Chapter 13
என் நெற்றியில் மின்னும் குங்குமம்…
என் நெஞ்சினில் என்றுமே உன் முகம்..
வழக்கம் போல படித்துறையின் பக்கவாட்டுச் சுவரில் அமர்ந்தபடி லலிதாவிடம் பேசிக் கொண்டிருந்த மித்ரன், தூரத்தில் காயத்ரிதேவி வருவதைப் பார்த்து விட்டான்.
“சித்தி…! அந்தப் பெண் வருகிறாள்…” என்று மெதுவான குரலில் சொன்னான்..
“யார் தேவியா வருகிறது…?” லலிதா திரும்பிப் பார்த்தாள்.
அதற்குள் காய்த்ரிதேவி அவர்களை சமீபித்து விட்டாள். அவள் பார்வை வியப்புடன் லலிதாவின் மீது படிந்தது. அவளது பார்வையைக் கண்ட லலிதா இயல்பாகப் புன்னகைத்தாள். பதிலுக்கு புன்னகைத்த காயத்ரிதேவி –
“உங்களை இன்றைக்குத்தான் இந்த ஆற்றங்கரைப் பக்கம் பார்க்கிறேன்…” என்று சொன்னாள்.
லலிதா பேச முடியாமல் உதடு கடித்தாள். இந்தச் சின்னப் பெண்ணிற்குக் கூட தன் நிலைமை தெரிகிறதே என்ற சங்கடம் அவளுக்கு. மித்ரன் அதைக் கண்டு கொண்டான். பேச்சை இலகுவாக்க விரும்பியவனாய் –
“எல்லாம் குயில்பாட்டைக் கேட்கத்தான். இத்தனை நாளும் வெளியே வராத என் சித்தி.. இன்றைக்கு ஆற்றங்கரைப் பக்கம் வந்திருக்காங்க..” என்றான்.
“குயில்பாட்டா…?” லலிதா புரியாமல் கேட்க.. காயத்ரியின் முகம் சிவந்து விட்டது…
“இவர் என்னைக் கேலி செய்கிறார் அர்த்தை..” என்றாள் அவள்.
“எங்க மித்ரன் கேலி செய்யும் ஆளில்லையேம்மா..” லலிதா அக்காள் மகனை விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.
“உங்க வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளியை நீங்க விட்டுக் கொடுப்பீங்களா…? ஆமாம்.. இவர் உங்களுக்கும் மித்ரன்தானா…?” காயத்ரி மித்ரனைப் பார்த்துக் கொண்டே லலிதாவிடம் வினவினாள்.
அவர்கள் இருவருக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை லலிதா சட்டென்று புரிந்து கொண்டு விட்டாள். காயத்ரி மித்ரனைப் பார்ப்பதும்.. அவன் பார்க்கும் போது வேறு திசையில் பார்ப்பதுமாக புதிய உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததை லலிதாவால் புரிந்து கொள்ள முடிந்தது.
‘இந்தப் பெண்ணுக்கு வேறு இடத்தில் கல்யாணம் பேசிக் கொண்டிருக்கிறாங்களே…’ என்ற யோசனையுடன் மித்ரனை அவள் பார்த்தாள்.
அருகில் லலிதா இருப்பதை மறந்து போனவனாக.. அவன் காயத்ரிதேவியை விழுங்கிவிடுவது போலப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களின் மோன நிலையைக் கலைக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளான லலிதா,
“இவன் எனக்கு மட்டுமில்லை. இந்த ஊர் உலகத்திற்கும் மித்ரன்தான்…” என்று சிரித்தாள்.
‘அப்படியா.. நீ எல்லோருக்கும் நண்பனா…’ மனம் இனிக்க மித்ரனைப் பார்த்துக் கொண்டாள் காயத்ரி.
“நீ எங்கே வந்தாய் தேவி…?” லலிதா ஆற்றின் அழகை மறந்து எழுந்து கொண்டாள்.
