Chapter 33

0Shares

நீ வரும் பாதையில் பூப்போட்டேன்..

நிழலாக உன்பின் வரும் வரம்கேட்டேன்..

     பாதையை மாற்றிக் கொள்ள நினைக்காதே

பாதியில் பயணத்தை முடிக்காதே..

     காதலாகி.. கசிந்துருகி..

நிச்சயதார்த்தமும் முடிந்து விருந்தினரும் மாப்பிள்ளை வீட்டினரும் கிளம்பிப் போய் விட்டார்கள்.. கவிதா தனிமையில் மாப்பிள்ளையுடன் பேசிய நிமிடங்களை மனதிற்குள் அசைபோட்டுப் பூரித்துக் கொண்டிருந்தாள்..

சந்தியா கிளம்பினாள்.. எல்லாரிடமும் சொல்லிக் கொண்டாள்.. ரேணுகா.. இரண்டு பைகளில் இனிப்புகளையும் பழங்களையும் போட்டுக் கொண்டு வந்தாள்.. ஜீவாவிடமும் சந்தியாவிடமும் நீட்டினாள்..

“குமார் சந்தியாவை பத்திரமாய் அவளுடைய ஹாஸ்டலில் கொண்டு போய் விட்டு விட்டு வா.. பாவம் காலையில் வந்தவள் ஓடியாடி வேலை பார்த்து ஓய்ந்து போயிருக்கிறாள்.. ஜீவா நீ இல்லைன்னு வை.. இந்த விசேசத்தை நடத்தி முடித்திருக்கவே முடியாது..” ரேணுகா மனமார்ந்த நன்றியுடன் கூறினாள்..

“நான் இல்லாமல் எங்கே போய் விடப் போகிறேன்..? கவிதா என் தங்கைம்மா நான் கைபிடித்து அவளுடைய புருசனின் கையில் கொடுத்து கண்கலங்க.. 

‘ஆனந்தா.. என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைக்கிறேன்.. அதில் ஆனந்த கண்ணீரை மட்டும்தான் நான் பார்க்கனும்’ன்னு வசனம் பேச வேண்டியது என் கடமைம்மா..”

ஜீவா கவிதாவைப் பார்த்தபடி கேலியாகக் கூற..

“போங்கண்ணா..” என்றுகவிதா கேலியாகச் சிணுங்கினாள்..

குமார் சந்தியாவை விட்டுவிட்டு வர வண்டிச் சாவியைத் தேட..

“குமார்.. நான் போகும் போது சந்தியாவை விட்டு விட்டுப் போகிறேன்.. நீ ரெஸ்டு எடு..” என்றான் ஜீவா..

குமார் ஆச்சரியத்துடன் ஜீவாவைப் பார்த்தான்.. அவன் இதற்கு முன்னால் இப்படிச் சொன்னதில்லை என்பதைவிட அதற்கு சந்தியா மறுப்புச் சொல்லாமல் இருந்தது தான் குமாருக்கு கூடுதல் ஆச்சரியமாக இருந்தது.

“அதுவும் சரிதான்.. சந்தியாவை ஜீவாவே விட்டுவிட்டுப் போகட்டும் குமார்.. நீ அந்த சேர்களை எண்ணிவை.. காலையில் கணக்கை சரி பார்த்து ஒப்படைக்கனும்..”

ரேணுகாவுக்கு அவள் கவலை.. ஜீவா மெல்லிய சிரிப்புடன் கிளம்பினான்.. கவிதா வாசல் வரை வந்து இருவரையும் வழியனுப்பி வைத்தாள்..

“என்ன அண்ணா கடைசியில் அல்லிராணி மனதை ஜெயித்து விட்டீங்க போல..”

“இந்த அல்லி ராணிதான் இந்த அர்ஜீனனின் மனதை ஜெயித்து விட்டாள்..”

“அதுதான் ஏற்கனவே தெரியுமே.. இப்பக் கல் எப்படி கரைந்ததுங்கிற கதையை எனக்குச் சொல்லுங்க..”

“எங்க கதை உனக்கெதுக்கு.. நீ சாயங்காலம்.. மாப்பிள்ளை உன்னிடம் தனியாக பேசிய கதையை நினைத்துப் பார்த்து உருகிக் கொண்டிரு..”

கவிதாவுக்கு கையாட்டி விட்டு ஜீவா தன் வண்டியைக் கிளப்ப.. சந்தியா அவன் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்.. வளைவினில் வண்டி திரும்பியதும்.. அவன் தோளில் கை போட்டுக் கொண்டாள்.. சாலையின் ஸ்பீடு பிரேக்குகளில் வண்டி ஏறி இறங்கிய போது அவன் முதுகோடு ஒட்டி அமர்ந்து கொண்டாள்..

ஜீவாவிற்கு வானில் பறப்பது போல் இருந்தது.. சந்தியாவின் மூச்சுக்காற்று முதுகில் படுவதை உணர்ந்தவாறு பயணித்துக் கொண்டிருப்பது அவனுக்கு பரம சுகமாக இருந்தது..

வண்டி கன்யாகுமாரியின் கடைத்தெரு இருந்த சாலையின் பக்கம் திரும்பியது..

“டூ வீலர் எங்கே போகுது..?” சந்தியா செல்லமாக வினவினாள்..

“டூ வீலர் ரோட்டில் போகுது..” என்றான் ஜீவா..

“அது தெரியுது சார்.. என் ஹாஸ்டல் பக்கம் போகாமல் வேற பக்கம் போகுதே என்ன சமாசாரம்..? என்னைக் கடத்திக் கொண்டு போகிறீங்களா..?”

“ஆமாம்ன்னு சொன்னால் என்ன செய்வாய்..? கத்தி ஊரைக் கூட்டுவாயா..?”

“ஊம்.. வண்டியிலிருந்து குதித்து ஓடுவேன்..”

“எப்படி ஓடுவாய்..?”

“நீங்க எப்படி ஓடுவீங்களோ அப்படித்தான் நானும் ஓடுவேன்..”

“கத்திக் கொண்டே ஓடுவாயா..?”

“பின்னே.. வாய் எதுக்கு இருக்காம்..?”

“சாப்பிடுவதற்கும் பேசுவதற்குமினுல்ல நான் நினைச்சேன்..”

“ஆபத்து சமயத்தில் கத்துவதற்கும் சேர்த்துத்தான் வாய் இருக்கிறது..”

“ஈஸிட்..? எப்படிக் கத்துவாய்..?”

“காப்பாத்துங்க.. காப்பாத்துங்கன்னு கத்துவேன்..”

“ஏன் சந்தியா..?”

ஜீவாவின் குரலில் ஏன் மர்மம் கலந்து மிருதுத் தன்மை ஒலிக்கிறது என்று புரியாதவளாய் சந்தியா..

“சொல்லுங்க..” என்றாள்..

அவன் சொன்னான்.. அவள் கிளர்ந்து அவன் முதுகில் செல்லமாகக் குத்திச் சிணுங்கினாள்..

0Shares

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link