Chapter 33
மாளவிகா பொல பொலவென்று கண்ணீர் விட்டாள்.. அவளின் அந்தக் கண்ணீர் ரமணனைக் கரைக்கவில்லை.. கண்ணீர் வற்றும் வரை அழுது முடித்தவளிடம் மீண்டும் காபிக் கோப்பையை நீட்டினான் ரமணன்.. வெறுப்புடன் அதைத் தட்டி விடப் போனாள் மாளவிகா.. லாவகமாக கையை விலக்கி காபிக் கோப்பையை காப்பாற்றி விட்டான் ரமணன்…
“இந்த மூணு நாளா மயக்கத்தில வச்சிருந்ததைப் போலவே கொஞ்ச நாளைக்கு வைத்திருந்திருக்கனும்.. அதை விட்டுட்டு.. மயக்கம் தெளிய விட்டதுதான் தப்பாப் போச்சு…”
“என்னது…?”
மாளவிகா அரண்டு போனவளாக சுவரைப் பார்த்தாள்.. நாள்காட்டியின் தேதி.. ரமணன் சொன்னதை உண்மையென்று சொன்னது.. நம்ப முடியாதவளாக அவளுடைய செல் போனைத் தேடினாள்.. கிடைக்க வில்லை.. அருகிலிருந்த ரமணனின் செல் போனைக் கைப்பற்றி தேதியைப் பார்த்தாள்.. அது நாள் காட்டி சொன்னதை உண்மையென்று ஊர்ஜிதம் செய்தது…
“மூணு நாளா மயக்கத்தில் இருக்கேனா..?”
“யெஸ்.. ஜீஸ்.. பால்ன்னு எதைக் கொடுத்தாலும்.. மயக்கத்தில கேள்வியே கேட்காம குடிச்சு வச்சிருவ.. என்மேல உனக்கு இருந்த மயக்கம் தெளிஞ்சதைப் போல இந்த மயக்கமும் இப்ப தெளிஞ்சிருச்சில்ல.. என்னைத் தட்டிக் கழிச்சதைப் போல.. காபியையும் தட்டி விடப் பார்க்கிற..”, குத்தலாகப் பேசினான் ரமணன்..
“என் வீட்டிலே தேடுவாங்க ரமணன்..”
“தேடினாங்களாம்.. ஆனா.. உன் செல்லில இருந்து அஸ்வினோட செல்லுக்குப் போன மெஸேஜைப் பார்த்ததும் தேடறதை நிப்பாட்டிட்டாங்களாம்.. தாமஸ் போனில் சொன்னான்…”
“என் செல் போனில் இருந்து அஸ்வினோட செல்லுக்கு மெஸேஜ் போச்சா..? எப்படி..? நான் அனுப்பலையே…”
“நான் அனுப்பினேனே…”
“நீங்களா…?”
“நானேதான்..”
“என் செல் உங்க கைக்கு எப்படி வந்துச்சு..?”
அபத்தமாகக் கேட்டுவிட்டு.. தன் புத்திசாலித் தனத்தை நொந்துபோனவளாக தலையில் கை வைத்துக் கொண்டாள் மாளவிகா..
“நீயே என் கைக்கு வந்தாச்சு.. உன் செல் என் கைக்கு வராதா..?” ஏளனமாகக் கேட்டான் ரமணன்…
“என்னன்னு மெஸேஜ் அனுப்பினீங்க..?” துடிக்கும் இதயத்துடன் கேட்டாள் மாளவிகா..
“கார்த்திக்குடன் கல்யாணம் பேசினது பிடிக்க வில்லை.. என் காதலரைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு அவருடன் வாழப் போகிறேன்னு நீ சொன்னதா மெஸேஜ் போயிருக்கு..”
“கடவுளே…”
“அவரை எதுக்காக டிஸ்டர்ப் பண்ற..?”
“என்னைப் பத்தி என் வீட்டில் என்ன நினைச்சுக்குவாங்க…?”
“எங்கிருந்தாலும் வாழ்கன்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்களாம்..”
“யார் சொன்னது..?”
“உங்க வீடு இருக்கிற தெருவே சொல்லுது.. நீ அருமையான பெண்ணாம்.. உன் மனசில காதலிருக் காதுன்னு அவங்களா நினைச்சு கல்யாண ஏற்பாட்டை பண்ணிட்டாங்களாம்.. இப்படி நடக்கும்ன்னு அவங்களுக்கு தெரியாம போச்சாம்.. அதனால உன்மேல குத்தமில்லைன்னு சொல்றாங்களாம்.. நீ உன் புருசனோட திரும்பிப் போனா வாழ்த்தி வரவேற்க தயாரா இருக்காங்களாம்…”
“என்னது..?” கண் சிவந்தாள் மாளவிகா..
“இத்தனை கோபமும் எதுக்காகன்னுதான் எனக்குப் புரிய மாட்டேன்குது.. உன் வீடுதான் பிரச்னைன்னு சொன்ன.. இப்ப உன் வீடு.. உன் புருசன்னு யாரை நீ அறிமுகம் பண்ணி வைச்சாலும் ஏத்துக்கத் தயாரா இருக்கு.. அப்புறமும் உனக்கு என்னதாண்டி பிரச்னை..?” கேள்வி கேட்டான் ரமணன்..
“நீங்கதான் பிரச்னை..” பட்டென்று சொன்னாள் மாளவிகா..
“நானா..? சரியாப் போச்சு போ..”
