Chapter 14

0Shares

ரகுவரன் மெக்கானிக்கல் என்ஜினியர்.. வானிலை ஆராய்ச்சியாளன் அல்ல..

அப்படியிருக்கும் போது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும்.. விதியே என்று வீணாக்காமல்.. உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்ற உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ரகுவரன் எதற்காக நகரும் மேகங்களை உற்று உற்றுப் பார்க்க வேண்டும்..?

அந்த வானிலை ஆராய்ச்சியின் பிண்ணனியில் ஏதோ ஒரு பைங்கிளி இருக்க வேண்டும் என்று இதுபோன்ற பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுப் பண்பட்டிருந்த பிரசன்னா உள்ளங்கையின் நெல்லிக் கனிபோல அறிந்து கொண்டான்..

அது யாராக இருக்கக்கூடும் என்று அவன் ஆராய்ந்த ஆராய்ச்சி அகழ்வாராய்ச்சியை விடத் தீவிரமாக இருந்தது..

ரகுவரனின் பிளாட் இருந்த அபார்ட்மென்டிற்கு எதிரே இருந்த வீடுகளில் எந்த இளம்பெண்ணும் தென்படவில்லை.. பேரிளம் பெண்கள்தான் தென்பட்டார்கள்..

‘இதுகளையா இவன் சைட் அடிக்கிறான்..?’

பிரசன்னாவிற்கு நம்பிக்கை வரவில்லை.. என்னதான் ரகுவரன் ஆண்ட்டி ஹீரோவாக இருந்தாலும் ஆண்ட்டிகளைக் காதலிக்கும் ஹீரோவாக ஆகியிருக்க மாட்டான் என்று மனதார அவன் நம்பினான்..

‘இவன் 16 வயதுப் பெண்ணையே ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்.. 61 வயது ஆண்டியையா உற்று உற்றுப் பார்க்கப் போகிறான்..?’

அவனுடைய ஆருயிர் நண்பனின் மனதைக் கவர்ந்த கிளி, எந்தக்கிளி..? என்ற பிரசன்னாவின் தேடுதல் ஒர் தினம் முடிவுக்கு வந்தது.. அவனும் ரகுவரனும் பேசிக் கொண்டே நடந்த ஒர் தினத்தில் பூர்ணிமா எதிர் பட்டாள்.. ரகுவரனின் கடும்பாறை முகம் கனிந்து மென்மை அதில் மேவியது.. ஒரு கோடி சூரியன்கள்.. ஒன்று சேர்ந்து வந்ததைப் போல அவனது விழிகள் பிரகாசித்தன..

‘ஆஹா..! இதுதான் அந்தப் பைங்கிளிh..?’

ரகுவரன் கோபக்காரன்.. அவனுக்கு எக்குத்தப்பாக கோபம் வரும் சமயங்களில் பிரசன்னாவே அவன் முகத்தைப் பார்த்துப் பேசப் பயப்படுவான்.. அந்த ரகுவரனின் முகத்தை அளவிட முடியாத ஆசையுடன் பூர்ணிமா பார்த்தாள்..

யாருடா இது என்ற பிரசன்னாவின் கேள்விக்கு எதிர் வீட்டுப் பெண் என்று ரகுவரன் பதில் சொன்னான்.. அடுத்த வீட்டுப் பெண் என்ற பழை….ய திரைப்படம் ஒன்றைப் பற்றி பிரசன்னா கேள்விப் பட்டிருக்கிறான்.. எதிர் வீட்டுப் பெண் என்ற டைட்டில் அருமையா இருக்கே.. இதைப் பற்றித் திரைப்படத் தயாரிப்பாளர்களின் காதுகளில் போட்டு வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்..

அவனுக்கு சில திரைப்படத் தயாரிப்பாளர்களைத் தெரியும்.. அவர்களுக்கு இவனைத் தெரியாது என்ற மிகப் பெரும் சங்கடத்தால் அந்த யோசனையை கைவிட்டு விட்டு ரகுவரன் பால்கனியில் 

நின்று கொண்டிருந்தபோது இவன் மறைந்திருந்து எதிர் வீட்டுப் பால்கனியை ஆராய்ந்தான்.. அப்போதுதான் பூர்ணிமா மறைந்திருந்து ரகுவரனை நோட்டமிடுவதைக் கண்டு பிடித்தான்..

“எங்கிருந்தாலும் அவளை

நீயறிவாய்..

அவளை உன்னையல்லால்

வேறு யாரறிவார்..?

பாவையுடன் பேச நாணமா..? – உன்

வீட்டுக்கு அவள் வர வேண்டாமா..?

மாயவா..! தூயவா..

மாதவா..! ரகுவரா..!

நீ மறைந்திருந்தே பார்க்கும்

மர்மம் என்ன..?”

சபாவில் அமர்ந்து பாடுவதைப் போல சோபாவில் கால்களை மடித்துச் சம்மனம் போட்டு அமர்ந்து பாகவதரைப் போல பிரசன்னா பாடியதில்..

“டேய்ய்….ய்..” என்று உரக்கச் சிரித்தான் ரகுவரன்..

“இது எத்தனை நாளா நடக்குது..?”

“எது..?”

கள்ளச்சிரிப்புடன் கேட்ட ரகுவரனின் முகத்தில் சன்னமான வெட்கம் பளிச்சிட்டதில் அயர்ந்து போனான் பிரசன்னா..

