Chapter 01

0Shares

கஸ்தூரியின் மனம் சிறகடித்துக் கொண்டிருந்தது.. யாருக்குக் கிடைக்கும் இது போன்ற வாழ்க்கை..? நினைத்தவனையே கை பிடிக்கப் போகும் மகிழ்வால் நிறைந்தாள்..

சரவணன்.. இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே வாய் இனித்தது.. கஸ்தூரி தன் பட்டுப் பாவாடை விரிய தாவணியை இழுத்துச் செருகியபடி தட்டாமாலை சுற்றினாள்.. காரணமின்றி தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள்..

அவளுக்குப் பின்னால் கோயில் குளக்கரை மரத்தில் ஒளிந்து, ஆசை ததும்ப கஸ்தூரியையே பார்த்துக் கொண்டிருந்த துரைசிங்கத்தின் கண்களில் ஆவல் தெரிந்தது..

“என்னடி கஸ்தூரி.. வீட்டுக்கு வரும் உத்தேசம் இல்லையா..?”

கோயிலுக்குள் இருந்து வந்த மல்லிகா கேட்டாள்..

“ம் ம்.. வருகிறேன்.. வருகிறேன்.. வராமல் எங்கே போகப் போகிறேன்..?” என்றாள் கஸ்தூரி..

“ஒரு வேளை உன் தாய் மாமன் வீட்டிற்கு இப்போதே போனாலும் போய்விடுவாயோ என்னவோ..! யார் கண்டது.. அவர்கள் வீட்டில் பெண் கேட்டாலும் கேட்டார்கள்.. இந்த ஆறு நாட்களாய் உன்னைப் பிடிக்கவே முடியவில்லையே.. தரையில் கால் படாமல் நிற்கிறாயே..?”

“போடி.. அதற்காக.. முறையோடு என் அத்தானின் பெண்டாட்டியாக போவதற்கு முன்னாலேயே என் 

மாமன் வீட்டிற்குப் போவேனா..? என்னை யாரென்று நினைத்தாய்? மகேஷ்வரனின் செல்ல மகளாக்கும்..”

“அடேங்கப்பா… அப்பாவின் பெருமையைச் சொல்லும் போதே.. பெரிய ராணி மங்கம்மாள் போல ஒரு ‘போஸ்’ கொடுக்கிறாயே.. போதும்டியம்மா.. வா.. வீட்டிற்குப் போகலாம்..”

“அது.. அந்தப் பயம் இருக்கட்டும்..”

“வாடி சும்மா.. உதார் விடாதே..”

அவர்கள் இருவரும் போன பின்னால்-மரத்தின் மறைவில் இருந்து வெளிவந்த துரைசிங்கம்-கஸ்தூரியையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான்..

அவன் முதுகில் ஒரு கரம் அடித்தது.. திரும்பிப் பார்த்தான்..

சுப்பையா நின்றிருந்தான்..

“என்ன துரைசிங்கம்.. பார்வையெல்லாம் பலமாய் இருக்கு..?” விசமமாக அவன் வினவினான்..

“என்னத்தைப் பார்த்து என்னடா செய்ய..? காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் அடித்துக்கொண்டு போகப் போகிறானே..?” கண்கள் சிவக்க கூறினான் துரை..

“அவன் ஒன்றும் நேற்று வந்தவன் இல்லையேப்பா.. உடந்தைப்பட்ட தாய் மாமன் மகன்தானே..?”

“நான் மட்டும் ஊரில் போகிறவனா..? சொந்த அத்தை மகன்தானேப்பா..? நேற்று வரைக்கும் எனக்குத்தான் கஸ்தூரி கிடைப்பாள்னு காத்துக்கிட்டு கிடந்தேன்..!”

“சும்மாவா காத்துக் கிடந்தாய்..? அந்த வீட்டில் ஆறு பண்ணையாள் செய்யும் வேலைகளை நீ ஒருவனே செய்து முடித்து.. உன் தாய் மாமனின் காலைக் கழுவிக்கொண்டு கிடந்தாயேப்பா.. கடைசியில் உன் கதி இப்படியா ஆகணும்..? ச்சு.. ச்சு..”

இந்த சுப்பையா பரிதாபப்படுவது போல் எள்ளி நகையாடுவது புரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத இயலாமையுடன் வானத்தை வெறித்தான் துரை..