“ஊஹீம்.. எதுவும் சரியாகலை.. என் வீட்டில் என் புருசன்னு யாரைக் கொண்டு போய் நான் நிறுத்தினாலும் ஏத்துக்குவாங்க.. உங்களை மட்டும் ஏத்துக்கவே மாட்டாங்க.. அதிலும் என் அப்பா ஹார்ட் பேசண்ட்.. அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திரும்.. அந்த விசப் பரிட்சையில் இறங்க என்னால் முடியாது…”
“ஓகே.. நீ எந்தப் பரிட்சையிலயும் இறங்க வேணாம்.. விட்டிரு..” இலகுவாகச் சொன்னான் ரமணன்…
“விட்டு விடுவதா..? எப்படி..?”
“லுக் மாளவிகா.. நீ ஒருவழிப் பாதையில் வந்திட்ட.. திரும்பிப் போகிறதுங்கிறது நடக்காத விசயம்.. இனி உன் வாழ்க்கை என்னோடு தான்.. உன் கழுத்தில் தாலியைக் கட்டி.. உன் புருசனா.. உன் கூட குடும்பம் நடத்தினாத் தான் வாழ்க்கைன்னு இல்லை.. எனக்கு என் பக்கத்தில நீ இருந்தாப் போதும்.. வா.. இந்த வாழ்க்கையை நாம வாழலாம்..”
மாளவிகா சுற்றிலும் பார்த்தாள்.. ஆற்றங்கரை யோரமாக அமைந்திருந்த அந்த வீட்டைச் சுற்றி மரங்களும்.. தோப்புக்களும் அடர்ந்திருந்தன.. ஆற்றுக்கு அந்தப் பக்கமாக தெரிந்த அடர்ந்த காடு அவளை அச்சுறுத்தியது…
“இது எந்த இடம்..?”
“தெரிஞ்சு என்ன செய்யப் போற..?”
“என் செல் போன் எங்கே ரமணன்..?”
“வேலை முடிஞ்சதும்.. சிம் கார்டை எடுத்துட்டு.. தலையைச் சுற்றித் தூக்கியெறிஞ்சுட்டேன்..”
“என் வேலை..?”
“இப்போதைக்கு உன் சார்பில டைப்படிச்ச லீவ் லெட்டர் போயிருக்கு…”
“நான் சைன் பண்ணலியே…”
“உன் கையெழுத்தை நான் போட மாட்டேனா..?”
“நீங்க அதையும் செய்வீங்களா..?”
“எவ்வளவோ செஞ்சுட்டேன்.. இதைச் செய்ய மாட்டேனா..?”
மாளவிகா சோர்ந்து போனவளாக தரையில் சரிந்து அமர்ந்து முழங்கால்களைக் கட்டி அதில் முகம் புதைத்தாள்..
அவளைத் தனிமையில் விட்ட ரமணன் கீழே இறங்கிச் சென்று விட்டான்.. வெகு நேரம் கழித்து மாளவிகா தலை தூக்கிப் பார்த்தபோது இருள் படலம் கவிய ஆரம்பித்திருந்தது.. பகலில் அழகாகத் தெரிந்த ஆறும்.. காடும்.. இரவில் அவளை அச்சுருத்தின…
‘அந்தப் பக்கம்.. சிங்கம் புலி கரடியெல்லாம் இருக்குமோ…’
வந்தால் வரட்டும்.. போய்ச் சேர்ந்து விடலாம் என்ற விரக்தி எண்ணமும் அவளுக்கு வரவில்லை..
ஏதோ ஒரு வகையில் கார்த்திக்குடனான அவளின் திருமணம் நின்று போனதில் என்று மனதுக்குள் லேசாக உணர்ந்தாள் மாளவிகா.. இப்போது ரமணன் இருக்கும் மனநிலையில் அவனிடம் எதைப் பேசினாலும் எடுபடாது.. போகப் போக எடுத்துச் சொன்னால் கேட்டுக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்குள் வந்தது.. அப்போது அவளை சென்னைக்கு கொண்டு போய் கட்டாயம் விட்டு விடுவான் என்று அவள் நினைத்தாள்..
அவளுடைய குடும்பம் அவள் சொல்வதைக் கேட்டுக் கொள்ளும்.. மற்றவர்களிடம் வேலை விசயமாக வெளிநாடு போனேன் என்று சொல்லிக் கொள்ளலாம் என்ற அவசர முடிவையும் அவள் தீர்மானித்தாள்…
இந்த தீர்மானங்களுக்குப் பின்னால்.. அவளால் இயல்பாக நடமாட முடிந்தது.. சோர்வுடன் படியிறங்கிப் போனாள்.. சிறிய ஹால் வெளிச்சத்துடன் இருக்க.. அதையொட்டிய சமையலறையில் அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான் ரமணன்.. உள்ளே எட்டிப் பார்த்தாள்.. சப்தம் கேட்டுத் திரும்பியவன்..
“வந்துட்டியா.. இப்பவாவது காபி சாப்பிடறியா..?” என்று கேட்டான்..
“ம்ம்ம்..” அவள் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.. ரமணன் மீண்டும் எதையோ கிளற ஆரம்பித்தான்…
“என்ன செய்கிறிங்க..?” என்று கேட்டாள்..
“பூரியும்.. உருளைக்கிழங்கும்.. பண்ணிக்கிட்டு இருக்கேன்.. உனக்குப் பிடிக்குமில்ல..?”
பிடிக்கும் என்று தலையாட்டிய போது.. அந்தச் சூழலையும் மாளவிகாவுக்கு பிடித்துப் போனது…
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.