Chapter 18
காலடியோசை தேய்ந்து மறைந்ததும், தன் மடியில் கிடந்த கஸ்தூரியின் முகத்தை தன் பக்கமாய் திருப்பினான் சரவணன்.. அவள் பார்க்க மறுத்தாள்..
“கஸ்தூரி..” அழுத்தமாய் அழைத்தான்..
“ம்..” அவளது குரலில் கண்ணீர் இருந்தது..
“என் முகத்தைப் பார்..” அவனது குரலில் கண்டிப்பு தொனித்தது..
அவள் மாட்டேன் என்று தலையை ஆட்டினாள்..
“முட்டாள்.. என் முகத்தைப் பார்..”
“மாட்டேன்.. எனக்கு அதற்கு அருகதை இல்லை..”
சரவணனின் விழிகளில் அதிர்வு தெரிந்தது.. கஸ்தூரி மீண்டும் கதற ஆரம்பிக்க.. அவன் முரட்டுத்தனமாய் அவளது முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்..
“என்னடி நடந்தது..?”
“அத்தான்..”
“கதறாதே.. நீ அழுதால் நான் தாங்கமாட்டேன்.. அவன் என்ன செய்தான்..? ஏன் அவனைக் கொல்லத் துடீக்கிறாய்..? எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லு..”
“அத்தான்..”
“கஸ்தூரி.. திரும்பவும் அழ ஆரம்பிக்கிறாயே..! ஒன்றை மட்டும் புரிந்து கொள்.. உனக்கு எது நடந்திருந்தாலும்.. நான் உன்னை ஏற்றுக்கொள்வேன்.. நான் உன்னை காதலிக்கிறேன்டி.. இது ஏன் உனக்குப் புரியவில்லை.. சொல்லு.. என்ன நடந்தது..? அவன் உனினடம் தவறாய் நடந்தானா..?”
“தவறாய் நடக்க முயன்றான்..” என்ற கஸ்தூரி அந்த மழை நாளை விவரித்தாள்..
அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.. அவளது முகம் ஆயிரமாயிரம் உணர்வுகளை பிரதிபலித்தது..
“பொன்னம்மாள் மட்டும் வராமல் இருந்திருந்தால்.. நான் அவனை அடித்தே கொன்றிருப்பேன்.. பாவி.. தப்பிவிட்டான்.. ஆனால்.. அத்தான்.. அவன் என்னை..”
“ச்சு..”
சரவணன் சட்டென்று எழுந்து.. அறைக் கதவை அடைத்தான்.. ஒரே எட்டில் கஸ்தூரியின் அருகே வந்து.. அவளை எழுப்பி நிறுத்தினான்.. நிற்க முடியாமல் தொய்ந்து சரிந்தவளை.. தன்னுடன் சேர்த்து அணைத்து.. அவளுடைய கழுத்தில் முத்தமிட்டான்..
கஸ்தூரி கிறங்கிப் போனாள்.. அவனது கையில் பாகாய் உருகினாள்.. அவளது முகம் திருப்பி.. இதழோடு இதழ் பதித்தான்.. விழி மூடி.. அவனுடன் இசைந்து நின்றவளைப் பார்த்து.. கிசுகிசுப்பான குரலில் கேட்டான்..
“இப்போது சொல்.. அவன் தொட்டபோது.. நீ இப்படி கிறங்கி நின்றாயா..?”
“ச்சீ..” அருவருப்புடன் முகம் சுளித்தாள் கஸ்தூரி..
“இப்போது புரிகிறதா.. அவனது தொடுகைக்கும், என் தொடுகைக்கும் உள்ள வித்தியாசம்..? மக்கு.. ஒருவன் உன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்திருக் கிறான்.. நீ அவனிடம் இருந்து தப்பியதோடு இல்லாமல்.. அவனையும் தண்டித்து விரட்டி இருக்கிறாய்.. எனக்கு உன்னை நினைத்தால் எவ்வளவு பெருமையாய் இருக்கிறது தெரியுமா..? நீ விவரம் இல்லாமல் அவன் நெஞ்சில் சாய்ந்து அழுது தொலைத்தபோது நான் ரொம்பவும் இடிந்து போனேன் தெரியுமா..?”
