Chapter 01

0Shares

நதியோரம் நடந்தபோது
நாற்புறமும் பூங்காற்று
முகத்தோடு மோதிப் போகும்
மனமெல்லாம் லேசாகும்
…நதியோரம் நான் நடந்த போது…
“ஆயர் பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல
மாயக் கண்ணன் தூங்குகிறான் தாலேலோ..”

என்று அந்த அதிகாலை நேரத்தில் பெருமாள் கோவிலில் இருந்து ஒலிபெருக்கியில் பாடல் ஒலித்தது.. இருள் பிரியாத அந்தக் கருக்கல் வேளையில் வித்யா தன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தாள்.. மார்கழி மாதக் குளிர் உடலைத் துளைத்தது.. சுடிதாரின் துப்பட்டாவை காதோடு போர்த்தியிருந்தாள்.. எனினும் குளிர்காற்று காதுக்குள் புகுந்து இம்சித்தது.. வாசல் தெளித்துக் கோலம் போடுபவர்கள் போட்டி போட்டுக் கொண்டு புள்ளிகளை வைத்துக் கொண்டிருந்தனர்.. மார்கழி மாத பஜனை கோஷ்டி பாடியபடி எதிரே வந்தது.. அதிகாலை விடியலின் அனைத்து தோற்றங்களையும் தன்னுள் பதிவு செய்து கொண்டே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தாள் வித்யா..

அவள் திரும்ப வேண்டிய தெருமுனை காபி பாரில் கூட்டம் இருந்தது.. சூடான காபி குடித்தால் அந்தக் குளிருக்கு இதமாக இருக்கும்.. ஆனால் அதற்காக தனியாக காபி ஸ்டாலுக்குள் போக வேண்டுமே.. வித்யா தனியாக ஹோட்டல்களுக்கு காபி கூட குடிக்கப் போவதில்லை.. ‘இன்னும் கொஞ்சம் தூரம்தான்.. பொறு மனமே’ என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.. தூங்காத கண்கள் சொக்கின.. சோர்ந்து மூடிய இமைகளைப் பிடிவாதமாகத் திறந்து சிமிட்டி தூக்கத்தை விரட்டிக் கொண்டே வித்யா சென்று கொண்டிருந்தாள்..

விளக்குக் கம்பத்தின் அடியில் படுத்திருந்த நாய் ஒன்று வண்டிச் சத்தம் கேட்டு தலையைத் தூக்கிப் பார்த்தது.. அருகே வண்டி நெருங்கவும் எழுந்து நின்று கொண்டது.. தலையைச் சுற்றி துப்பட்டாவால் மூடியிருந்த வித்யாவின் உருவத்தைக் கண்டதும் பாய்ந்து குரைக்க ஆரம்பித்தது..

வித்யாவின் நாக்கு பயத்தில் புரண்டது.. அடிவயிற்றில் குடல் புரண்டது.. வண்டியின் வேகத்தைக் கூட்டினாள்.. வண்டியின் பின்னாலேயே குரைத்துக் கொண்டு துரத்திய நாய் மெல்ல மெல்லப் பின் தங்கியது.. வித்யா நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள்.. ஒவ்வொரு முறையும் அவள் இருள் பிரியாத அதிகாலையில் திரும்பும்போது இவ்வாறு ஏதேனும் ஓர் அனுபவம் நேர்ந்து அவளை பயத்திற்கு உள்ளாக்குகிறது.. இரண்டு நாள்களுக்கு முன்னர் ஆளரவ மற்ற சாலையில் நான்கு குடிகாரர்கள் குடித்து விட்டு ஆடிக் கொண்டே வந்தார்கள்.. அவர்களை மின்னல் வேகத்தில் கடந்து வரும்வரை அவள் உயிர் அவளிடத்தில் இல்லை..

அதற்கு முன்னால் ஓர்நாள் மின்சாரக் கம்பியில் இருந்து வெள்ளையாய் ஒன்று குதித்து நின்றது.. ‘பேய்..’ என்று அலற இருந்தவள் வழக்கம் போல ‘தப்பித்தேன், பிழைத்தேன்’ என்று வேகம் கூட்டிப் பறந்தாள்.. அன்று மதியமே அந்தச் சாலையில் வரும்போது கரண்ட் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த நீண்ட வெள்ளை நிறப் பாலிதீன் கவரைப் பார்த்தபோது ‘இதுவா அவளை பயமுறுத்திய பேய்..?’ என்று அவளுக்குச் சிரிப்பு வந்தது.. ஆனால் இருட்டு நேரத்தில் ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே..?’