“அது சரி.. நீங்கள் தான் புதிதாக இந்த ஆற்றங்கரைக்கு வந்திருக்கிறீங்க.. அதனால்.. நான்தான் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும். நான் வழக்கம் போல.. ஆற்றங்கரை அரசமரத்தடி பிள்ளையாருக்கு விளக்குப் போட வந்தேன். நீங்க எதுக்கு வந்தீங்க…? உங்க வீட்டு விருந்தாளிக்கு ஆற்றங்கரைக்கு தனியாக வர பயமாக இருக்கும்ன்னு துணைக்கு வந்தீங்களா…” காயத்ரி ஓரக் கண்ணால் மித்ரனைப் பார்த்துக் கொண்டாள்.
லலிதா அயர்ந்து விட்டாள். காயத்ரி மித்ரனைப் பார்த்து இப்படிச் சொல்லுவாள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தன் மனதில் இருக்கும் காதல் உணர்வுகளை இப்படி கேலிவார்த்தைகளால் வெளிப் படுத்தும் பெண்ணின் இயல்பை லலிதா அறியாதவளா என்ன..? அவளும் காயத்ரியின் வயதைக் கடந்து வந்தவள்தானே…
அவளுடைய முகமாற்றத்தைக் கவனிக்காமல் மித்ரன் முகம் மலர்ந்து போனான்.
“ஹலோ.. நான் துணைக்கு ஆள் தேடுபவனில்லை. வேண்டுமானால் உங்களுக்குத் துணையாக நான் வந்து காட்டவா…?”
மித்ரனின் இந்த பதிலைக் கேட்டு.. காயத்ரிதேவி சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்க்க.. அதை எதிர்பார்த்துக் காத்திருந்த மித்ரனின் பார்வை.. அவள் பார்வையைக் கவ்விக் கொண்டது.
“அப்படியா.. இவர் எனக்குத் துணையாக வந்து விடுவாரா…? இவருக்கு அவ்வளவு தைரியம் இருக்கிறதா அத்தை…?” காயத்ரி பேச்சில் லலிதாவை ஊடே வைத்துக் கொண்டாள்.
“நான் மாவீரன் நெப்போலியன் சித்தி.. என் பெருமைகளை இவங்ககிட்ட சொல்லுங்க.. அப்போதாவது.. என் மீது பயம் வருகிறதான்னு பார்ப்போம்..” மித்ரனும் லலிதாவை ஊடே வைத்து காயத்ரியிடம் வார்த்தையாட ஆரம்பித்தான்.
“நெப்போலியனெல்லாம்.. பிரான்ஸ் பக்கம் போக வேண்டியதுதானே அத்தை.. இது சோழ ராஜ்யம்.. புன்னைவனத்துக்குள் இவர் எப்படி வந்தாருன்னு கேளுங்க அத்தை..”
“அடேங்கப்பா.. இவங்க பெரிய குந்தவை தேவி.. அப்படியே வந்தியத்தேவனை எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்காங்க. நான்தான் வந்தியத்தேவன்னு நினைத்துக் கொள்ளும்படி சொல்லிவிடுங்க சித்தி..”
“இதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம் அத்தை.. அந்த வந்தியத் தேவனுக்கு இருக்கும் வாய்.. அப்படியே இவருக்கும் இருக்கிறது..”
“ஆனால் குந்தவை தேவியிடம் இருந்த அழகு.. இந்த தேவியிடம் இல்லையே சித்தி…”
“என்னைவிட அழகியை சென்னைப் பட்டணத்தில் பார்த்தவர் எதற்காக புன்னை வனத்துப் பக்கம் வந்தாருன்னு கேளுங்க அத்தை…”
“ஒரு மாறுதலுக்கு சைட் அடித்து விட்டுப் போகலாமென்றுதான் வந்தேன்னு சொல்லுங்க சித்தி…”
இதைக் கேட்டதும் காயத்ரிதேவிக்கு கண்களில் நீர் தளும்பி விட்டது. அவள் விடுவிடுவென்று படிகளில் இறங்கி.. ஆற்று நீரில் குடத்தை அமிழ்த்தினாள்.
அவள் முகத்தைக் கண்ட மித்ரன் துணுக்குற்று எழுந்தான். லலிதாவை மறந்து.. அவசரமாய் படியில் இறங்கி அவளருகில் சென்று குடத்தை இன்னொரு பக்கமாய் பற்றித் தூக்கினாள்.
Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.