“அட ஏனப்பா.. நீ வேற வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிற..?”

“உள்ளதைத்தானே சொல்றேன்..”

சுப்பையா சிரித்தபடி நடையைக் கட்ட… துரைசிங்கத்தின் மனம் வெஞ்சினம் கொண்டது..

‘கஸ்தூரி.. கஸ்தூரி..! மஞ்சளின் நிறத்தில் இருக்கும் என் மாமன் மகளே.. விட மாட்டேன்டி.. உன்னை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்டி.. பார்க்கலாம்.. ஜெயிக்கப் போவது நானா.. இல்லை.. அந்த சரவணனான்னு.. பார்க்கிறேன்டி.. ஒரு கை பார்க்கிறேன்..’

துரைசிங்கம் மனதில் கறுவிக்கொண்டே நடந்தான்.. வீட்டைச் சுற்றி இருந்த வேலிப்படலைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்..

மாட்டுக்கு வைக்கோல் போட்டுக்கொண்டிருந்த செவ்வந்தி, “எங்கேடா போயிருந்தே..? சாப்பிட ஆளைக் காணோம்னு ஊர் முழுக்க உன்னைத் தேடிக்கிட்டு இருந்தேன்..” என்றாள்..

“ஆமாம்.. கோழி அடிச்சு வறுத்து வச்சிருக்க.. நான் நேரத்துக்கு சாப்பிட வராமல் போயிட்டேன்.. போம்மா.. போ.. போய் ரசத்தை ஊற்றி, சோற்றைப் போடு.. தொட்டுக் கொள்ள என்ன கொள்ளுத்துவையல்தானே வச்சிருப்பே..?”

“எப்புடிடா கண்டுபிடிச்சே.. என் ராசா..?”

“அது ஒண்ணுதானே நம்ம வீட்டு அடுக்கு பானையில் இருக்கு.. கொஞ்சமாய் எடுத்து வறுக்க வேண்டியது.. அரைக்க வேண்டியது.. இப்படியே நம்ம காலம் போகுது.. ம்ஹீம்..”

“அதுக்கு ஏண்டா புதுசா இப்பப் போய் அலுத்துக்கறே.. இது தெரிஞ்ச கதைதானே..! உன் அப்பன், இருந்த சொத்தை எல்லாம் குடிச்சே கரைச்சுட்டு ஒரு வழியா போய் சேர்ந்தாரு.. என்னவோ.. என் அண்ணன் மகராசன் புண்ணியத்துல என் வீட்டு அடுப்பு எரியுது.. இதில் நீ இத்தனை குறை சொல்ற..! வாடா வா.. போக்கத்தவன் போஜனைத்தைக் குறை சொன்னானாம்..”

செவ்வந்தி எரிச்சலுடன் வீட்டுக்குள் சென்று, தட்டை எடுத்து வைத்தாள்.. கை, கால், முகம் அலம்பிக் கொண்டு வந்த துரை.. தட்டு முன் அமர்ந்தான்.. சோற்றைப் போட்டு குழம்பை ஊற்றினாள் அவள்..

“அட.. மெய்யாலுமே கோழிக் குழம்பு..! எப்படிம்மா.. நீ கோழி அடிச்சிக் குழம்பு வச்சியா..?”

“ஆமாம்.. அதுக்குத்தான் நான் ஆளு.. ஏன்டா நீ வேற வயிற்றெரிச்சலைக் கிளப்பற..! எல்லாம் உன் மாமன் வீட்டில் வைத்ததுதான்.. அண்ணன் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போனாரு.. சாப்பிடு..”

துரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தாயை முறைத்தான்.. செவ்வந்தி கேள்வியாய் மகனைப் பார்த்தாள்..

“ஏன் இப்படி இருக்கிற..? என்னவோ உன் வீட்டுச் சொத்தை யாரோ கொள்ளையடிச்சிட்டுப் போன மாதிரி பார்க்கிற..?”

“கொள்ளையடிச்சுட்டுத்தான் போயிட்டான்.. என் சொத்தை இன்னொருவன் கொள்ளை அடிச்சுட்டுத்தான் போயிட்டான்..”

“ஏன்டா.. உனக்கு ஏது சொத்து..? அதை யாரு திருடிக் கிட்டுப் போனது..? உன் புத்திகித்தி பிசகிப் போச்சா..?”

