Chapter 30
உன்பாத ஒலியை வைத்து..
உன் வரவை நான் கணிப்பேன்..
என் விழியின் ஒளிர்வைக் கண்டும்..
ஏன்.. நீயும் விலகிப் போனாய்..?
காதலாகி.. கசிந்துருகி..
குடும்ப சபை கூடியிருந்தது.. இரு வீட்டாரும் எதிரும்.. புதிருமாக அமர்ந்து கொள்ள நிச்சயதார்த்த பத்திரிக்கை வாசிக்கப்பட்டது.. தாம்பூலத் தட்டுக்கள் மாற்றிக் கொள்ளப்பட்டன.. மணமகனின் வீட்டினர் எடுத்துக் கொண்டு வந்திருந்த பட்டுச் சேலையை உடுத்தி.. கவிதா சபையில் வந்து வணங்கி எழுந்தாள்.. நிச்சயதார்த்தம் நல்ல முறையில் நடந்து முடிந்துவிட்ட நிம்மதியோடு ரேணுகா மகளை அழைத்துக் கொண்டு செல்ல மாப்பிள்ளை வீட்டார் விருந்து சாப்பிட சென்றார்கள்..
சந்தியா ஏனோ மனதிற்குள் தனிமையாக உணர்ந்தாள்.. வீட்டின் முன்பக்கம் இருந்த பூச்செடிகளின் மறைவில் இருளோடு இருளாய் கலந்து நின்று சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..
சந்தியாவைக் காணாததால் ஜீவா கூட்டத்தின் மத்தியிலிருந்து நழுவி அவளைத் தேடினான்.. மொட்டை மாடியில் விருந்து நடந்து கொண்டிருந்தது.. கவிதாவைச் சுற்றி அவளுடைய உறவினர்கள் அமர்ந்திருந்தனர்.. குமாரும்.. அவனுடைய தந்தையும் மாப்பிள்ளை வீட்டாருக்கு விருந்து கொடுப்பதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. கீழே ஹாலிலும் மற்ற அறைகளிலும்.. விருந்தினர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனார்..
‘சந்தியா எங்கே போனாள்..?’
ஜீவாவின் பார்வை அவளை எல்லா இடங்களிலும் துழாவி ஏமாந்து.. அவன் வீட்டின் முன்புறம் வந்தான்.. இருள் சூழ்ந்து அவ்வேளையில் அங்கே யாரும் இல்லை..
‘இங்கேயும் அவளைக் காணோமே..’
யோசனையுடன் வீட்டுக்குள் திரும்பப் போனவன் வீட்டின் முன்புற பூச்செடியின் மறைவில் நிழலோவியமாய் அவள் இருளில் மறைந்து நிற்பதைக் கவனித்து விட்டான்.
சத்தமில்லாமல் அவளை நெருங்கினான்.. அவளது பூ வாசம் அவனை ஈர்க்க.. மாலையில் உள்ளறையில் அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் நறுமணத்தை நுகர்ந்ததை நினைத்தவனின் நெஞ்சம் மீண்டும் அவளது கூந்தலின் பூவை முகர விழைந்தது..
‘ஆனால்..’ அவன் முகம் இறுகியது..
மாடியில் அவன் இதழ் பதித்த போது மயங்கி நின்றவள் மாலையில் அவன் பூவாசம் பிடித்த போது விலக முயலாமல் அவன் மனதிற்கு நம்பிக்கை அளித்தவள்.. சற்று நேரத்திற்கு முன் முகத்தில் கடுமை காட்டியது அவன் நினைவில் ஆடியது..
சந்தியாவுக்கு விருப்பமில்லாத எதையும் அவள் மேல் வலுக்கட்டாயமாக திணிக்கக் கூடாது என்பது ஜீவாவின் எண்ணம்..
அவளாக பூட்டிக் கொண்டிருக்கும் பொன் விலங்கை என்று அவள் உடைத்துக் கொண்டு வெளியே வருகிறாளோ.. அன்று அவளைத் தொட்டு ஆண்டால் போதும் என்பதுதான் ஜீவாவின் தீர்மானம்..
அந்த பொன்விலங்கை உடைத்தெறிய அவளுக்குள் ஒரு உத்வேகம் பிறக்க வேண்டாமா..?
அதற்காகத்தான் ஜீவா அவளைத் தழுவி விலகினான்.. அவளுடைய பிடிவாதத்தை தகர்க்க இதுதான் சிறந்த வழிமுறை என்று அவன் மனதிற்குப் பட்டது.
குமாருக்கு ஜீவா மட்டும் நண்பனில்லை.. இன்னும் பலர் நண்பர்களாக இருந்தனர்.. அவர்களுடன் எல்லாம் சந்தியா மனம் விட்டுப் பேசியது இல்லை..
ஜீவாவிடம் மட்டும் ஏன் பேசினாள்..? ஏதோ ஒரு வகையில் அவனை நெருக்கமாக அவள் மனம் நினைத்ததால் தானே.. அவள் அவனிடம் பேசினாள்..?
ஜீவா காதலைச் சொன்னதை குமாரிடமும் கவிதாவிடமும் சந்தியா சொல்லவில்லை..
ஏன் அவள் அதைச் செய்யவில்லை..? இது தனக்கும் ஜீவாவிற்கும் இடையில் நடக்கும் தனிப்பட்ட போராட்டம் என்று அவள் நினைத்தாள்..?
அவர்கள் இருவரையும் விட ஜீவாவிற்கு அவளுக்கு தனிப்பட்ட அன்பு இருந்ததால்தானே அப்படி நினைத்தாள்.
பொதுவாக கணவனும் மனைவியும் தங்களுக்குள் நடக்கும் அந்தரங்கச் சண்டைகளை.. மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்..
‘எது நடந்தாலும்.. நாலு சுவருக்குள்தான்..’ என்பது அவர்கள் கடைபிடிக்கும் வழக்கம்..
அதைப் போலவே கணவன் மனைவி தகராறில் மற்றவர்கள் தலை கொடுக்க மாட்டார்கள்..
‘இது புருசன் பெண்டாட்டி சண்டைப்பா..’ என்பது உலகத்தில் சொல்லப்படும் இயல்பான வார்த்தைகள்..
சந்தியாவம் தன்னையறியாமல் அதையே கடைபிடித்தாள் என்பதுதான் ஜீவாவின் மனதிற்கு நம்பிக்கையூட்டியது..
என்ன ஒன்று அதை சந்தியா புரிந்து கொள்ளாமல் செய்து கொண்டிருந்தாள்.. அதை அவளுக்கு புரிய வைக்கத்தான்.. ஜீவா அவளைத் தொட்டுத் தழுவி இதழோடு இதழ் பதித்தான்.. அவளை அணைத்து கூந்தலின் வாசம்பிடித்தான்..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.