Chapter 01
நாதஸ்வர ஓசையுடன் அந்தக் கல்யாண மண்டபம் களை கட்டியிருந்தது.. சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டபத்தின் முன்புறத்தில் ‘ஆகாஷ் வெட்ஸ் அனுராதா’ என்ற தட்டி வைக்கப் பட்டிருந்தது.. ஷாமியானா கட்டப்பட்டிருந்த வாயிலில் வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன.. இருபுறமும் குலை தள்ளிய அதன் தோற்றம் கரம் குவித்து வரவேற்பது போல் அழகாக இருந்தது.. வாசலின் இரு பக்கமும் குத்து விளக்கு ஓவியத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த சீரியல் விளக்குகள் ஒளிர்ந்தது.. பட்டுப்புடவை சரசரக்க திருமண வீட்டின் முக்கிய உறவினர்கள் இங்கும்
அங்கும் பரபரப்பாய் நடந்து கொண்டிருந்தனர்… தூரத்து உறவினர்கள் மண்டபத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர்..
வாசல்புறமாய் நீண்ட டேபிளின் மேல் விரிப்பு விரிக்கப்பட்டு அதன் மேல் சந்தனக் கிண்ணமும்.. குங்குமச் சிமிழும் வைக்கப்பட்டிருந்தன.. அவற்றின் அருகில் ஒரு தட்டு நிறைய ரோஜா மலர்களும் இன்னொரு தட்டு நிறைய கற்கண்டும் இருந்தன..
வாயில்புறமாய் நின்று வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தாள் மாப்பிள்ளை ஆகாஷின் தாயார் வசுந்தரா.. ஒரு பருமனான பெண்மணி.. கழுத்து நிறைய நகைகளும் கைகளில் இடைவெளி இல்லாமல் தங்க வளையல்களையும் அடுக்கிக் கொண்டு காரில் வந்து இறங்க..
“வாங்க அண்ணி.. நீங்கள்ளாம் இப்போதுதான் வருவதா..? மூன்று நாளைக்கு முன்னாலேயே வந்துவிட வேண்டாமா..?” என்று உபசாரமாய் கூறியபடி வரவேற்றாள் வசுந்தரா..
“நாளைக்குக் காலையில் நடக்கப் போகிற கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரியே வந்து விட்டேனென்று சந்தோசப்படு..” என்றாள் அவள்..
“என்ன அண்ணி இப்படிச் சொல்றீங்க.. இப்ப நிச்சய தார்த்தம் நடக்கப் போகுது.. அதுக்கு நீங்க இருக்க வேண்டாமா..?”
“எதுக்குடியம்மா.. என் மகளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் வேறு இடத்தில் நீ நிச்சயம் பண்ற வைபவத்தை நான் கண் குளிரப் பார்க்கலை என்கிற குறையா உனக்கு..?”
“என்ன அண்ணி செய்கிறது.. இங்கே முடியும் என்று யார்தான் நினைத்துப் பார்த்தார்கள்..? இன்னார்க்கு இன்னார்ன்னு இறைவன் எழுதி வைத்திருக்கிற கணக்கை யாரால் மாற்ற முடியும்..?”
“இறைவன் எழுதி வைத்த கணக்கில்லை வசுந்தரா.. தொண்டைமான் போட்ட கணக்கு.. சரியான கிழவரில்ல அந்த ஆளு.. உன்னையும் உன் புருசனையும் வளைக்க முடியாதுன்னு ஆகாஷை வளைச்சுப் போட்டு விட்டுப் போயிட்டார்..”
“எதுவாக இருந்தால் என்ன அண்ணி.. கல்யாணம் பேசி மணவறை வரைக்கும் வந்தாகி விட்டது.. இனிப் போனதைப் பேசிப் புண்ணியமென்ன..? நடக்கிறதைப் பார்ப்போம்.. எங்களுக்கென்ன வேண்டும்..? ஆகாஷின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும்.. அவ்வளவுதான்..”
“கழுவுற மீனில் நழுவுகிற மீனாய் பதில் சொல்கிற கெட்டிக்காரிதான்.. இந்தக் கெட்டிக்காரத்தனத்தை பையனின் கல்யாண விஷயத்தில் காட்டியிருந்தால் பாராட்டியிருக்கலாம்.. அதில் கோட்டை விட்டு விட்டு பெரிதாய் எல்லாம் தெரிந்தவள் போல் பேசிப் பிரயோசனம் என்ன சொல்லு..”
“ஏன் அண்ணி இப்படிச் சொல்றீங்க..?”