ஆண்கள் வெட்கப்பட மாட்டார்கள் என்று யார் சொன்னது..? முரட்டு ரகுவரன் வெட்கச் சிரிப்புடன் அகன்ற அந்த நொடி பிரசன்னாவின் மனதில் பசுமையாக பதிந்திருக்கிறது..

லோகநாதனால் அதிக நேரம் ஆராய்ச்சி பண்ண முடியவில்லை.. எந்தவித ரிப்பேரும் இல்லாமல் டயரின் ஓரமாகப் பதிந்திருந்த சின்னஞ்சிற ஆணியுடன் ஸ்கூட்டி ஜம்மென்று நின்று அவனைச் சவாலுக்கு அழைத்துக் கொண்டிருந்தது..

‘சப்பை மேட்டரு..’

பத்தே நிமிடங்களில் சரி பண்ணி விடக் கூடிய வேலை அது.. அதுவும்கூடத் தேவையில்லை என்பது லோகநாதனின் அபிப்ராயம்.. வண்டியை நிறுத்தாமல் ஓட்டியிருந்தால் அந்தச் சின்ன ஆணி டயரில் புதைந்து அமுங்கியிருக்கும்.. பஞ்சர் ஆகியிருக்காது..

‘இதை முதலாளிகிட்ட யார் சொல்றது..?’

பலராமனைப் பார்த்தான்.. அவன் எதையாவது பண்ணித் தொலை என்று முணுமுணுத்தான்.. கதிர்வேலனோ பலராமன் சொல்வதைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று காதோடு சொன்னான்..

“ஏண்டா.. நீங்க ரெண்டு பேரும் தப்பிச்சீட்டிங்க.. நான் மட்டும் மாட்டிக்கிட்டேன்ங்கிற ஆணவத்தில ஆலோசனை சொல்கிறீங்களாடா..?” அவர்களிடம் அடிக்குரலில் சீறினாலும் லோகநாதன் ரகுவரனின் கட்டளைக்கு அடி பணிந்து ஸ்கூட்டியை பார்ட் பார்ட்டாக பிரித்து விடுவதைப் போல பார்வையிட்டுக் கொண்டிருந்தான்..

“லோகு..” ரகுவரனின் குரலில்..

‘ஹப்பா..! விடுதலை கிடைச்சிருச்சுடா சாமி..’ என்று உற்சாகமாகிப் போன லோகநாதன்..

“சார்..” என்று எழுந்து நின்றான்..

“ஸ்கூட்டியை இன்னைக்குள்ள சரி பண்ண முடியாதில்ல..?”

ரகுவரனின் ஆழ்ந்த பார்வை லோகநாதன் என்ன பதிலைச் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியதில் அவன் பூம்பூம் மாடாகி தலையசைத்து..

“ஆமாம் சார்..” போட்டான்..

“உங்களைக் கஷ்டப்படுத்த எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு.. ஆனா பாருங்க.. ஸ்கூட்டி செம ரிப்பேர் கண்டிசனில இருக்கு..”

ரகுவரன் பூர்ணிமாவிடம் சொல்லிக் கொண்டிருக்க.. ‘அப்படியா..?’ என்பதைப் போல ஸ்கூட்டியைக் கள்ளப் பார்வை பார்த்து வைத்தான் லோகநாதன்..

அது கொம்பு முளைத்த காளை மாடு போல உறுமி அவன் மீது மோதக் கிளம்பி விட்டது போல பிரமை ஏற்பட்டதில் அரண்டு போனவனாக பார்வையைத் திருப்பி விட்டான்..

‘பழி ஓரிடம்.. பாவம் ஓரிடமா..?’ அங்கலாய்த்தது அவன் மனது..

“இன்னைக்குள்ள சரி பண்ண முடியாதுன்னு லோகு சொல்றான்..” தீவிரமாய் முகத்தை வைத்துக் கொண்டு ரகுவரன் சொன்னான்..

‘நான் எப்போச் சொன்னேன்..?’

பரிதாபமாக லோகநாதன் பலராமனைப் பார்த்தான்.. பலராமன் சிரிப்பை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டான்..

‘சிரிக்கவாடா செய்ற..?’

மௌனப் பார்வையுடன் நண்பனை முறைத்து விட்டு முதலாளி அடுத்ததாக என்ன கயிறைத் திரிக்கப் போகிறார் என்பதைக் கவனிப்பதில் கவனமானான் லோகநாதன்..

“நாளைக்கு ரெடியாகிரும்..”

பூர்ணிமா மறுநாளும் ஷெட்டிற்கு வர வேண்டும் என்று ரகுவரன் சொன்னதில் முகம் மலர்ந்து போனாள் பூர்ணிமா..

‘பார்த்தியா..?’

பலராமனின் விழி சமிக்ஞையில் ‘ஆமாம்டா..’ என்று பதிலுக்கு சமிக்ஞை செய்த லோகநாதன்..

“பரவாயில்லை.. அவசரமாப் பார்க்காம.. நிறுத்தி நிதானமாக செக் பண்ணி சரி பண்ணிக் கொடுங்க..”

என்ற பூர்ணிமாவின் அனுமதியில் ‘கேட்டுக்க’ என்பதைப் போல ஸ்கூட்டியைப் பார்த்து முறைத்தான்..

0Shares

Reviews — Akalvizhku / அகல் விளக்கு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link