‘அம்மா மட்டும் இருந்திருந்தால்..?’ வித்யாவின் உள்ளம் பெருமூச்சு விட்டது.. தன் படிப்புக்கு தானே சம்பாதிக்கும் அவலநிலை நிச்சயம் அவளுக்கு ஏற்பட்டிருக்காது.. ‘தாய் இல்லாவிட்டால் சீர் இல்லை..’ என்பது இதுதான் போல..

வித்யாவுக்கு ஆறு வயதாக இருக்கும்போதே அவளது அன்னை கமலம் இறந்துவிட்டாள்.. ஒரு வருடம் தாக்குப் பிடித்த அவளது தந்தை வையாபுரி வித்யாவின் ஏழாம் வயதில் மறுமணம் செய்து கொண்டார்.. வித்யாவின் சித்தியாக கங்கா வீட்டுக்குள் வந்த அடுத்த வினாடியிலிருந்து அந்த வீட்டிலிருந்த வேண்டாத பொருள்களில் ஒன்றாக வித்யாவும் ஆகிப்போனாள்.. இளைய தாரத்திற்கு இருக்க வேண்டிய அத்தனை சாகசங்களும், சாதுர்யங்களும் கங்காவுக்கு கை வந்த கலைகளாய் இருக்க அப்பாவி வையாபுரியால் வித்யாவை பாதுகாக்க முடியவில்லை.. வந்த மறு வருடமே நீலாவையும் அடுத்த மூன்றாம் வருடத்தில் ராமுவையும் பெற்றெடுத்த கங்கா, வையாபுரி தன் மக்களுக்கு மட்டுமன்றி வித்யாவுக்கும் தந்தை என்பதையே சுத்தமாய் மறந்து விட்டாள்.. நினைக்க முயன்ற வையாபுரிக்கும் அந்த நினைவு வராமல் தடுத்தாள்..

‘நம் பிள்ளைகள், நம் பிள்ளைகள்’ என்று நீலாவையும் ராமுவையும் கூறுபவள் வித்யா ஓர் அநாதை என்பது போல் நடந்து கொண்டாள்..

வித்யா கெட்டிக்காரக் குழந்தையாக இருந்தாள்.. நிராதரவாய் நிற்க வேண்டியவர்களுக்கு போராட்ட குணம் அதிகம் இருக்கும்.. எல்லாக் கதவுகளும் அடைபட்டாலும் ஏதேனும் ஓர் கதவை அவர்கள் திறந்து விடுவார்கள்.. வித்யாவும் அப்படித்தான் இருந்தாள்.. கூடுமானவரை கங்காவின் கவனத்தை ஈர்க்காமல் ஒதுங்கியே தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பாள்.. வீட்டு வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்வாள்.. கங்கா ‘எள்’ என்று கூறும் முன்னர் ‘எண்ணை’யாக வந்து நிற்பாள்.. ஆனாலும் கங்கா அவளைக் கரித்துக கொட்டிக் கொண்டுதான் இருப்பாள்.. வித்யா தன் தாய் கமலத்தின் சாயலில் அழகானவளாக இருந்ததும்.. நீலா கங்காவின் சாயலில் மிகச் சாதாரண தோற்றத்தில் இருந்ததும் தான் காரணம்.. எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல் அவளத பொறாமைத் தீயை அதிகப்படுத்தியது.. மேல்நிலைப் பள்ளியிருதித் தேர்வில் வித்யா பள்ளியிலேயே முதல் மாணவியாய் தேறிய செய்தி..

“நின்னா உட்கார முடியலை.. உட்கார்ந்தா எழுந்து நடக்க முடியலை.. எனக்கு உடம்பைப் போட்டு இந்தப் பாடுபடுத்துது.. கவனிப்பார் இல்லாம நான் காலொடிஞ்ச மாதிரிக் கிடக்கிறேன்.. இந்த விளங்கா மூஞ்சிக்கு படிப்பு ஒரு கேடா..? படிப்பை நிறுத்திவிட்டு வீட்டைக் கவனிக்க சொல்லுங்க..” என்று காளி அவதாரமெடுத்தாள் கங்கா..