“பின்னே என்ன வசுந்தரா.. எனக்கும் உன் அண்ணனுக்கும் இருக்கிறதோ ஓரே பெண்.. மதுரையில் கோட்டை மாதிரி பங்களா, கார்.. கிராமத்தில் வயல் வரப்பு தோட்டம் துரவு, இருநூறு பவுன் நகை செஞ்சு வைத்திருக்கிறோம்.. என் பெண்ணைக் கல்யாணம் பண்ணினால் ராஜா மாதிரி உட்கார்ந்து சாப்பிட்டிருக்கலாம்.. அதை விட்டு விட்டு இரண்டு அண்ணன் இரண்டு அக்காள்களுக்கு பின்னால் ஐந்தாவதாப் பிறந்த பஞ்ச வர்ணக்கிளியைக் கல்யாணம் பேசி முடிச்சிருக்கயே.. இது பெரிய கெட்டிக்காரத்தனமா..?”
“பொண்ணு மூக்கும் முழியுமா ரதி மாதிரி இருக்காளே அண்ணி.. படிச்சு வேலைக்குப் போறா.. நாங்க அதைப் பார்த்தோம்..”
வந்த மகராசி வாயை அடக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்..
‘ஸ்ஸ் அப்பாடா.. இப்பவே கண்ணைக் கட்டுதே..’ என்று ஆசுவாசப் பெருமூச்சு விட்ட வசுந்தராவின் அருகே வந்த மருதநாயகம்..
“எதுக்குடி இப்படி ஒரு பெருமூச்சு விடறே..?” என்று வினவினார்..
“மூச்சு விடறது கூடக் குத்தமா..?”
“ஏண்டி.. நல்ல நாளும் அதுவுமாய் இப்படிப் பெருமூச்சு விட்டால் அது குத்தமில்லாமல் வேறு என்னடி..? நம் வீட்டில் நடக்கப் போகும் முதல் கல்யாணம்.. நம் மூத்த மகனின் கல்யாணம்.. சிரிச்ச முகமாய் இருப்பியா.. அதை விட்டுவிட்டு சுண்டிப்போன கத்தரிக்காய் போல முகத்தை வைத்துக்கிட்டு இருந்தால் என்ன அர்த்தம்..?”
“உங்க சின்னம்மா மகள் ராஜாத்தி வந்திருக்கிறாள்..”
“அதுதான் உன் முகம் வாடிப்போச்சா.. அது குணம் தான் உனக்குத் தெரியுமே.. நீ ஏண்டி அதுகிட்டப் போய் வாய் வளர்த்தே..?”
“அதுகூட வாய் வளர்க்கணும்னு எனக்கு ஆசை பாருங்க.. நீங்க வேறு எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றிக்கிட்டு, வந்த மகராசியை வான்னு கூப்பிட வேணாமா..?”
“கட்டாயம் கூப்பிடணும்”
“அதைத்தான் செஞ்சேன்.. உடனே மகராசி வாயைத் திறந்திட்டா.. இவளோட அண்டங் காக்கா கருப்பு.. சிற்றானைக் குட்டி மகளை நம்ம ஆகாஷுக்குக் கட்டி வைக்கலையாம்.. ஸ்கூல் பக்கமே எட்டிப் பார்க்காத அந்த அழகுப் பைங்கிளி.. இவளோட சொத்துக்கு வாரிசாம்.. அதை விட்டுவிட்டு கெட்டிக்காரத்தனமில்லாமல் இந்தப் பெண்ணை பேசி முடித்திருக்கிறோமாம்..”
“ஓ.. அதுதான் நீ அப்படி மூச்சு விட்டாயா.. இந்தா.. இந்த கூல்டிரிங்கைக் குடி.. கல்யாண வீட்டிற்கு நாலு பேர் வருவாங்க.. நாலு விதமாய் தான் பேசுவாங்க.. நாமதான் சமாளிக்கணும்.. அதுதானே கெட்டிக்காரத்தனம்.. அதை விட்டுவிட்டு..”
“போதும்.. போதும்.. சந்தடி சாக்கில் என் கெட்டிக் காரத்தனத்தை குறை சொல்ல வேண்டாம்ட.. உங்க பரம்பரைக்கு இருக்கிற கெட்டிக்காரத்தனம் எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது..”
“சரி.. சரி.. இப்போது அந்தக் கதை எதற்கு..? நம் சொந்தக் கதையை பார்ப்போம்.. வாங்க மச்சான்.. இப்பத்தான் வருவதா.. நீங்களே இப்படி வந்தால் எப்படி..?”
“இப்போதாவது வந்தோமே என்று சந்தோசப்படுங்க.. என் வீட்டில் ஒன்றுக்கு இரண்டு பெண்கள் இருக்க ஊரார் வீட்டில் பெண் எடுப்பீர்கள்.. நான் உங்கள் கல்யாணச் சோற்றைச் சாப்பிட ஒரு வாரத்திற்கு முன்னாலேயே வந்துவிட வேண்டும்.. அப்படித்தானே..”
