Chapter 13
வினய்..!
கோதுமை மாவைப் பிசைந்தது போல் நிறம்.. ஆறடி உயரம்.. அளவான உடல்வாகு.. நிமிர்ந்த நடை.. மாடலிங் ஆணைப் போன்ற கவர்ச்சிகரமான தோற்றம்.. சென்னையில் வெற்றிகரமாக இயங்கும் பெரிய ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் இளம் முதலாளி.. வெளிநாட்டுப் படிப்பு, தாய், தந்தைக்கு ஒரே மகன்.. பெற்றவர்கள் மகனுக்கு மேல் தட்டில் பெண் தேட அவனது எதிர்பார்ப்போ இந்திய.. தமிழ்நாட்டுப் பெண்ணின் வாய்ப்படமாய் ஒரு அழகியை மணக்கும் கனவில் மிதந்தது..
முக்கியமான தகவல் எதுவென்றால் இந்த வினய், மேனகாவுடன் லண்டனில் சேர்ந்து படித்தவன்.. அதைவிட முக்கியம் அவன், மைதிலியின் இனத்தைச் சேர்ந்தவன்..
மேனகா புத்திசாலி.. வெறும் புத்திசாலியல்ல.. மிக மிக புத்திசாலி.. மைதிலியைப் பற்றி நந்தகுமாரன் கூறிய அடுத்த கணம் திருச்சியில் உள்ள மிகப்பெரிய டிடெக்டிவ் ஏஜன்ஸியை தொடர்பு கொண்டு மைதிலியைப் பற்றிய விவரங்கள் வேண்டுமென்றாள்.. அடுத்த நாளே மைதிலியின் ஜாதகம் முதல் குடும்பத்தினர் அனைவரின் குணாதிசயம் வரை ஒரு பைல் வடிவெடுத்து அவள் கைக்கு வந்துவிட்டது..
அந்தப் பைலை அலசி ஆராய்ந்ததில் மேனகா நிறையவே அறிந்தாள்.. பணப் பிரச்னையால் மைதிலியின் திருமணம் தேங்கி நிற்பது முதல் வைத்தீஸ்வரனின் ஜாதிப்பற்று வரை அந்தக் குடும்பத்தின் ஆணிவேரை நாடி பிடித்து விட்டாள்..
மைதிலி தன் காதலைப் பற்றிக் குடும்பத்தில் வாய் திறக்காததற்குக் காரணம் தன் குடும்பத்தினர் ஜாதி விட்டு ஜாதி கலப்பு மணம் புரிவதை விரும்ப மாட்டார்கள் என்பதால்தான்.. பணம் மட்டும் இருந்திருந்தால் மைதிலிக்கு அவள் குடும்பத்தில் எப்போதோ மணம் முடித்து அனுப்பியிருப்பார்கள் என்பதை உணர்ந்ததும் மேனகாவின் மனம் சிறகடித்தது..
வினய் லண்டனில் படித்திருந்தாலும் சுத்த தமிழ் நாட்டுப் பெண்ணை மணக்க விரும்பியதற்கு அவன் வெளிநாட்டில் தங்கிப் படித்ததே முக்கிய காரணமாக ஆனது.. தன் மனம் போன போக்கில் வாழும் பெண்களைக் கண்டவனுக்கு தன் தாய்நாட்டு பெண்கள் மீது அளவற்ற மரியாதை ஏற்பட்டுவிட்டது.. இந்தியா திரும்பியதும் அவன் திருமணத்திற்காக பெற்றோர் காட்டிய பெண்கள் எல்லோருமே அமெரிக்கப் பெண்களைத் தூக்கிச் சாப்பிடுவார்களாய் இருக்க.. அவன் திருமணமே இப்போது வேண்டாம் என்று வீட்டில் சொல்லி விட்டான்.. அவன் பெற்றோர் நொந்து போய் அவனை எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் மணந்து கொள்.. நாங்கள் தலையிட மாட்டோம்.. காலா காலத்தில் ஓர் மருமகளை மட்டும் கண்ணில் காட்டிவிடு, என்று விண்ணப்பித்ததோடு ஒதுங்கிக் கொண்டார்கள்.. அந்த வினய்யின் நினைவு மேனகாவின் நெஞ்சில் உதித்தது.. மனதிற்குள் சில கூட்டல் கழித்தல்களைப் போட்டாள்.. விடை மிகத் தெளிவாக வந்தது.. விளைவு அன்று காலை விடிந்தபோது மேனகாவின் முகத்தில் வெளிச்சம் பரவியிருந்தது.
