Chapter 34
வாசவி பட்டுப் புடவையில் அழகாக இருந்தாள்.. வருகின்றவர்களுக்குப் பன்னீர் தெளித்தபடி.. சந்தோஷ் படியேறி வருவதையே கவனித்துக் கொண்டிருந்தாள்.. அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த சந்தோஷ்.. லேசாகக் கண்சிமிட்டினான்.. அவன் அருகே வந்து சந்தனத்தில் விரல் வைக்கும் போது.. தாழ்ந்த குரலில் சீறினாள் வாசவி..
“காலங்கார்த்தாலேயே உங்க வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டிங்களா..?”
அவன் பதில் சொல்லாமல் புருவங்களை உயர்த்திச் சிரித்தான்.. அவனது சிரிப்பில் மயங்கி நின்று விட்டாள் வாசவி..
‘என்னமாய் அழகாய்ச் சிரித்துத் தொலைக்கிறான்..’
“சிரித்து மயக்க வேண்டாம்.. மண்டபத்துக்குள்ளே போங்க..”
“யார் மயக்குவது..? நீ என்னை மயக்குகிறாயா..? இல்லை, நான் உன்னை மயக்குகிறேனா..?”
“நான் உங்களை மயக்குகிறேனா..? இது என்ன புதுப்பழி..”
“நேற்று வரை சின்னப் பெண் போல இருந்துவிட்டு.. இன்றைக்குச் சேலை கட்டி.. பெரிய பெண் போல அசத்து கிறாயே..”
“போதும்.. ரொம்பவும் ஜொள் விடாதீங்க..”
“ஜொள்ளா.. ஹா.. ஹா..”
அவர்கள் இருவரும் ரகசியக் குரலில் பேசிக் கொண்டிருப்பதை ராமகிருஷ்ணன் கவனித்து விட்டார்..
“ஜானகி..! அங்கே பார்..” என்றார்..
ஜானகி திரும்பிப் பார்த்தாள்.. அவள் முகமும் மாறியது..
“கவனித்தாயா..?”
“கவனித்தேன்..”
“புரிகின்றதா..?”
“உள்ளங்கை நெல்லிக் கனி போல் புரிகின்றது..”
“நம்ம பையன் முகத்தில் இத்தனை ஜொலிப்பை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லைடி..”
“பொண்ணும் அழகாகத்தான் இருக்கிறாள்.. யாராலும் வளைக்க முடியாத சந்தோஷின் மனத்தையே வளைத்து.. அவனைச் சிறைப் பிடித்து விட்டாளே.. கெட்டிக்காரிதான்..”
“நம்ம சுகந்தியின் நாத்தனார்தான்.. அன்னியம்.. அசலில்லை.. காளிதாஸ் அறந்தாங்கியில் பெயர் பெற்ற வியாபாரி.. பெண்ணின் வீடு எனக்குத் திருப்தியாக இருக்கிறது ஜானகி..”
“பெண் துறுதுறுன்னு இருக்கிறாள்.. அழகாக இருக்கிறாள்.. படித்திருக்கிறாள்.. இத்தனைக்கும் மேலாக நம் சந்தோஷிற்கு அவளைப் பிடித்திருக்கிறது.. இதைவிட வேறென்ன வேண்டும்..? அவன் மனதுக்குப் பிடித்த ஒரு பெண் மருமகளாக நம் வீட்டிற்குள் நுழைந்து விட்டால் போதும்.. வேறென்ன வேண்டும்.. சொல்லுங்க..”
அவர்கள் இருவரும்.. படியேறி வருவதைக் கவனித்த வாசவி.. அவசரமாய் முகத்தைச் சரியாக வைத்துக் கொண்டாள்.. ஏன் இந்தத் திடீர் மாற்றம்.. என்ற யோசனையுடன் திரும்பிப் பார்த்த சந்தோஷ்.. பெற்றோரைக் கண்டதும் புன்னகைத்தான்..
“என்னம்மா.. வாசவி.. கல்யாண வேலைகள் எல்லாம் எப்படி நடக்குது..?” ஜானகி பரிவுடன் விசாரித்தாள்..
“நன்றாக நடக்கிறது அத்தை..” பவ்யமாய்ப் பதில் கூறிய வாசவி.. அவர்கள் இருவரின் மீதும் பன்னீர் தெளித்தாள்..
“எனக்கு மட்டும் ஒரு சொட்டுத் தெளித்து விட்டு.. என் அப்பா.. அம்மாவை மட்டும் பன்னீரிலேயே குளிக்க வைக்கிறாயே.. இருந்தாலும் உனக்கு.. இந்த ஓரவஞ்சனை ஆகாது வாசவி..” சந்தோஷ் வம்புக்கு இழுத்தான்..
ராமகிருஷ்ணன்.. ஜானகியின் முன்னிலையில் அவன் வம்பிழுக்கவும்.. பதில் பேச முடியாமல் முகம் சிவந்தாள் வாசவி.. அதை ரசித்துப் பார்த்தான் சந்தோஷ்.
ஜாடையாய் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்ட சந்தோஷின் பெற்றோர் உள்ளே போய் விட.. சந்தோஷ் போகாமல் தேங்கி நின்றான்..
“உள்ளே போகும் உத்தேசமில்லையா..?”
“அங்கே போய் என்ன செய்வது..?”
“கல்யாணத்தைப் பார்ப்பது..”
“நான் உன்னைப் பார்க்கத்தானே இங்கே வந்தேன்.. கல்யாணத்தை என் அப்பாவும்.. அம்மாவும் பார்ப்பாங்க.. கவலையை விடு..”
“அத்தை.. மாமா முன்னால் என்னை வம்புக்கு இழுக்கறீங்களே.. அவங்க என்ன நினைத்துக் கொள்வாங்க..?”
“மகன் பச்சைக் கொடி காட்டி விட்டான்னு நினைத்துக்குவாங்க..”
“அது எப்படி.. அப்படி நினைப்பாங்களாம்..”
“உனக்கு என் பேரண்ட்ஸைப் பற்றித் தெரியாது.. அவங்க இரண்டு பேருக்கும் சூட்சும புத்தி அதிகம்..”
“உங்களைப் பெத்தவங்களாச்சே..”
“இது பாராட்டா.. இல்லை, வேறு எதுவுமா..?”
“உங்களை என்ன வேண்டுமானாலும் சொல்லு வேன்.. அத்தை.. மாமாவைப் போய் எதுவும் சொல்வேனா.. ஸோ.. டெபனிட்டாய் அது பாராட்டுத்தான்..”
“கெட்டிக்காரிடி.. நீ.. பிழைத்துக் கொள்வாய்..”
சந்தோஷ் வாசவியைக் காதலுடன் பார்க்க.. அவள் அவனைப் பார்த்து வெட்கப் புன்முறுவல் பூத்தாள்.. அதைத் தற்செயலாய்க் கவனித்த சுமதியின் முகம் கறுத்தது..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.