Chapter 27
ஆகாஷ் விழி மூடி தொண்டைமானைப் பற்றி நினைத்துப் பார்த்தான்.. ஆகாஷ் தன் காதலை வெளிப்படுத்தியதும் அவரிடம்தான்.. அதை அனுராதாவிடம் சொல்லக்கூடாதென்ற வாக்குறுதியையும் பெற்றுக் கொண்டான்.. அதேபோல் அனுராதா தன் காதலை தன் தாத்தாவிடம் சொல்லிவிட்டு அதை மற்றவர்களுக்கு.. முக்கியமாய் ஆகாஷிடம் கூறக் கூடாதென்று அவளும் கூறிவிட்டாள்..
பாவம்.. அந்த வயோதிகர் என்ன செய்வார்..? இருவரும் நல்லவர்கள்.. இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர்.. அதே சமயம் ஆகாஷ் தன்னை வெறுப்பதாக அனுராதா நினைத்தாள்.. அனுராதாவுக்கு தன்னை பிடிக்கவில்லையென்று ஆகாஷ் நினைத்தான்.. இதையும் இவர்கள் இருவருமே தொண்டைமானிடம் தான் ஒப்பித்தார்கள்..
இவர்களை இணைத்து வைக்க தொண்டைமான் தன் இறுதி நேரத்தில் எடுத்த முடிவு இருவரையும் ஒன்று சேர்த்து வைத்துவிட்டது.. அவர்களின் திருமணத்தை முடிவு செய்து விட்டு அவர் கண் மூடிவிட்டார்.. திருமணம் செய்து கொண்ட இருவரும் ஒருவர் அன்பை மற்றொருவர் சந்தேகித்த வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்..
இப்படி ஓர் துயரை இதயத்தில் சுமந்து கொண்டு அனுராதாவால் எப்படி அவனுடன் ஒட்டி உறவாட முடியும்..?
‘என் இதயத்தை அறிந்துகொள்..’ என்று அவள் கதறுவதில் அர்த்தமிருக்கிறதே..
ஆகாஷ் அனுராதாவின் டைரிளை மூடி அவற்றை அன்புடன் தடவிக் கொடுத்தான்.. அவனைப் பொறுத்தவரை அவை டைரிள் அல்ல.. அனுராதாவின் இதயம்.. அவளது இதயத்தன் சாளரத்தை திறந்து வைத்து.. ஆகாஷின் மனக்குமுறல்களுக்கு விடை அளித்த அட்சய பாத்திரம்..
அனுராதா அலுவலகத்திலிருந்து வந்தாள்.. வழக்கம் போல் காரின் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.. ஆகாஷ் அமைதியாக காரை ஓட்டிக் கொண்டு வந்தான்.. அவனது அமைதி அவளுக்கு சஞ்சலத்தை அளித்தது..
“ஏன் பேசாமல் வருகிறீர்கள்..?”
“என்ன பேச..?”
“இது என்னங்க புதிதாய் கேட்கறீங்க..?”
“இன்று புதிதாய் நிறைய தெரிந்து கொண்டிருக் கிறேன்.. ஒருவேளை அதனால்கூட இருக்கலாம்..”
ஆகாஷ் அமர்த்தலாய் கூற அனுராதா குழம்பினாள்..
‘இவன் ஏன் இப்படிப் பிதற்றுகிறான்..?’
“ஏங்க உடம்புக்கு ஒன்றுமில்லையே..”
“ஏண்டி நீ வேறு அனத்திக் கொண்டு வருகிறாய்..?”
“இல்லை காய்ச்சல் வந்த உடம்பாச்சேன்னு கேட்டேன்..”
“ஏன் உனக்கு காய்ச்சல் வந்ததில்லையா..?”
“வந்திருக்கு.. ஆனால்..”
“இப்ப என்ன.. காருக்குள் அமைதியாய் இருக்கக் கூடாது அவ்வளவுதானே.. இரு பாட்டைப் போடுகிறேன்..”
டேப்ரிகார்டரில் பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது.
‘எனக்காக வா.. நான் உனக்காக வா..
என்னைக் காணவா.. என்னில்
உன்னைக் காண வா வா வா…’
அனுராதா உதட்டைக் கடித்துக் கொண்டு ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டாள்..
“என்னடி.. உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு வருகிறாய்.. வேறு பாட்டு போடவா..”
வேறு பாடல் ஒலித்தது.
‘நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே..
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே..
நதியைப் பார்த்து நாணல் சொன்னது
என்னைத் தொடாதே..