பொறியியல் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க உதவியுடன் இலவச பொறியியல் படிப்புக்கு அனுமதிக் கடிதம் வீடு தேடி வந்தது.. சென்னைக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது.. ஆனால் அவளை வீட்டை விட்டு வெளியேற விடக்கூடாது என்று கங்கா எதிர்த்தாள்..

வையாபுரி என்றுமே வித்யாவிற்கு ஆதரவாய் பேசிய தில்லை.. வித்யா புறப்படும் நாள் வந்தது.. வித்யா தன் பெட்டி படுக்கைகளைக் கட்டினாள்.. தாயின் படத்தை எடுத்துப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டாள்.. சான்றிதழ் களை சரிபார்த்து கைப்பையில் வைத்துக் கொண்டாள்.. கல்லூரியின் அனுமதிக் கடிதத்தை எடுத்துக் கொண்டாள்.. தந்தையிடம் வந்தாள் வணங்கி எழுந்தாள். நீலா, ராமுவைக் கூப்பிட்டாள்.. கட்டி ஊச்சி முகர்ந்தாள்..

“நல்லாப் படிக்கணும்.. அக்காவை மறந்துவிடக் கூடாது..” என்றவள் தோள் பையைத் தோளில் மாட்டிக் கொண்டு பெட்டி படுக்கைகளை எடுத்துக கொண்டு வீட்டுப் படியிறங்கினாள்..

“நில்லுடி..” கங்கா கர்ஜித்தாள்..

வித்யா நின்றாள். ஆனால் திரும்பிப் பார்க்கவில்லை..

“காலேஜில் இடம் கிடைத்துவிட்டால் போதுமா.. படிப்புக்கும், ஹாஸ்டலுக்கும் கட்டப் பணம் வேண்டாமா..? உங்க ஆத்தா வீட்டுச் சொத்தா இங்கே குவிந்து கிடக்குது..? உனக்கு அள்ளி அள்ளி கொடுக்க..? செப்பாலடிச்ச காசு கூட தரமாட்டேன்.. தெரிஞ்சுக்க… ஒழுங்காய்.. ஒழுங்காய் மரியாதையாய் மேலே படிக்கணும்கிற ஆசையை விட்டு விட்டு மூலையில் முடங்கிக் கிடக்கிறதுன்னா இந்த வீட்டில் இரு.. இல்லாவிட்டால் இந்த வீட்டு வாசல் படியை எப்பவுமே நீ மிதிக்கக் கூடாது.. அப்படியே போயிடு.. இந்த வீட்டில் உறவு கொண்டாடிக்கிட்டு இங்கே வராதே..”

வித்யா திரும்பாமல் அழுத்தமாகக் கூறினாள்..

“வரமாட்டேன் சித்தி.. உன்னிடம் கையேந்தி எப்போதும் நான் வரமாட்டேன்.. போகிறேன்..”

கங்காவின் ஆத்திரம் கரை உடைத்தது..

“போய்.. படிக்கக் காசுக்கு என்னடி செய்வே.. நீ தைரியமானவளாச்சே.. என்ன வேணும்னாலும் செய்வே..”

இப்போது வித்யாவின் பொறுமை அணை உடைந்தது.. அப்படியே ரௌத்ரமாய் திரும்பினாள்..

“ஆமாம்.. என் படிப்பிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்.. ஆனால் மானமான தொழிலைச் செய்வேன்.. கல்லுடைப்பேன்.. நாலு வீட்டில் பாத்திரம் கழுவுவேன்.. வாசல் கூட்டிப் பெருக்குவேன்.. ஏன்னா.. என் அம்மா கழுத்து நிறைய நகையோடு லாரி நிறைய சீரோடு முதல் தாரமா வந்தவங்க.. உங்களைப் போல் மூத்தவ விட்டுப் போன நகைகளையும்.. சொத்தையும் உரிமை கொண்டாடிக்கிட்டு அவள் பெத்துவிட்டுப் போன பிள்ளையை அநாதையாக்கினவங்க இல்லே.. நான் அவங்க வயித்தில் பிறந்தவள்.. ஜெயித்துக் காட்டுகிறேன்.. அதுவரை உன் முகத்தில்.. உனக்கு ஜால்ரா போடுகிற அப்பாவின் முகத்தில் விழிக்க மாட்டேன்..”

