Chapter 14
மைதிலி அழகானவள் என்பதைவிட வினய் விரும்பும் இந்திய, தமிழ்நாட்டுப் பெண்ணின் பிரதி பிம்பமாய் திகழ்பவள் என்பதைக் கவனத்தில் கொண்ட மேனகா அதை வினய்யின் கவனத்திற்குக் கொண்டு போனாள்..
“முதலில் உனக்கு ஈமெயிலில் ஒரு போட்டோ அனுப்பியிருக்கிறேனே அதைப் பார்த்தாயா வினய்..?”
“எங்கே.. காலையிலிருந்து மெயில் பாக்சைத் திறந்தே பார்க்கவில்லை.. எக்கச்சக்க வேலை மேனகா.. இங்கே கம்பெனியில் என்ன நடந்தது தெரியுமா..”
“வினய் உன் கதையை எல்லாம் அப்புறம் கேட்கிறேன்.. முதலில் மெயிலை ஓப்பன் பண்ணு..”
வினய் திகைத்தான்.. எதற்காக இவ்வளவு ஆத்திரமும், அவசரமும் காட்டுகிறாள் மேனகா என்பதைப் புரியாதவனாய் கம்ப்யூட்டரில் மெயிலை ஆராய்ந்தபோது மேனகா அனுப்பியிருந்த பெண்ணின் போட்டோவைப் பார்த்ததும் பிரமித்துப் போய் விட்டான்..
அது மைதிலிக்குத் தெரியாமல் அவள் அலுவலகம் செல்ல நடைபாதையில் நடந்து கொண்டிருந்தபோது மேனகா எடுத்த போட்டோ..
இளம் பச்சையில் உடலும் அரக்குச் சிவப்பில் பார்டரும் கொண்ட காஞ்சிக் காட்டன் புடவையை உடுத்தியிருந்தாள் மைதிலி.. போட்டோவில் அந்தப் புடவையின் மடிப்புக்கள் லேசாக அசைய நிமிர்ந்த நடையுடன் நேர் கொண்ட பார்வையுடன் நீண்ட பின்னலுடன் முழு உயரத்தில் பதிவாகி இருந்தாள் மைதிலி.. தலையின் இரு பக்கமும் முல்லைப் பூச்சரம் சரிந்திருந்தது.. நெற்றியில் திலகமிட்டு அதன் மேல் சிறிய விபூதிக் கீற்று இட்டிருந்தாள்.. கழுத்தில் மெல்லிய செயின்.. காதுகளில் ஜிமிக்கி.. யாருடனோ சிரித்துப் பேசிக் கொண்டு வந்திருப்பாள் போல.. முத்துப் பல் வரிசை தெரிய புன்னகை புரிந்து கொண்டிருந்தாள்.. புடவையின் மடிப்புக்களை வளையலிட்ட வலது கரத்தால் தூக்கிக் கொண்டிருந்தாள்.. இடது தோளில் தொங்கிக் கொண்டிருந்த தோள் பையின் வாரைப் பற்றியிருந்த கரத்தில் கைக்கடிகாரம் கட்டியிருந்தாள்..
அந்தப் போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்த வினய் ஆனந்தத்தில் மூழ்கினான்… அந்தப் போட்டோவில் தெரிந்த பெண்ணின் தோற்றத்தில் மிளிர்ந்த பெண்மை அவனை வசீகரித்தது.. அவளது முகத்தில் தெரிந்த மென்மை அவனை ஈர்த்தத.. மனம் ‘இவள் தான் நீ தேடிய சீதை’ என்று கூவியது..
அவன் கையிலிருந்த செல்போன், “ஹலோ.. ஹலோ.. வினய்..” என்று அழைக்க இயந்திரம் போல் அதைக் காதில் வைத்தான்.
“ஹலோ வினய்.. நீ லைனில் இருக்கிறாயா..?” என்று கத்தினாள் மேனகா..
“யார் இந்தப் பெண் மேனகா..? உனக்கு இவளை எப்படித் தெரியும்..? இவள் எங்கே இருக்கிறாள்..? நான் அவளை உடனே பார்க்க முடியுமா..?” என்று பரபரத்தான் வினய்..
“பொறுமை.. வினய்.. பொறுமை.. ஒரே நேரத்தில் இத்தனை கேள்விகளை அடுக்கினால் நான் பதில் சொல்வது எப்படி..?”