நாளைப் பார்த்து இரவு சொன்னது
என்னைத் தொடாதே..’
“இன்றைக்கு என்ன ஒரு முடிவோடு இருக்கீங்களா..?”
“ஆமாம்.. இப்ப என்னங்கிற..?”
“சை.. எப்பப் பார்த்தாலும் இப்படிப் பாட்டுத்தான் போடுவது.. தேடிப்பிடித்து பதிந்து வைத்திருக்கிறீர்களா..?”
“எப்போது நமக்கு கல்யாணம் நிச்சயமானதோ.. அப்போதே இவற்றையெல்லாம் பதிந்து வைத்து விட்டேன்..”
“என்ன ஓர் முன்யோசனை..” அனுராதா தலையில் அடித்துக் கொண்டாள்..
“இதில் தலையில் அடித்துக் கொள்ள என்ன இருக்கிறது..? நம் கல்யாண வாழ்க்கை இப்படித்தான் இருக்குமென்ற யூகம்தான்..”
“உங்கள் யூகத்தை தூக்கி உடப்பில் போடுங்கள்..”
“ஏண்டி.. உன் யூகத்திற்கு என் யூகம் எந்த விதத்தில் குறைச்சலாகப் போய்விட்டது..?”
“என் யூகத்தை நான் உங்களிடம் வந்து சொன்னேனா..”
“என்னிடம் சொல்லியிருந்தால் தான் நம் வாழ்க்கை விளங்கி இருக்குமே.. எந்தக் காலத்தில் நீ என்னை நம்பினாய்..?”
“நம்பாமல்தான் உங்களுக்கு கழுத்தை நீட்டியிருக்கிறேனா..?”
“இல்லையென்று சொல்கிறாயா..?”
“எனக்கு இப்படிப் பூடகமாக கேட்டால் பதில் சொல்லத் தெரியாது..”
“அதானே.. அம்மணி நேருக்கு நேர் போட்டுத் தாக்கு கிறவளாச்சே..”
“எதைப் பேசினாலும் சண்டைக்கு வருவது போலவே பேசுகிறீர்கள்.. நான் உங்கள் பேச்சுக்கே வரவில்லை..”
“இறங்கி பின் சீட்டிற்கு வந்து அடித்து விடுவேன்.. என்னிடம் பேச வராமல் வேறு யாரிடம் பேசுவாய்..?”
“ஏங்க நான் அப்படிச் சொன்னேனா..?”
“நீ சொன்னதற்கு அப்படித்தான் அர்த்தம்..”
வீட்டுக்குள் கார் நுழைந்தது.. ஆகாஷ் இறங்கி கேட்டை மூடிவிட்டு வரச் சென்றான்.. அனுராதா கதவைத் திறந்து கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.. மாடிப்படியேறி உடைமாற்றி முகம் கழுவ படுக்கையறைக்குள் நுழைந்தாள்.. கட்டிலை பார்த்தவள் அப்படியே அசையாமல் நின்று விட்டாள்..
கட்டிலின் மேல் அவளது டைரிகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.. ஆகாஷ் அன்னலட்சுமிபுரத்தில் விட்டுச் சென்ற சட்டையும், குறிப்பேடும், பேனாவும் இருந்தன..
அனுராதா அவசரமாய் அவற்றின் அருகே சென்றாள்.. படுக்கையறைக் கதவு மூடும் சத்தம் கேட்டது.. திரும்பிப் பார்த்தாள் ஆகாஷ் நின்று கொண்டிருந்தான்..
அனுராதா கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தாள்..
“இதெல்லாம் என்ன..?”
“நான் உன்னிடம் கேட்க வேண்டிய கேள்வி இது..”
“இவை எப்படி வெளியே வந்தன..?”
“நிச்சயம் கால் முளைத்து வெளியே வரவில்லை..”
“நீங்கள் காலையில் காலேஜிற்குத்தானே போனீர்கள்..?”
“போனேன்.. கல்ச்சுரல் புரோகிராம்.. அதனால் லீவ் விட்டிருந்தார்கள்.. வீட்டுக்கு வந்து விட்டேன்..”
“வீட்டுக்கு வந்தவர்.. பேசாமல் கையடக்கி இருப்பது தானே.. என் பீரோவை ஏன் குடைந்தீர்கள்..”
ஆகாஷ் அதற்கு மேல் அவளை பேச விடாமல் அனுராதாவை இழுத்து அவள் இதழ் மூடினான்.. இப்போது அனுராதா விலகவில்லை..
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.