“அவன் மேல் சாய்ந்து அழுதேனா..? நான் மரத்தின் மீதுதானே சாய்ந்து அழுதேன்..?”
“என்ன சொல்கிறாய்..?”
“ஆமாம்.. அவன் அங்கே நின்றது கூட எனக்குத் தெரியாது.. அவனாக என் பக்கத்தில் வந்து நின்று கொண்டான்.. நீங்கள் அதை தப்பாக நினைத்து விட்டீர்களா..?”
“அட.. ஆமாம்டி.. தூரத்தில் இருந்து பார்த்தபோது, நீ அவன் மேல் சாய்ந்து அழுதது போல் தெரிந்தது.. இப்போதுதான் எனக்கு மனம் நிம்மதியானது.. ஆனாலும், அவனுடன் சைக்கிளில் முன்பக்க கம்பியில் ஏறிப் போகலாமா..?”
“அது தப்புத்தான் அத்தான்.. ஆனால், நான் அவனுடைய சைக்கிளைத்தான் கேட்டேன்.. எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமே..! ஆனால், அவன்தான் பொய்யான கதை சொல்லி என்னை முன்பக்கம் உட்கார வைத்துவிட்டான்..”
“வேண்டுமென்றே செய்திருப்பான்..”
“வேண்டுமென்றுதான் செய்தானாம்.. சைக்கிளின் கேரியரை கழட்டி வைத்துவிட்டு வந்திருக்கிறான்..”
“அவன்மேல் குற்றம் சொல்லாதே.. நாலையும் யோசித்து நடக்க வேண்டியது நீதானே..?”
“அது காலம் கடந்துதானே எனக்கு புரிந்திருக்கிறது..”
“காலம் ஒன்றும் கடந்துவிடவில்லை கஸ்தூரி.. நீ என்றைக்கும் என்னுடையவள்..”
“ஆனால் அத்தான்..”
“ச்சு.. இந்த ஆனா, ஆவன்னாவை விடுடி.. தாலியைக் கழுத்தில் வாங்கிக்கொண்டு, பெண்டாட்டியாய் என் வீட்டிற்கு வா.. உன் நிழலைக்கூட யாரும் தொட்டு விடாமல் நான் பாதுகாக்கிறேன்.. நடந்தை மறந்துவிடு..”
“முடியலையே..”
“மறக்கணும்..! இதற்குப் போய் கல்யாணத்தை நிறுத்திவிட்டு, மருந்தைக் குடித்திக்கிறாயே..? ஒரு நிமிடம் என்னைப் பற்றி நினைத்திருந்தால், இப்படிச் செய்திருப்பாயா..? நீ போன பின்னால் நான் மட்டும் இந்த உலகில் இருந்துவிடுவேனா..?”
“உங்கள் மாமன் மகள்களில் யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு.. நிம்மதியாய் நீங்கள் வாழ வேண்டும்ன்னுதான்.. இப்படியொரு முடிவை எடுத்தேன்..”
“இது என்ன அசட்டுத்தனமான பேச்சு.. நான் ஒன்று கேட்கிறேன்.. அதற்கு பதிலைச் சொல்லு..”
“ம்…”
“அவன் முத்தமிட்டதும் சாகத் துணிந்தாய்.. அதுவே நான் முத்தமிட்டபோது.. ஏன் பேசாமல் இருந்தாய்..?”
“இது என்ன பேச்சு..? நீங்களும், அவனும் ஒன்றா..?”
“வித்தியாசம் புரிகிறது இல்லையா..? என் இடத்தில் உன்னால் யாரையும் வைத்துப் பார்க்க முடியாதுதானே..?”
“ம்.. அது எப்படி முடியும்..?”