“விளையாடாதே மேனகா.. எனக்கு இந்தப் பெண்ணைப் பற்றித் தெரிய வேண்டும்..”
“அவ்வளவுதானே.. உன் பிரண்ட்ன்னு சொல்லிக்கிட்டு நான் ஒருத்தி எதற்காக இருக்கிறேன்.. சொல்கிறேன் கேள்..”
“சொல்லு.. சீக்கிரம் சொல்லு..”
“வினய்.. இவள் பெயர் மைதிலி.. ஊர் திருச்சி..”
“இவ்வளவு போதும் மேனகா.. நான் அடுத்த பிளைட் பிடித்து திருச்சிக்கு வந்து விடுகிறேன்.. உனக்கு அட்ரஸ் தெரியும் தானே..? தெரியா விட்டாலும் பரவாயில்லை.. நான் கண்டுபிடித்து விடுவேன்..”
“உனக்கு அந்தச் சிரமமே வேண்டாம் வினய்.. இந்தப் பெண் எனக்குத் தெரிந்த பெண் தான்..”
“நிஜமாகத்தான் சொல்கிறாயா..? மேனகா.. ப்ளீஸ்.. அந்தப் பெண்ணை எனக்கு அறிமுகம் செய்து வை..”
“அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து கொள்ள என் தயவே உனக்குத் தேவையில்லை வினய்.. நீ ஒரு வேலை செய்தால் ரைட் ராயலாய் அவளை நீயே நேரில் பார்த்து அறிமுகம் செய்து கொள்ளலாம்.. எப்படித் தெரியுமா..?”
“எப்படி..?”
“உன் வருங்காலக் கணவனென்று..”
“சஸ்பென்ஸ் வைக்காமல் மேட்டருக்கு வா மேனகா.. நான் என்ன செய்ய வேண்டும்..?”
“கிருஷ்ணமூர்த்தி.. கிருஷ்ணமூர்த்தின்னு.. ஒருத்தன்.. சென்னையில்தான் இருக்கிறான்.. கஸ்டம்ஸில் வேலை பார்க்கிறான்.. அவனைப் போய்ப் பார்..”
“அவன் யார்..? அவனை எதுக்கு நான் பார்க்கணும்..?”
“அவன் தான் மைதிலியின் அண்ணன்.. அவனிடம் போய் உன்னைப் பற்றிய விவரங்களைக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டு மைதிலியைப் பெண் கேள்..”
“உன் பிளான் என்ன மேனகா.. தெளிவாய் கூறு..”
“வினய்.. இந்த மைதிலி உன் ஜாதியைச் சேர்ந்தவள்..”
“ரப்பிஷ்.. அவள் எந்த ஜாதியாயிருந்தால் என்ன..? நான் தான் ஜாதி மதம் பார்ப்பதில்லையே.. உனக்குத் தெரியாதா..?”
“நீ ஜாதி மதம் பார்க்க மாட்டாய் வினய்.. மைதிலியின் வீட்டில் அதைத்தான் முக்கியமாய் பார்ப்பார்கள்.. நீ இந்தியாவிலேயே.. ஏன் இந்த உலகத்திலேயே பெரிய பணக்காரனாய், அழகனாய், படித்தவனாய் இருந்தாலும்.. நீ அவர்களது ஜாதியாக இருந்தால்தான் அவர்கள் வீட்டில் பெண் கேட்க முடியும்..”
“மைதிலியும் அப்படிப்பட்ட பெண்தானா..?”
“அவள் பெற்றோருக்குக் கட்டுப்பட்டவள்.. நீ விரும்பிய தமிழ்நாட்டுத் திருமகள் இப்படித்தானே இருப்பாள் வினய்..? ஆனால் நீ எதற்கு இதைப் பற்றிக் கவலைப்படுகிறாய்..? உன் முக்கிய தகுதியே நீ அவளது ஜாதி என்பதுதானே..”
வினய் உடன்பாடில்லாமல் “உம்..” கொட்டினான்.. மேனகா தொடர்ந்தாள்..