“அப்போ உங்க அம்மா நகைகளையெல்லாம் நான் தான் அபகரிச்சுக்கிட்டேன்னு சொல்றியா.. கேட்டீங்களா இந்த நாதியத்த நாய் பேசுகிறதை..”

வையாபுரி மகள் சொல்வது உண்மையென்பதால் மௌனம் சாதித்தார்.. கங்கா வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள்..

“ஐயோ.. ஐயோ.. இதைக் கேட்டபாரில்லையா.. இவ ஆத்தாளுக்கு அவ பிறந்த வீட்டில் செஞ்சுபோட்ட ஐம்பது பவுன் நகையையும் நான்தான் அடிச்சுக்கிட்டேன்னு சொல்றாளே..”

“அது எப்படி சித்தி ஐம்பது பவுன் நகைன்னு அவ்வளவு கரெக்டா சொல்றே..”

கங்கா பேய் விழி விழித்தாள்..

“அதுசரி அபேஸ் பண்ணிய உனக்கா அளவு தெரியாது..? ஆனால் சித்தி உனக்கு ஒரு உண்மை தெரியாது..”

என்ன சொல்கிறாள் இவள்..? என்ற சந்தேகத்தில் கங்காவின் சிறிய கண்கள் இடுங்கி காணாமலே போயின. வித்யா தொடர்ந்தாள்..

“எங்க அம்மாவுக்கு.. அவங்க பிறந்த வீட்டில் போட்டது எழுபத்தைந்து பவுன்.. நீ ஏப்பம் விட்ட ஐம்பது பவுன் நகை போக மீதி எங்கே தெரியுமா இருந்தது..?”

கமலம் மரணத்தறுவாயில் தன் தோழியான நர்ஸ் மரகதத்திடம் தன் கைவசம் மருத்துவமனையில் இருந்த இருபத்தைந்து பவுன் நகையை ஒப்படைத்துவிட்டுப் போயிருந்தாள்.. நம்பிக்கைக்குரிய அந்தத் தோழியிடம் வித்யாவின் திருமணச் சமயத்தில் அந்நகைகளை அவளிடம் சேர்த்துவிடச் சொல்லி சத்தியம் வாங்கியிருந்தாள்..

வித்யாவின் படிப்பு கேள்விக்குறியாக இருந்தபோது மரகதம் அந்தக் தகவலை அவளிடம் சொல்லி தைரியம் கொடுத்திருந்தாள்.. அதை இப்போது சிற்றன்னையிடம் கூறினாள் வித்யா..

“என் அம்மா கெட்டிக்காரங்க.. மனைவி செத்தால் மறுநாளே கல்யாணம் கட்டிக்கிற ஆண்பிள்ளைகளைப் பற்றி அறிஞ்சவங்க.. அவங்க புத்திசாலித்தனமா கொடுத்து வைத்த நகை என் படிப்புக்கு இப்போது பயன்படப் போகுது..”

கங்காவின் வயிறு எரிந்தது..

“நல்ல குடும்பத்தில் பிறந்தவ இப்படி ரகசிய வேலை செய்வாளாங்கிறேன்.. கட்டிய புருசனை நம்பாமல் கண்டவளையும் நம்புவாளாங்கிறேன்..”

“யாரைக் கட்டிய புருசனை..?” எகத்தாளமாய் கேட்டாள் வித்யா..

“ஏண்டி நகை இருக்கிற தைரியத்தில் பேசுகிறாயா..? இருபத்தி ஐந்து பவுன் எந்த மூலைக்குப் பத்தும்.. ஐந்து வருசம் நீ எப்படிப் படிப்பே..”

“நீ பார்க்கத்தானே போகிறாய்..?”

மனதில் லட்சியத்துடனும் நெஞ்சில் வைராக்கியத் துடனும் வீட்டுப் படியைத் தாண்டினாள் வித்யா.. பேருந்தின் ஜன்னல் வழி கடந்து போன தன் பிறந்த ஊரைப் பார்க்க முடியாமல் கண்ணீர் திரை இட்டது.. இப்படித்தான் ஆயகுடியில் பிறந்து வளர்ந்த வித்யா சென்னைக்கு படிக்க வந்தாள்..