காலை காபியை உறிஞ்சியவாறு மாடி வராண்டாவில் மாட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் ஆடியவாறு பேப்பர் படித்துக் கொண்டிருந்தான் நந்தகுமாரன்.. எதிரே மகனுக்கு காபி கொண்டு வந்திருந்த சோலையம்மாள் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.. துரைசிங்கம் மனைவியுடன் சமாதானம் ஆனது போல் மகனுடன் சமாதானம் ஏற்படாதா என்ற நப்பாசையுடன் வராண்டாவில் நின்று கொண்டு கீழே மிளகாயைக் காய வைப்பதை மேலே நின்று கொண்டு மேற்பார்வை இடுவது போல் பாவ்லா காட்டிக் கொண்டிருந்தார்.. மேனகா வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன் அங்கே வந்தாள்..
“குட்மார்னிங் அங்கிள்..”
“வாம்மா.. நல்லாத் தூங்கினியா..?” என்று விசாரித்த துரைசிங்கம் மனைவி அனல் பார்வை பார்ப்பதையும் மகன் பேப்பரின் மேலாக விழியுயர்த்தி முறைப்பதையும் கவனித்து மேலே பேச முடியாமல் தவித்தார்.
“ஒரு குட் நியூஸ் அங்கிள்..” என்றாள் மேனகா..
“யாருக்கு..?” என்றான் நந்தகுமாரன் இடக்காக..
“ஏன்..? உங்களுக்குத்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்..”
“அப்படியா.. நீ ஊரை விட்டு போகப்போகிறாயா என்ன..?”
“அட எப்படி குமார் கரெக்டா கண்டுபிடிச்சீங்க.. அதுதான் மேட்டர்.. அங்கிள்.. நான் சென்னைக்குத் திரும்பிப் போகப் போகிறேன்..”
துரைசிங்கம் பதறிப் போனார்.. அவள் கிளம்புவதால் ஜமீன் வீட்டு சம்பந்தம் கை நழுவிப் போகிறது என்பதால் அல்ல.. மனைவியை மதிக்காதவள் சக்ரவர்த்தியின் மகளாய் இருந்தாலும் வேண்டாமென்ற முடிவுக்கு முதல் நாளே வந்து விட்டார்.. ஆனால் ஊர் சுற்றிப் பார்க்கவென்று வந்த பெண் மனம் நொந்து திரும்பிப் போகக் கூடாதென்று அவர் நினைத்தார்.. அத்தோடு இப்போது மேனகா இருக்கும் மனநிலை மாறி சிரித்த முகமாய் திரும்பிப் போவதைத் தான் அவர் விரும்பினார்.. ஆயிரம்தான் இருந்தாலும் அடுத்தவர் வீட்டுக்கு பெண்ணை அனுப்ப சாதாரண மக்களே யோசிப்பார்கள்.. பரம்பரை கோடீஸ்வரர் தன் மகளை துரைசிங்கத்தை நம்பி அவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.. துரைசிங்கமும் கண்ணுக்குள் வைத்துத்தான் அந்தப் பெண்ணை கவனித்துக் கொண்டார்.. ஆனாலும் வெள்ளை வேட்டியில் ஒரு கறுப்புக் கரை பட்டு விட்டதைப் போல் முதல் நாளைய சம்பவம் நடந்து விட்டதே.. விருந்தாளியாக வந்த பெண்ணை சரியாக உபசரிக்காமல் திருப்பி அனுப்பிய குற்றத்திற்கு ஆளாகி விட்டோமே என்றுதான் தவித்துப் போனார்.. அப்போது ஊர் கோவிலில் மணி அடித்தது.. துரைசிங்கம் வழியைக் கண்டு பிடித்து விட்டார்.