“வினய்.. நீ இதைப் பற்றி தர்க்கம் பண்ணுவது வேஸ்ட்.. உனக்கு என்ன வேண்டும்.. உன் மனதிற்குப் பிடித்த பெண்ணை மணக்க வேண்டும்.. அதற்கான தடையாக ஜாதியில்லை என்பதில் சந்தோசப்படு.. புரிகிறதா..?”
“அதில்லை மேனகா.. நான் விரும்பும் பெண்.. நான் காதலிக்கும் பெண்.. என்னையும் விரும்பிக் காதலிக்க வேண்டாமா..?”
“அவள் வீட்டை மீறி எதுவும் செய்யமாட்டாள் வினய்.. நீ முதலில் அவளுக்கு தாலிகட்டி உன் மனைவியாக்கிக் கொள்… அதன் பின்னால் அவளே உன்னை விரும்பிக் காதலிக்க ஆரம்பித்து விடுவாள்..”
“வாவ்.. எப்படி மேனகா உனக்கு இப்படி ஒரு பற்று நம் தமிழ் கல்ச்சர் மீது வந்து..?”
“பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறுமாமே.. நீ அடிக்கடி சொல்லும் தமிழ் பொன் மொழிதான்.. உன்னோடு சேர்ந்து நானும் தமிழ் கல்ச்சருக்கு அடிமையாகி விட்டேன்..”
“சொல்லு மேனகா.. அந்த கிருஷ்ணமூர்த்தியிடம் எப்போது போய் பேச வேண்டும்..?”
“விரைவிலேயே..”
“நாம் அப்புறம் பேசலாம் மேனகா.. எனக்கு முக்கிய மான வேலையிருக்கிறது..”
“அப்படி என்ன முக்கிய வேலை வினய்..?”
“கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து மைதிலியைப் பெண் கேட்கப் போகிறேன்..”
கடகடவென்று சிரித்தபடி வினய் செல்போனைத் துண்டித்தான்.. மேனகா புன்னகையுடன் இன்னும் ஒளிர்ந்து கொண்டிருந்த செல்போனைப் பார்த்தாள்.. திருப்தியுடன் படுக்கையில் சரிந்தாள்.. நேற்று இரவு தூங்காத விழிகள் அயர்வாய் மூடிக்கொள்ள அவள் மதியத் தூக்கத்தில் புகுந்தாள்.. இரவினில் மூடாத இமைகள் பகலில் இணைவாய் விழிகளை மூடின..
கிருஷ்ணமூர்த்தி அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அவனது அலுவலக தொலைபேசி ஒலித்தது.. எடுத்துப் பேசிய ஒருவர்,
“கிருஷ்ணமூர்த்தி.. உங்களுக்கு போன் வந்திருக்கிறது..” என்று கூறினார்..
தன் முன்னாலிருந்த ஃபைலில் இருந்து தலை நிமிர்ந்தவன்,
“யாராம்..?” என்று விசாரித்தான்..
“சொல்லவில்லை..” என்று கூறிவிட்டு அவர் சென்று விட கிருஷ்ணமூர்த்தி எழுந்து சென்று தொலைபேசியை எடுத்தான்..
“ஹலோ கிருஷ்ணமூர்த்தி ஹியர்..”
“ஐ ஆம் வினய்.. டால்பின் இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர்..”
“ஒகோ.. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்..?” என்றான் கிருஷ்ணமூர்த்தி, ஆங்கிலத்தில்.
“என்னைச் சந்திக்க வேண்டும்.. நான் உங்கள் ஆபிஸிற்கு வருவதை விட நீங்கள் என் கம்பெனிக்கு வந்தால் என்னைப் பற்றி நீங்களே நேரில் நன்கு அறிந்து கொள்ள முடியும்..” என்றான் வினய் தமிழில்..
“மிஸ்டர் வினய்.. நான் நேர்மையான கஸ்டம்ஸ் ஊழியன்..”
“ம்ம்.. உங்கள் நேர்மையை யார் குறை சொன்னது..?”
“பின்.. என்னை நீங்கள் ஏன் சந்திக்க விரும்ப வேண்டும்..?”
“நீங்கள் கஸ்டம்ஸ் ஊழியராக மட்டுமில்லாமல், உங்கள் தங்கை மைதிலிக்கு அண்ணனாகவும் இருப்பதால்..”
“புரியவில்லையே..”
“மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி.. நான் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்.. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.. உங்கள் தங்கை மைதிலியைப் பற்றி என் ரிலேடிவ் ஒருத்தங்க சொன்னாங்க.. ஸோ.. கல்யாணம் பேச கூப்பிட்டேன்..”
கிருஷ்ணமூர்த்தி திகைத்துப் போனான்.. ரிட்டயர்டு வைத்தீஸ்வரன் மகளான, இன்கம்டாக்ஸ் கிளார்க்கான மைதிலிக்கு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியின் முதலாளி மாப்பிள்ளையாகக் கிடைக்கிறானா..?
“மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி.. எனக்கு இன்னும் நீங்கள் பதில் சொல்லவில்லை.. நான் உங்களைப் பார்க்க வரவா..?”
“வேண்டாம்.. வேண்டாம்.. நானே வருகிறேன்.. அதற்கு முன்.. என் பேமிலி நிலைமை பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்..”
“தேவையில்லை.. உங்கள் தங்கையின் போட்டோ பார்த்தேன்.. எனக்குப் பிடித்து விட்டது..”
“சார்.. நாங்கள் மிடில் கிளாஸ் பேமிலி..”
“அதனாலென்ன.. நான் மணக்கப் போவது மைதிலியை மட்டும்தானே..”
“சார்.. எதற்கும் நீங்கள் உங்கள் குடும்பத்தாரை கலந்து கொண்டு பேசுவது நல்லது..”
“என் பெற்றோருக்கு நான் ஒரே மகன்.. என் திருமணவிசயத்தில் என் மனதுக்குப் பிடித்த பெண்ணை நான் மணந்து கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.. பை தி வே மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி.. நீங்கள் என்னை ‘வினய்’ன்னு பெயர் சொல்லியே கூப்பிடலாம்..”
கிருஷ்ணமூர்த்தி ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கினான்.
“மிஸ்டர் வினய்.. நான் இப்போதே உங்கள் கம்பெனிக்கு வருகிறேன்..”
கடலோரம் ஈ.ஸி.ஆர். சாலையில் அமைந்திருந்த அந்த மிகப் பெரிய கம்பெனியின் வாசல் காம்பவுண்டு சுவரில்,
‘டால்பின் இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட்’ என்ற எழுத்துக்கள் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டு தங்க நிறத்தில் மின்னின.. கிருஷ்ணமூர்த்தியின் ஹீரோ ஹோண்டா பைக்கைக் கண்டதும் வாசலில் நின்ற காவலாளி மறித்தான்..
“உங்க முதலாளி வினய் வரச் சொல்லியிருக் காருப்பா..” என்றதும் வாசல் கேட்டில் இருந்த கூண்டிற்குள் நுழைந்து தொலைபேசியில் பேசி விட்டு அனுமதித்தான்.. பிரம்மாண்டமாய் இருந்த வாயில் கதவுகள் விரியத் திறக்க உள்ளே தன் வண்டியைச் செலுத்தியவனுக்கு வானில் பறப்பதைப் போல் இருந்தது.. தன் தங்கைக்கு இப்படி ஒரு ராஜ யோகமா..?
நீண்டு சென்ற சாலையின் இரு பக்கமும் மரங்களும், பூச்செடிகளும் அணிவகுத்து நின்றன.. உள்ளே சென்று அலுவலக கட்டிடத்தின் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டுப் படியேறி உள்ளே சென்றான்.. வரவேற்பில் இருந்த பெண் அவனை சோபாவில் அமரச் சொல்லிவிட்டு தன் முதலாளியிடம் அனுமதி கேட்டு விட்டு அவனை உள்ளே போகச் சொன்னாள்..
அலுவலகத்தின் தரை சலவைக்கல்லால் பளபளக்க சுவரெல்லாம் மரத்தினால் மெருகேற்றப்பட்டு இருந்தது.. ஏறக்குறைய நூறு நபர்களுக்கு மேல் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்..
வினய்யின் அறைக் கதவை நெருங்கியதும் அவன் விரல்களால் மெல்லத் தட்ட..
“யெஸ் கமின்..” என்ற கம்பீரமான ஆனால் மிருதுவான குரல் கேட்டது.. கிருஷ்ணமூர்த்தி உள்ளே சென்றான்.. வினய் தன் இருக்கையை விட்டு எழுந்து.. “வெல்கம் மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி.. நான்தான் வினய்..” என்று கைகுலுக்கி விட்டு, “ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என்று அமர வைத்து விட்டு இன்டர்காமை எடுத்து பியூனை அழைத்து குளிர்பானம் கொண்டு வரச் சொன்னா..