“அடடா.. இதுக்காகவா மச்சான் இவ்வளவு கோபப் படறீங்க.. உங்களுக்கு இருப்பதோ இரண்டு பெண்.. இரண்டில் ஒன்றைக் கல்யாணம் பண்ணினால் இன்னொரு பெண்ணிற்கு வருத்தம் வராதா..? அதற்குத்தான் வெளியே பெண் எடுக்கிறேன்..”
“பிழைச்சுக்குவிங்க மச்சான்.. ஆனால் உங்களைக் குற்றம் சொல்லி என்ன செய்ய..? தொண்டைமான் கிட்ட ஆகாஷ் அதிகம் பாசம் வைக்காமல் இருந்திருக்கணும்.. இப்ப மாட்டிக்கிட்டு விழிக்கறீங்க..”
“இதில் மாட்டிக்கிட்டு விழிக்க என்ன இருக்கு.. பெண் பட்டதாரி.. அழகானவள்.. நல்ல குடும்பம்.. இது போதாதா..?”
“போதும்.. போதும்..”
வந்தவர் அவசரமாய் உள்ளே செல்ல மருதநாயகம் வாயைத் திறந்து.. ‘ஊப்ப்..’ என்று மூச்சவிட்டு ஆசுவாச மானார்.. அவர் தோற்றத்தைக் கண்டு வாய் பொத்தி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்ட வசுந்தரா..
“இப்போது புரிகிறதா என் அவதி..?” என்று கேட்டாள்..
“புரிகிறது.. நன்றாகப் புரிகிறது.. அது யாரு கூட்டமாய் வாரது..?” என்று கண்கள் கூர்மையாக வினவினார்..
“பஸ் நிற்கிறது தெரியவில்லையா..? அன்னலட்சுமி புரத்துக்காரங்க.. பெண் வீட்டில் பஸ் பிடித்து அழைத்து வந்திருக்கிறார்கள்.. வாங்க அண்ணா, வாங்க மதினி.. உள்ளே போங்க.. அக்கா வாங்க.. மாமா எங்கே நீங்கள் தனியாகத்தான் வந்தீர்களா..?” வசுந்தரா மும்மரமாய் அவர்களுடன் பேசிக் கொண்டே உள்ளே அழைத்துப் போனாள்..
ஆட்டோ ஒன்றிலிருந்து இறங்கிய பெரியவர் ஒருவர்.. “என்ன மருதநாயகம் தனியா வாசலில் நிற்கிற..? வசுந்தரா எங்கே..?” என்று வினவின் கொண்டே வந்தார்..
“அன்னலட்சுமிபுரத்துக்காரங்க வந்திருக்காங்க.. உள்ளே கூட்டிப்போய் உட்கார வைக்கப் போயிருக்கிறாள்..”
“ஏண்டா.. நீ பெண்ணைப் பெற்றவனா.. இல்லை மாப்பிள்ளையைப் பெற்றவனா..?” இடக்காய் வினவியது பெரிசு..
“இது என்ன பெரியப்பா இப்படிக் கேட்கறீங்க..? என் மகன் ஆகாஷுக்குத்தான் கல்யாணம்.. ஆமாம்.. நீங்க யாருக்குக் கல்யாணமென்று வந்தீங்க..?”
“உன் மகன் கல்யாணமுன்னுதான் வந்தேன்..”
“அப்புறம் ஏன் சந்தேகம்..?”
“என்னவோ நீதான் பொண்ணு வீட்டுக்காரன் மாதிரி அன்னலட்சுமி புரத்துக்காரங்களை இந்தத் தாங்கு தாங்குகிறாயே.. அதுதான் கேட்டேன்..”
“ஏன் பெரியப்பா.. பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு மரியாதை கொடுத்தால் அது ஒரு தப்பா..?”
“பின்னே.. இல்லையாடா..? மாப்பிள்ளை வீட்டுக்காரனாய் லட்சணமாய் நடந்துக்க.. இல்லைன்னா பின்னாடி உனக்குத்தான் கஷ்டம்..”
“சரி பெரியப்பா.. இப்ப நீங்க உள்ளே போங்க..”
மருதநாயகம் வேறு ஒருவரை வரவேற்கப் போய்விட்டார்.. ரிசப்ஷன் மேஜையின் பின் நின்று கொண்டிருந்த ஆனந்தியிடம் வந்த பரசுராமன்..
“ஹாய் ஆனந்தி.. ஹவ் ஆர் யூ..?” என்றான்..