“அடடா.. இன்னும் பத்து நாள்களுக்கு நீ ஊருக்குக் கிளம்ப முடியாதேம்மா..”
“ஏன் அங்கிள்..” என்று மேனகா வினவ..
“ஏன்ப்பா.. அவளே ஒரு வழியாய் கிளம்பும் முடிவுக்கு வந்து விட்டாள்ன்னு நான் மகிழ்ந்து போயிருக்கிறேன்.. அம்மா முகத்தைப் பாருங்க.. ஜொலிக்குது.. விட்டால் அவங்க கும்பிடுகிற அம்மனுக்கு பாலாபிஷேகம் பண்ணிருவாங்க போல இருக்கு.. இப்பப் போய் இன்னும் பத்து நாள்களுக்கு துன்பத்தை விலை கொடுத்து வாங்கப் போகிறீர்களே.. இது உங்களுக்கே நல்லாயிருக்கா..”
“சும்மாயிருடா.. உனக்கு எதில்தான் விளையாடணும்னு தெரியாமல் போயிருச்சு.. உங்க அம்மா கும்பிடுகிற அம்மன் தான் இன்னும் பத்து நாளைக்கு அந்தப் பெண்ணை நம்ம கூட்டில் இருக்கச் சொல்லுதுடா..”
“இது என்ன புதுக்கதை..?” நந்தகுமாரன் கேலியாய் வினவ,
“ஏண்டி.. பையன்தான் சாமியில்லைன்னு சொல்லி சாமியாடிக்கிட்டு இருக்கிறவன்.. உனக்குமா மறந்து போச்சு.. இன்னைக்குக் காலையில் அம்மன் கோவில் திருவிழாவுக்கு சாமி சாட்டி காப்பு கட்டியாச்சுங்கறதை மறந்துட்டியா..?” என்றார் துரைசிங்கம்.
“அட ஆமாம்..” சோலையம்மாள் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்..
“கேட்டியாம்மா.. நீ திருவிழா முடிந்துதான் ஊருக்குப் போக முடியும்..” என்றார் துரைசிங்கம் மேனகாவைப் பார்த்து..
“வாட் அங்கிள்.. எனக்கு ஒண்ணும் புரியலை..” என்று மேனகா ஆச்சர்யத்துடன் வினவ, நந்தகுமாரன் பதில் அளித்தான்..
“உனக்கு மட்டுமா புரியலை.. எனக்கும்தான் புரியவில்லை.. கோவிலில் வருசா வருசம் திருவிழா கொண்டாடுவார்கள்.. அதற்கு முடிவு பண்ணி நாள் குறித்து விட்டுக் காப்புக் கட்டுவார்கள்.. அப்படிக் கட்டி விட்டால் ஊருக்குள் இருந்து யாரும் வெளியூருக்குப் போகக் கூடாது..”
“அப்போ நீங்க வேலைக்குப் போக முடியாதா..?”
“அதெல்லாம் வேலைக்குப் போகலாம்.. ஆனால் வெளியே தங்கக் கூடாது.. இரவு தூங்க வீட்டுக்கு வந்துவிட வேண்டும்.. ம்.. இப்படியொரு மூட நம்பிக்கை..”
