Chapter 37

0Shares

எட்டநின்று கண் சிமிட்டும் வெந்நிலவே..!

          என்னை நீயும் வெறுப்பதென்ன வெந்நிலவே..!

    உன்னருகில் நானிருக்க கூடாதா..?

உன் மனதை எனக்குத் தந்தால் ஆகாதா..?

     காதலாகி.. கசிந்துருகி..

வெண்ணை திரண்டு வரும்போது பாத்திரம் உடைந்த கதையாய் சந்தியா முகமெல்லாம் மலர ஜீவாவின் பின்னால் அவனுடைய வண்டியில் உட்கார்ந்து வந்ததைப் பார்த்த போது காயத்ரிக்கு மேனியில் யாரோ ஒரு மூட்டை மிளகாயை அவரைத்து அப்பியதைப் போல இருந்தது..

“கவிதாவின் நிச்சயத்திற்குப் போகனும் காயத்ரி..”

முதல் நாள் இரவு தூங்கப் போவதற்கு முன்னால் சந்தியா இதைச் சொல்லியவாறு அலாரம் வைத்தபோதே காயத்ரிக்கு ‘பக்’கென்று இருந்தது..

“கவிதான்னு யாரைச் சொல்கிற.. குமாரின் தங்கையைச் சொல்கிறாயா..?”

“ஆமாம்..”

சந்தியா நிம்மதியாய் தூங்கிவிட காயத்ரி விடியும் வரை கண்விழித்தாள்..

அதிகாலையில் சந்தியா எழுந்து கிளம்பிக் கொண்டிருந்த போது.. அசிரத்தையாய் கேட்பதைப் போல காயத்ரி..

“குமாரின் தங்கையின் நிச்சயதார்த்தம்ன்னா.. அந்த ஜீவாவும் வருவானில்ல..” என்று கேட்டு வைத்தாள்..

“எனக்கென்ன தெரியும்..” என்று எரிச்சலுடன் பதில் சொன்னாள் சந்தியா..

‘இப்படி ஒன்றும் தெரியாததைப் போல் பாவ்லா பண்ணித்தானே அவனை உன் பின்னால் சுற்ற வைத்தாய்..’ காயத்ரி மனதிற்குள் வெந்து கொண்டாள்..

“அப்படியில்லை சந்தியா.. குமார் ஜீவாவிற்கு பிரண்ட்.. கவிதா உனக்கு பிரண்ட்.. இரண்டு பேரும் இந்த விசேசத்தில் சந்தித்துக் கொள்ள சான்ஸ் இருக்கிறது..” காயத்ரி கவனமாக வார்த்தைகளைக் கோர்த்தாள்..

“விசேச வீட்டிற்கு நூறு ஆள் வந்து போவாங்க.. அதையெல்லாம் நான் கணக்கில் வைத்துக் கொள்ள முடியுமா..” சந்தியா.. பட்டுச் சேலையையும்.. முத்து நகைப் பெட்டியையும் எடுத்து தன் கைப் பையில் வைத்தாள்..

‘இந்தச் சேலையைக் கட்டி முத்து நகை செட்டைப் போட்டால் இவள் அப்சரஸ் போல இருந்து தொலைப்பாளே..’ காயத்ரியின் மனம் பதறியது..

“பட்டுச் சேலையெல்லாம் எதுக்கு சந்தியா.. இந்த வேக்காட்டில் போய் அதை கசகசன்னு கட்டிக் கொள்ளனுமா..?” காயத்ரி அக்கறையாய் கூறுவதைப் போல கூறினாள்..

“எனக்கும் பிடிக்கவில்லைதான்.. ஆனால் சிம்பிளாய் நின்றால் கவிதாவின் அம்மா என்னைத் திட்டி அவங்களுடைய புடவையைக் கட்டி.. நகைகளைப் போட்டுக் கொள்ளச் சொல்லுவாங்க.. உனக்கே தெரியும்.. எனக்கு இரவல் நகையும் சேலையும் பிடிக்காதுன்னு..” சந்தியா காயத்ரியைத் திரும்பிப் பார்த்துப் பதில் சொன்னாள்..

‘உனக்குப் பிடிக்காதுன்னு நீ சொன்னாலும் உன்னைத் தாங்கித் தடுக்கத்தான் ஆள்கள் காத்துக் கொண்டிருக்கிறாங்களே..’ பொறாமையில் வயிறெரிந்தாள் காயத்ரி..

“அப்போ கட்டாயம் போகனுமுன்னு உறுதியாக இருக்கிறாயா..?” காயத்ரி மானசீகமாய் கையைப் பிசைந்தாள்..

“ஆமாம் இதிலென்ன சந்தேகம்..?” சந்தியா கைப்பையுடன் வெளியே அடியெடுத்து வைத்தான்..

“சந்தியா..”

போகிறவளை பின்னாலிருந்து அழைக்கக் கூடாது என்ற வளமையெல்லாம் காயத்ரிக்கும் நன்கு தெரியும்..

ஆனால் அவள் வேண்டுமென்றே சந்தியாவை பின்னாலிருந்து கூப்பிட்டாள்..

“என்ன காயத்ரி..”

இதுபோன்ற நம்பிக்கையெல்லாம் இல்லாத சந்தியா வெள்ளை மனத்துடன் நின்று திரும்பிப் பார்த்தாள்..

“நானும் உன்கூட வரவா..? ஏன் கேட்கிறனென்றால் இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே.. நீயில்லாமல் எனக்கும் போரடிக்கும்..”

காயத்ரி சாதுர்யமாக தன் கோரிக்கையைச் சொன்னாள்.. சந்தியாவுடன் சென்றால் ஜீவாவும் அவளும் பேசிக் கொள்வதை நிறுத்தி விடலாம்.. என்பது அவளுடைய கணிப்பு..

சந்தியா யோசித்தாள் பின்..

“வேண்டாம் காயத்ரி..” என்று மறுத்து விட்டாள்..

காயத்ரியின் முகம் விழுந்து விட்டது..

“ஏன் சந்தியா..” என மனத்தாங்கலாக கேட்டாள்..

“கவிதா என்னுடைய பிரண்ட்.. சொந்தக் காரியில்லை.. அவள் வீட்டு விசேசத்திற்கு நான் போகலாம்.. கூட யாரையும் அழைத்துப் போகக் கூடாது.. அது சரிவராது.. இதுவே சொந்தக்காரங்க வீட்டு விசேசம்ன்னா நீ சொல்லாமலேயே.. உன்னைக் கூப்பிட்டுக் கொண்டு போவேன்..”

காயத்ரி தடுக்க வழி தராமல் சந்தியா கிளம்பிப் போய் விட்டாள்.. அவள் திரும்பி வரும் வரைக்கும் பதைப்புடன்.. ஜன்னல் வழி பார்த்துக் கொண்டிருந்த காயத்ரிக்கு.. ஜீவாவுடன் அவள் இணைந்து வந்து இறங்கி சிரித்துப்பேசி கொஞ்சி விலகியதைக் கண்டபோது தாங்க முடியாமல் போனது..

0Shares

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link