவு.. சனிக்கிழமையும் ஆபிஸ்.. இழுத்துக்கிட்டுக் கிடந்தாக்கூட மெடிகல் லீவில அனுப்ப மாட்டாங்க.. அதுவே வாத்தியார் வேலைன்னு வைய்யி.. மணியடிச்சதும் வீட்டைப் பார்த்து ஓடி வந்திரலாம்.. சனிக்கிழமை லீவு.. கால்பரிட்சை,
அரைப் பரிட்சைன்னு லீவு, முழுப்பரிட்சைக்கு முழுசா ஒரு மாசம் லீவு.. இதுபோக கேசுவல் லீவு கவர்ண்ட்மெண்ட் லீவு.. மெடிகல் லீவு.. ஈஎல் லீவுன்னு எம்புட்டு லீவு தெரியுமா..? எனக்கு போஸ்ட் ஆபிஸ்ல வேலை பார்க்கிற மாப்பிள்ளை வேணாம்.. வாத்தியார் மாப்பிள்ளைதான் வேணும்..”
கமலா விவரித்த தினுசில் அடிப்பாவி என்று முகவாயில் கையை வைத்துத் தன் கவலையை மறந்து நின்று விட்டாள் கீதா..
Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.