Chapter 35
நேசமுள்ள என் மனதை..
நீதிரும்பி பார்த்து விட்டால்..
வான் குயிலாய் நான் மாறி..
வான் மீது பறந்திடுவேன்..
காதலாகி.. கசிந்துருகி..
சந்தியாவிற்கு ஜீவாவின் மனநிலை புரிந்தது.. ஏறக்குறைய அவளும் அதே மனநிலையில் தான் இருந்தாள்..
“போய் வரவா..”
“ம்ம்ம்..”
“உனக்குச் சந்தோசமாய் இருக்குமே..”
“அப்படி நான் சொன்னேனா..?”
“வாய்விட்டுச் சொன்னால்தானா..?”
“நான் என்னதான் செய்யட்டும் ஜீவா..?”
“என் கூட வந்து விடு..”
“எங்கே..?”
“எங்கேயாவது போவோம்.. முடிவில்லாமல் இந்த உலகைச் சுற்றி வருவோம்..”
“சரிதான்…”
“என்ன சொல்கிறாய்.. வருகிறாயா..?”
“வருகிறேன்..”
“அப்போ என் வண்டியில் ஏறு..”
“முறைப்படி நீங்க என் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுங்க.. நீங்க எங்கே கூப்பிட்டாலும் உங்கள் பின்னாலேயே கேள்வியே கேட்காமல் ஆட்டுக்குட்டி போல தொடர்ந்து வருகிறேன்..”
“சந்தியா..”
“நாளைக்குச் சந்திக்கலாம்..”
“எங்கே காத்திருக்க..”
“கன்யாகுமரி அம்மனின் கோயில்பக்கத்தில் காத்திருங்க..”
சந்தியா ஹாஸ்டலுக்குள் சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு ஒரு பெருமூச்சுடன் வண்டியைக் கிளப்பினான் ஜீவா..
அவனது வண்டி தெரு முனையில் சென்று திரும்பும் வரை பார்த்தவாறு ஜன்னல் கம்பிகளில் முகம் பதித்து நின்றிருந்தாள் காயத்ரி.. சந்தியாவின் அறைத் தோழி..
“என்ன காயத்ரி ஜன்னலில் என்ன வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க..?” என்று வினவியவாறு அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் சந்தியா..
“வேடிக்கைதான்.. கண்ணதாசன் பாடியிருப்பார்..
நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ..
நெஞ்சில் நினைத்ததிலே..
நடந்ததுதான் எத்தனையோ..
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ..
கொண்ட குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ..”
காயத்ரி வெறுமையான குரலில் பாடிக்காட்ட சந்தியா அவளை விசித்திரமாகப் பார்த்தாள்.. அருகில் வந்து காயத்ரியின் நெற்றியில் கை வைத்தாள்..
“என்னடி.. உடம்பு சரியில்லையா..?”
“ஏன்..? நான் நன்றாகத்தான் இருக்கிறேன்..”
“பாட்டெல்லாம் பாடுகிற.. நீ இப்படியெல்லாம் பண்ண மாட்டாயே..”
“எல்லாருமே ஒருநாள் போலவே.. அடுத்த நாளும் இருக்கிறார்களா என்ன..? தினத்துக்கு ஒரு வேசம் தினத்துக்கு ஒரு கொள்கைன்னு இல்லையா..? என்னை மட்டும் ஏன் கேள்வி கேட்கிற..?”
“என்ன காயத்ரி இப்படி வெடுக்குன்னு பேசறே.. இப்ப நான் தப்பா என்ன கேட்டு விட்டேன்.. எப்போதும் இல்லாமல் இன்றைக்குன்னு பாட்டுப் பாடுகிறாயேன்னு கேட்டேன்.. அது ஒரு குத்தமாடி..”
“ஆமாம்.. குத்தம்தான்.. எனக்கு அந்தப் பாட்டு பிடித்திருக்கு.. பாடுகிறேன்.. உனக்கு இஷ்டம்ன்னா கேளு.. கஷ்டம்ன்னா.. காதை மூடிக்க..”
காயத்ரி கோபத்துடன் தொடர்ந்து பாட ஆரம்பித்தாள்.
“சுரை விதைத்த நிலத்தில்
வேறு செடி முளைத்தது..
காதல் கதை நடக்க..
பாதியிலே திரை விழுந்தது..
இதற்கிதுதான் என்று முன்னே..
யார் நினைத்தது..
பழி இங்குவந்து முடியுமென்றால்
யார் தடுப்பது..”
சந்தியாவிற்கு.. காயத்ரியின் பாடலில் இவ்வளவு சோகம் ஏன் வருகிறது என்று புரியவில்லை..
அவளறிந்த காயத்ரி சிரித்துக் கொண்டே இருப்பாள்.. சந்தியாவிடம் உண்மையான தோழமையை காண்பிப்பாள்..
இன்று காயத்ரி காட்டும் விரோதத்திற்கும்.. சோகத்திற்கும் காரணம் சந்தியாவிற்கு விளங்கவில்லை.. விளங்கினால், சந்தியா அதைத் தாங்கிக் கொள்ள மாட்டாள்..
அது.. அந்தக் காரணம்.. ஜீவா..!
காயத்ரி ஜீவாவை மானசீகமாக காதலித்தாள் என்பது சந்தியாவிற்குத் தெரியாது.. ஒருதலைக் காதலில் அவள் இருந்த போது சந்தியா ஜீவாவை கை விட்டாள்.. தனக்கு ஜீவா கிடைத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது என்று காயத்ரி மகிழும் போது.. சந்தியா.. ஜீவாவுடன் ஒன்று சேர்ந்து விட்டாள்..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.