முதல் வருட படிப்பிற்காக தன் தாயின் நகைகளில் பத்து பவுன் நகையை மட்டும் விற்றவள்.. படித்துக் கொண்டே மேல்நிலைப் பள்ளிக் கல்வித் தகுதியை வைத்துக் கொண்டு கண்ணில் படும் அரசாங்க வேலைகளுக்கெல்லாம் விண்ணப்பித்துக் கொண்டு இருந்தாள்.. அப்படிக் கிடைத்ததுதான்.. டெலிபோன் டிபார்ட்மென்ட் வேலை..

அவள் இரண்டாம் வருடத்தில் நுழைந்த போது அவளுக்கு வேலைக்கான உத்தரவு வந்தது.. அதை உடனடியாய் அவள் ஏற்றுக் கொள்ளக் காரணம்.. அங்கே இரவு நேரப் பணி இருந்ததால்தான்.. பகலில் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பு.. இரவில் வேலை.. படிப்பதற்கும்.. உண்ணுவதற்கும் போதுமான அளவு சம்பளம் கிடைத்து விடும்.. ஆனால்.. கல்லூரி விடுதியில் இருந்து கொண்டு இரவுப் பணிக்கு எப்படி அவள் போய்வர முடியும்..?

அவள் திகைத்து நின்றபோது கை கொடுத்தாள் பூர்ணிமா.. பூர்ணிமாதேவி என்பது அவளுடைய முழுப்பெயர்.. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மணிமுத்தாறு கிராமத்தில் பிறந்தவள்.. சென்னையில் பொறியியல் கல்லூரியில் ஒரு வருடமாக வித்யாவுடன் படிப்பவள்.. ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவளாம், மிகப்பெரிய பணக்காரியென்று கூடப்படிக்கும் மற்றவர்கள் கூறக் கேட்டிருக்கிறாள்.. சென்னையில் அவர்கள் குடும்பத்துக்கு சொந்தமாக நான்கு பங்களாக்கள் இருப்பதாகவும் அதில் ஒன்றை அவள் படிப்பதற்காகவே குடியிருந்தவர்களைக் காலி பண்ணச் சொல்லிக் கிராமத்தில் இருந்து சமையலுக்கு என்று ஒரு அம்மாவையும் காவலுக்கும், மேல் வேலைக்கும் என்று இரண்டு முரட்டுப் பெரியவர்களையும் கொண்டு வந்து வைத்து வசதி பண்ணிக் கொடுத்திருக்கிறார்கள் என்றும் பேசிக் கொள்வார்கள்.. ஆனால் அழகான காரில் வந்து இறங்கும் பூர்ணிமா தன்னைப் பற்றித் தற்பெருமையாய் ஒர்வார்த்தை கூடப் பேசமாட்டாள்..

அவள்தான் அன்று வித்யா யோசனையோடு தனியே அமர்ந்து இருந்தபோது வந்து பேச்சுக் கொடுத்தாள்.. பூர்ணிமாவுக்கு வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் வித்யாவை மிகவும் பிடிக்கும்… தாணுண்டு தன் வேலையுண்டு என்று ஒதுங்கிப்போகும் வித்யாவை இழுத்து வைத்துப் பேசித் தோழியானாள் பூர்ணிமா..

“என்ன வித்யா போதி மரத்தடியில் புத்தர் உட்கார்ந்திருப்பதைப் போல.. காலேஜ் மரத்தடியில் தனியாக உட்கார்ந்து விட்டாய்..?”

“ச்சு.. அடுத்தவாரம் நான் காலேஜ் ஹாஸ்டலைக் காலிபண்ண வேண்டும்.. எங்கே போவது..? அதுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்..”

பூர்ணிமாவுக்கு வித்யாவின் குடும்ப நிலைமை தெரியும்.. வித்யாவுக்கு டெலிபோன் டிபார்ட்மெண்டில் வேலை கிடைத்திருப்பதும் தெரியும்..

“வித்யா.. நான் ஒன்று சொல்கிறேன் கேட்கிறாயா..?”

“நீ முதலில் சொல்.. கேட்பதா வேண்டாமான்னு அப்புறம் முடிவு செய்கிறேன்..” கறாராய் கூறினாள் வித்யா..

ஆனால் பூர்ணிமா அந்தக் கல்லையும் கரைத்து விட்டாள்.. தினமும் எடுத்துச் சொல்லி ஒருவழியாய் வித்யாவை தன்னுடன் தங்க சம்மதிக்க வைத்துவிட்டாள்..

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link