“பைன் அண்ணா.. ஏன் லேட்..?”
“வேலையிருந்ததும்மா.. ஆகாஷ் எங்கே.. மாப்பிள்ளை ரூமில் தானே இருக்கிறான்..?”
“இல்லை அண்ணா.. மொட்டை மாடியில் இருக்கிறார்..” ஆனந்தியின் முகத்தில் சங்கடம் தெரிந்தது.
“ஏன் ஆனந்தி.. எனிதிங் ராங்..?”
“ம்ம்.. அண்ணாவுக்கு இன்றைக்கு நிச்சயதார்த்தம்.. விடிந்தால் கல்யாணம் பட்.. அவர் மூட் அவுட்டாகவே இருக்கிறார்..”
“சேச்சே.. அப்படியெல்லாம் இருக்காது.. புது மாப்பிள்ளை இல்லையா டென்ஷனாய் இருப்பான்.. நான் போய் விசாரிக்கிறேன்.. நீ கவலைப்படாதே.. அப்பா.. அம்மா எங்கே..?”
“இந்நேரம் வரைக்கும் இங்குதான் நின்று கொண்டிருந்தாங்க.. இப்போதுதான் உள்ளே போனாங்க..”
“ஓகே.. நான் உள்ளே போய் பார்த்துக் கொள்கிறேன்..”
“அண்ணா..!”
“என்னம்மா..?”
“அண்ணன் மூட் அவுட்டாக இருப்பதை அப்பாம்மா விடம் சொல்ல வேண்டாம்..”
பரசுராமின் முகம் மென்மையானது.. அந்தத் தங்கைக்கு அவளது அண்ணன் மேலிருக்கும் பாசம் அவனை நெகிழ வைத்தது..
“எனக்கும் தெரியும்மா.. நான் பார்த்துக் கொள்கிறேன்..”
பரசுராம் மண்டபத்துக்குள் நுழைந்தான்.. கல்யாண வீட்டிற்கே உரிய ஓர் வாசம்.. பெண்களின் கூந்தல் பூவின் வாசமா.. அவர்கள் உடுத்தியிருக்கும் உடைகளில் வரும் வாசனைத் திரவியங்களின் வாசமா.. சந்தனத்தின் வாசமா.. இல்லை இவை அத்தனையும் கலந்து வரும் வாசமா.. என்று இனம் பிரிக்க முடியாத இதமான வாசம் எங்கும் கமழ்ந்தது..
ஆனந்த ஆரவாரத்துடன் ஒருவரிடம் ஒருவர் பேசிக் கொண்டிருந்த சூழலை ஓர் வினாடி நின்று ரசித்தான் பரசுராம்..
உறவினர்கள் ஒன்று கூடும் இடங்களில் இருக்கும் உற்சாகம் இங்கும் இருந்தது.. நலம் விசாரித்தல்.. கேலியும் கிண்டலும் செய்து கொள்தல்.. இது போக திருமணம் செய்து கொள்ளும் முறையில் உள்ளவர்களின் பார்வைப் பரிமாற்றங்கள்.. பரசுராமனுக்கு அங்கே சற்று நேரம் அமர வேண்டும் போல் இருந்தது..
ஆனால் யாருடைய கல்யாணத்திற்கு வந்திருக்கிறானோ அவன் மொட்டை மாடியில் தனியே நிற்கிறனாமே..
“டேய்.. பரசு..” மருதநாயகம் அருகே வந்தார்..
“ஏண்டா இவ்வளவு நேரம் கழித்து மாப்பிள்ளைத் தோழன் வந்தால் மாப்பிள்ளை எப்போது ரெடியாவது.. போ.. போ.. சீக்கிரம் அவனை ரெடியாக்கு..”
“இதோ போகிறேன்ப்பா..”
“பரசு.. இப்போதுதான் வருவதா..” யாரிடமோ பேசிக் கொண்டிருந்த வசுந்தரா கத்தலாய் அழைத்தாள்..
“ஸாரிம்மா.. லேட்டாகிடுச்சு..”
“எங்கே போகிறாய்..? டிபன் சாப்பிடவா..”
“ஆகாஷை பார்த்துவிட்டு வருகிறேன்..”
மாடிப்படியில் ஓடி வந்து கொண்டிருந்த குழந்தைகளின் மேல் இடித்து விடாமல் ஒதுங்கி மொட்டை மாடிக்கு ஏறிச் சென்றான் பரசுராம்.. யாருமில்லாத மொட்டை மாடியில் தனிமையில் ஆகாயத்தை வெறித்துக் கொண்டிருந்த ஆகாஷை பின்னாலிருந்து நெருங்கினான்..
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.