“வெளியூரில் இருந்தும் யாரும் வரக்கூடாதா..?” என்று மேனகா யோசனையாய் வினவ,
“அப்புறம் விருந்தாளிகள் எப்படி வருவார்களாம்.. வீட்டுக்கு வீடு திருவிழாவிற்கு விருந்தாளிகள் கூட்டம் வந்து குவிந்து விடும்மா.. வெளியூரில் இருந்து யார் வேண்டுமானாலும் வரலாம்.. உள்ளூரில் இருந்துதான் யாரும் போகக் கூடாது..” என்றார் துரைசிங்கம்..
பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்தது போல் மகிழ்ந்து போனாள் மேனகா.. தான் எண்ணியது தடையில்லாமல் நடக்கப் போவதை எண்ணி எண்ணி குதூகலித்தவள் தன்னை அறியாமல்,
“எனக்கு அதுதானே வேண்டும்..” என்று கூறிவிட்டாள்..
“என்னது..?” துரைசிங்கம் விழிக்க, நந்தகுமாரனும், சோலையம்மாளும் சந்தேகத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்..
மேனகா சுதாரித்துக் கொண்டாள்..
“இல்லை அங்கிள்.. என் ரிலேடிவ் ஒருத்தர் கிராமத்து திருவிழாவைப் பார்க்கணும் என்று மிகவும் ஆசைப்பட்டார்.. உங்களுக்கு சிரமமில்லையென்றால் அவரை வரச் சொல்லவா..? நானும் துணையில்லாமல் இந்தப் பக்கத்தை சுற்றிப் பார்க்கவில்லை.. அவர் வந்தால் அவற்றையும் பார்த்துவிட்டு திருவிழா முடிந்ததும் அவர் கூடவே சென்னைக்குப் போய் விடுவேன்..”
துரைசிங்கம் நிம்மதியானார்..
“அதுக்கென்னம்மா.. நம்ம வீட்டுக்கு திருவிழா பார்க்கணும்ன்னு பட்டணத்துக்கார தம்பி வந்தால் எனக்குப் பெருiதானே.. தாராளமா வரட்டும்.. நம்ம வீட்டில் தங்கட்டும்.. என்ன சோலையம்மா.. நான் சொல்றது சரிதானே..”
துரைசிங்கம் மனைவியைப் பார்த்துக் கேட்க வயதுக்கு வந்த பெண்ணை வீட்டில் தங்க வைத்திருக் கிறார்கள் என்ற கெட்ட பெயர் வந்து விட்டதே என்று வருந்திக் கொண்டிருந்தவள் துணையாக ஒரு ஆண் பிள்ளை வருகிறான் என்றதில் சந்தோசம் கொண்டவளாய்.
“நீங்க எப்பத் தப்பாச் சொல்லியிருக்கிறீங்க..” என்றாள் மெச்சுதலாக..
மனைவியின் பாராட்டில் மகிழ்ந்து போன துரைசிங்கம் மகனைப் பார்க்க, ‘இது எப்போதிருந்து..?’ என்பது போல் அவன் மேலும் கீழுமாய் இருவரையும் பார்த்தான்.. பின்னர் ‘எக்கேடோ கெட்டுப் போங்கள்..’ என்பது போல் பேப்பரை போட்டு விட்டுக் குளிக்கக் கிளம்பினான்..
மகன் அலுவலகம் கிளம்புவதற்குள் பலகாரம் ரெடி பண்ண வேண்டும் என்ற பொறுப்புடன் சோலையம்மாள் கீழே சென்று விட துரைசிங்கமும் வயல்வெளிப் பக்கம் கிளம்பிப் போய் விட்டார்..
நந்தகுமாரன் கிளம்பி அறையை விட்டு வெளியே வரும்போது தன் அறை வாசலில் நின்று கொண்டிருந்த மேனகா..
“என்ன குமார்.. நான் திருவிழா முடிந்ததும் ஊருக்குப் போகப் போகிறேன்.. ரொம்ப சந்தோசமாக இருக்குமே..” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு..
“இல்லை கவலையாக இருக்கிறது..”