“ஸீ.. மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி.. இதுதான் என் கம்பெனி.. இதுபோக மூணாறில் தேயிலைத் தோட்டம்.. ஐ மீன்.. எஸ்டேட் இருக்கிறது.. அப்புறம் ஒரு சூப்பர் மார்க்கெட்.. அப்பா பார்த்துக்கிறார்..”
“நீங்கள் இவ்வளவு வசதியாக இருக்கும்போது.. என் தங்கையை எப்படி..”
“லுக் மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி.. நான் லண்டனில் படித்தபோதே டிசைட் பண்ணிட்டேன்.. மணந்தால் ஒரு தமிழ் கல்ச்சர் தெரிந்த பெண்ணைத்தான் மணப்பது என்று.”
“என்னது.. நீங்கள் வெளிநாட்டில் படித்தவரா..”
“ஏன் வெளிநாடென்றால் உசத்தியா..? நம் நாட்டில் இல்லாதது அங்கே என்ன இருக்கிறது..? எதுவுமே இல்லை.. அமைதி இல்லை.. நிம்மதியான குடும்ப வாழ்வு இல்லை.. இந்தியாவின் அருமை ஏன் உங்களுக்குப் புரியவில்லை..?”
“ஐ ஆம் ஸாரி.. நான் எதற்கும் உங்கள் பெற்றோரைப் பார்த்துப் பேசி விடுகிறேனே.. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்..”
“வித் பிளெசர்..” என்றவன் தன் வீட்டிற்குச் செல்போனில் பேசினான்..
“யெஸ் டாட்.. நான் சொன்னேனே.. மைதிலின்னு.. அந்தப் பெண்ணின் அண்ணன் என் கம்பெனிக்கு வந்திருக்கிறார்.. என்ன.. எனக்குப் பிடித்தால் போதுமா.. அவருக்குப் போதாதாம்.. உங்களையும் பார்த்துப் பேச வேண்டுமாம்.. ஓ எஸ்.. இப்போதே கூட்டி வருகிறேன்..”
போனைத் துண்டித்து விட்டு நிமிர்ந்த வினய்..
“போகலாமா..” என்று எழுந்ததும் புரியாதவனாய் கிருஷ்ணமூர்த்தி உடன் எழுந்து சென்றான்..
“ஜேம்ஸ்..” என்று வினய் அழைக்க வெள்ளைச் சீருடை அணிந்த காரோட்டி ஓடி வந்தான்..
“உங்க பைக் சாவியை இவனிடம் கொடுத்து விடுங்கள் கிருஷ்ணமூர்த்தி.. ஜேம்ஸ் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விடு.. கமான் கிருஷ்ணன்.. நாம் நம் காரில் போகலாம்.. நான் உங்களை கிருஷ்ணன் என்றே கூப்பிட்டுக் கொள்கிறேனே..”
இலகுவாகப் பேசியபடி அவனது அழகிய தந்த நிற வெளிநாட்டுக் காரின் கதவைத் திறந்து விட்டான் வினய்.
‘நம் காரா’ என்று திறந்த வாயை மூடாமல் அந்தக் காரில் ஏறிக் கொண்டான் கிருஷ்ணமூர்த்தி..
கிழக்குக் கடற்கரைச் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்ற கார் அந்த பிரம்மாண்டமான மாளிகையின் உள்ளே நுழைந்தது.. பிரிட்டிஷ் ராஜகுமாரன் போன்ற வனப்புடைய வினய்யின் தாய் தந்தையரும் அதே வனப்புடையவர்களாக திகழ்ந்தனர்.. கிருஷ்ணமூர்த்தியை வரவேற்றனர்.. கனவிலும் கண்டிராத மாளிகையின் உள்ளே தேவர்கள் போன்ற அழகுடைய மனிதர்களிடம் மறு பேச்சுப் பேசாமல் தன் தங்கை மைதிலியை தாரை வார்த்துக் கொடுக்க சம்மதம் தெரிவித்தான் கிருஷ்ணமூர்த்தி..
Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.