“அட போம்மா.. நீ சரியான வெள்ளந்திப் பொம்பளை.. உன் அண்ணன் வீட்டில் போடுற சோத்தையும், ஊத்துற குழம்பையும் பெரிசா பேசிக்கிட்டுத் திரியறே.. இங்கே கவுரவமே கொள்ளை போயிருச்சு.. அதைத் தெரியாம பினாத்திக்கிட்டு.. ச்சே.. நீயெல்லாம் புத்திகாரப் பொம்பளையா..?”

“ஆமாடா.. நான் புத்திக்காரப் பொம்பளையா இருந்திருந்தால் உன் அப்பன்கிட்ட எப்படி பொழப்பை நடத்தி இருப்பேன்..? வெள்ளந்தியாய் இருக்கப் போய்த்தான் பொழைச்சேன்.. வந்துட்டான்.. காலம் போன கடைசியில வெட்டி நியாயம் பேசிக்கிட்டு.. தட்டைப் பார்த்து சாப்பிடுடா..”

“நீ சாப்பாட்டிலேயே இரு..”

“வேறு எதில் இருக்கச் சொல்ற..?”

“ஏம்மா.. உன் அண்ணன் மக கஸ்தூரி எனக்கு உடந்தைப் பட்டவள்தானே..! நான் தூக்கிக்கொண்டு போய், கழுத்துல தாலி கட்ட உரிமை உள்ளவன்தானே..?”

“டேய்.. நீ என்ன பெரிய பெரிய பேச்செல்லாம் பேசுற..? என் அண்ணனுக்குத் தெரிஞ்சா, உன் தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவார்..”

“போடுவாரு.. போடுவாரு.. இளைச்சவன் தங்கச்சி மகனா இருந்தா, உப்புக் கண்டம் போடுவார்.. பணக்கார மச்சினன் மகனா இருந்தா, பொண்ணக் கொடுத்து மாப்பிள்ளை ஆக்கிடுவாரு.. ச்சே.. பணத்தைக் கண்டால் பல்லைக் காட்டும் அண்ணன் கூடப் பிறந்துட்டு, உனக்கு ஏம்மா இத்தனை வாய் சவடாலு..?”

“டேய்.. யாரைப் பார்த்து பணத்தைக் கண்டு மயங்குற ஆள்னு சொன்னே..? என் அண்ணனைப் பார்த்தா..? அவர் சொக்கத் தங்கம்டா.. இத்தனை நாள் தள்ளி நின்ன சொந்தம், கிட்ட வந்து பொண்ணு கேட்டப்ப.. என் அண்ணன் உடனே சம்மதம் சொல்லிடலைடா.. கஸ்தூரியின் சம்மதத்தைத்தான் கேட்டாரு.. அதுவும் சும்மா கேட்கலை.. உனக்கு யாரைக் கட்டிக்க விருப்பம்னு நேரடியாவே கேட்டாரு..

கஸ்தூரி அவளோட மாமன் மகனைத்தான் கட்டிக்கு வேன்னு சொல்லிட்டா.. அவரும் சரவணனுக்கு அவளைக் கொடுக்க சம்மதம் கொடுத்துட்டாரு.. அவ மட்டும் உன்னைக் கட்டிக்கத்தான் விருப்பம்னு சொல்லி இருந்தா, கட்டாயம் உனக்குத்தான் கொடுத்திருப்பாரு.. என் அண்ணனுக்கு பாரபட்சம் பார்க்கத் தெரியாதுடா.. உன்மேல் ஆசைப்படறேன்னு கஸ்தூரி ஒரு வார்த்தை சொல்லட்டும்.. என் அண்ணன், கல்யாணத்தையே மாற்றி அமைப்பாருடா.. ஏன்னா.. அவருக்கு அவரோட மகள் விருப்பம்தான் முக்கியம்..”

தனது தமையனைப் பேசிவிட்டான் என்ற துடிப்பில் மகனிடம் செவ்வந்தி கூறிய இவ்வார்த்தைகள், துரையின் மனதில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்தால் அவள் அப்படி பேசி இருப்பாளா என்ன..?

‘சொல்ல வைக்கிறேன்ம்மா.. கஸ்தூரியை அவள் வாயால் என் மேல்தான் ஆசைன்னு சொல்ல வைக்கிறேன்..’

துரை முடிவு எடுத்துவிட்டான்..

0Shares

Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link