“வாட்..?”
“நீ அபாயகரமான பெண் மேனகா.. அவ்வளவு சீக்கிரம் என் பாதையை விட்டு விலகிப் போய் விடுவாய் என்று நம்ப நான் தயாரில்லை.. அதுதான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”
“எதைப் பற்றி..?”
“புலி பதுங்குவது எதற்காக என்பதைப் பற்றி..”
நந்தகுமாரன் படி இறங்கிப் போய்விட்டான்… மேனகா தனக்குத்தானே கலகலவென்று நகைத்துக் கொண்டாள்..
‘யு ஆர் வெரி இன்டலிஜென்ட் மேன் குமார்.. என் எதிரியாக உன்னை நினைத்த பின்னும் உன் புத்திசாலித் தனத்தை என்னால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.. புலி பதுங்குவது எதற்கு என்பது நான் பாயும்போது உனக்குத் தெரியும். அப்போது அந்தப் பாய்ச்சல் உனக்கு உண்டாக்கும் மரண வலியில் இருந்து மீள மாட்டாய்.. நீ படும் பாட்டைப் பார்த்து உன்னைப் பெற்ற அந்த சூனியக்காரியும் கதறப் போகிறாள்.. அன்று உனக்கும் அந்தக் கிழவிக்கும் இந்த மேனகா யார் என்று தெரியும்..!’
சென்னையில் வினய் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தான்.. அவன் செல்போன் ஒலித்தது.. ‘மேனகா’ என்ற எழுத்துக்கள் செல்போனில் திரையில் மின்னியது.. போனை துண்டித்தவன்,
‘பிஸினெஸ் மீட்டிங் முடிந்தவுடன் பேசுகிறேன்..’ என்று எஸ்.எம்.எஸ். மூலம் செய்தி அனுப்பினான்.. மீட்டிங் முடிந்தவுடன் தன் அறைக்கு வந்தவன் இன்டர்காம் மூலம் பி.ஏ.வை அழைத்தான்..
“சார்..?”
“ஒரு ஸ்ட்ராங் காபி..”
ஒரே நிமிடத்தில் ஆவி பறக்கும் காபி அவன் டேபிளுக்கு வந்தது.. எடுத்துப் பருகியவாறு செல்போனை எடுத்து மேனகாவின் எண்களை அழைத்தான்..
“ஹாய் வினய்..! ஹவ் ஆர் யு..?”
“ஃபைன்.. என்ன ஆச்சு மேனகா.. சென்னையில் கொஞ்ச நாள்களாய் நீ என் கண்ணில் படவேயில்லையே.. வாட் ஹேப்பன்ட் டு யு..?”
“நத்திங்.. எனக்கும் உன்னைப் போல் பித்துப் பிடித்து விட்டது..”
“என்ன சொல்கிறாய்..?”
“ம்ம்.. நீதான் அடிக்கடி பிதற்றுவாயே.. இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்று.. அதுதான் அது உண்மையா என்று பார்க்க திருச்சிக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் ரிலேடிவ் வீட்டில் ஸ்டே பண்ணியிருக்கிறேன்..”
“ஆன்மா இருக்கிறதைக் கண்டு பிடித்து விட்டாயா..?”
“எஸ்.. வினய்.. உன் ஆன்மா இங்குதான் இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்து விட்டேன்..”
“புரியவில்லையே..”
“நீ கனவு கண்ட தேவதையை நான் கண்டு விட்டேன் வினய்..”
மேனகா உச்சரித்த வார்த்தைகளில் புயல் மையம் கொண்டது.. அந்தப் புயல் கிளம்பி திருச்சிக்கு வந்தடைந்தது.. அது கிளப்பிய சூறாவளியில் நந்தகுமாரனின் காதல் மலர் சிக்கி அலைக்கழிந்தது..
மேனகா தான் பெண் புலி என்பதை நிரூபித்தாள்..
Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.