“உன்னால் முடியாதது.. என்னால் மட்டும் எப்படி முடியும்..?”
“என்ன சொல்றீங்க..?”
“அடி என் முட்டாள் காதலியே..! என் மாமன் மகள்கள்க்கு நம் காதல் கதை தெரியும்.. நாம் பொருத்தமான ஜோடின்னு அன்றைக்கு ஷாஷா சொன்னாள்.. அதுவும் நீ எனக்கு கிடைத்த வரமாம்.. நீ அவள் மேல் பொறாமைப்பட்டு ஓடிவிட்டாய்..”
“நான் மக்குத்தானே.. என்னை மன்னித்துவிடுங்கள்.”
“என் மாமா பெண்கள் மூன்று பேருமே படித்தவர்கள்.. தோழமையோடு பழகுவார்கள்.. நீ ஒன்றும்.. ஒன்றும் இரண்டுன்னு கணக்கு போடக்கூடாது.. உன்கணக் கெல்லாம் தப்புக் கணக்காகிப் போய் வெகுகாலம் ஆகிவிட்டது…”
“நீங்களும் அவர்களைப் பற்றி ஜொள்ளு விட்டுக் கொண்டு பேசுவீர்களே.. அப்புறம் நான் என்ன செய்வதாம்..?”
“அப்பாடா.. இப்போதுதான் என் பழைய கஸ்தூரியைப் பார்க்கிறேன்.. இப்படியே தைரியமாக இரு.. மனதிற்குள் எது குடைந்தாலும், தாராளமாய் என்னைக் கேள்.. உனக்குப் பதில் சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.. இப்போது சமர்த்தாய் இரு.. நான் கதவைத் திறக்கப் போகிறேன்.. யாராவது உன்னைப் பார்க்க வரலாம்.. கதவை மூடி இருந்தால் தேவையில்லாத சந்தேகம் வரும்..”
சரவணன் கதவைத் திறந்தான்.. வெளிச்சமும், காற்றும்.. அறைக்குள் வேகமாய் நுழைந்தன.. அதே நேரத்தில் ஓட்டலில் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த மகேஷ்வரனின் மனதிலும், மருத்துவமனையின் முன்புறம் மகனுடன் நின்று பேசிய செவ்வந்தியின் மனதிலும் உண்மை வேகமாய் நுழைந்தது..
ஓட்டலுக்குள் போனதும்..
“என்ன சாப்பிடுகிறாய்..?” என்று மனைவியிடம் கேட்டார் மகேஷ்வரன்..
“நான் சாப்பிட வரலை..”
“ஏண்டி.. அங்கே ஆஸ்பத்திரியில் நம்ம பொண்ணு உயிரை விடத் துணிந்து.. காப்பாற்றப்பட்டுக் கிடக்கிறா..
நீ பசிக்குதுன்னு மாய்மாலம் பண்ணி ஏன் இங்கே வந்தாய்..?”
“உங்களோடு தனியா பேசத்தான்..”
“ஏண்டி.. என்கூட பேச நல்ல நேரம் பார்த்தாய் போ..! என்ன விசயம்..? சொல்லு..”
“நீங்கள் ஏன் காலையில் வயலில் இருந்து வந்ததும் துரைசிங்கத்திற்கு நம் கஸ்தூரியை கட்டி வைக்கணும்னு சொன்னீங்க..? நேற்று இதைச் சொல்லலையே..?”
“அதைக் கேட்க இதுவா நேரம்..?”
“இதுதான் நேரம்.. உங்களுக்குப் புரியவில்லையா.. நீங்கள் துரைசிங்கத்துடன்தான் கஸ்தூரிக்குக் கல்யாணம்னு சொல்லிவிட்டு அந்தப் பக்கம் போனவுடனே.. இந்தப் பக்கம் அவள் மருந்தை குடித்து விட்டாளே.. ஏன்..?”
மகேஷ்வரன் அதிர்ந்தார்..
Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.