Chapter 02

0Shares

அதுதான் வெற்றிவேலை கீர்த்தனா சந்தித்த முதல் சந்திப்பு.. ஆறடிக்கும் மேலான உயரத்துடன்.. அகன்ற மார்புடன்.. கம்பீரமாக இருந்தவனின் உருவம் அவள் மனதில் பசை போடாமலே ஒட்டிக் கொண்டது அந்தத் தருணத்தில்தான்..

“இது யார் தாத்தா..?” அவன் கைலாசத்திடம் விசாரித்தான்..

“வெற்றி.. என் கூடப் பொறந்த ஒரே பொறப்பு என் தம்பிதான்.. உனக்குத் தெரியுமில்ல..”

“அவர்தான் செத்துப் போயிட்டாரே..”

ஒற்றைவரியில் பேச்சை முடித்துக் கொண்ட மகனின் தீரத்தை சுந்தரவடிவேலால் மனதுக்குள் மெச்சிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை..

‘எப்படித்தான் இப்படிப் பேசறானோ..’

அவரால் எதிர்க்க முடியாத அவரின் தகப்பனை.. அவர் மகன் எதிர்த்து நின்றதில் அவருக்கு ஆற்றாமையாக இருந்தது..

‘அப்படியே அவன் அம்மாவைக் கொண்டு பிறந்திருக்கான்..’ 

மகனின் ஆளுமையில் அவருக்கு பொறாமை.. பொறாமையாக வந்தது…

கைலாசம் பேரனை விட அதிகமாக முகம் இறுகிப் போனார்.. அதை வெற்றிவேலும் கவனிக்கத்தான் செய்தான்.. அவன் புருவங்கள் முன்னிலும் அதிகமாச் சுருங்கின..

“அவன் செத்துப் போனான்.. அவன் மக ரத்னா இருந்தாள்ல..”

“அவங்களுக்கு என்ன..?”

“புருசனில்லாம தனியா களையெடுத்து பொழப்பு நடத்தி மகளை வளர்த்துக்கிட்டு இருந்தவ கண்ணை மூடிட்டா.. உன் பாசையில சொல்றதா இருந்தா அவளும் செத்துப் போயிட்டா..”

குற்ற உணர்வுடன் உதட்டைக் கடித்துக் கொண்டான் வெற்றிவேல்.. அவனின் பேச்சு இந்த அளவுக்கு கைலாசத்தின் மனதை புண்படுத்திவிடும் என்று அவன் நினைத்திருக்கவில்லை..

“ஸாரி தாத்தா..”

“உன் ஸாரியை நீயே வைச்சுக்க.. பேசறப்ப யோசிக்காம பேசிடறது.. அதுக்குப் பின்னாலே ஸாரி சொல்றது.. இது யாருக்கு வேணும்..? என் தம்பியும்.. தம்பி பெண்டாட்டியும் இல்ல.. அவங்க வாரிசா இருந்த என் தம்பி மகளும் இல்ல.. எல்லோரும் போன பின்னால அவங்க விட்டு விட்டுப் போன மிச்சமா.. என் உடன் பிறந்தவனின் வாரிசா.. என் பேத்தி மட்டும் நிற்கிறா.. இவளுக்கு இடமில்லாத இந்த வீட்டில் எனக்கு மட்டும் என்ன வேலை..?”

“ஓ…”

வெற்றிவேலுக்கு நிலைமை புரிந்து விட்டது.. இருவிரல்களால் தாடையைத் தடவியபடி கீர்த்தனாவை அவன் பார்த்தான்.. அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது.. மூச்சுத் திணறலுடன் தலை குனிந்தாள்..

‘இது வேறயா..?’

வெற்றி வேலுக்கு.. விமலாவின் மறுப்பில் நியாயம் இருப்பதைப் போல்தான் தோன்றியது.. முன்பின் தெரியாத உறவுக்காரப் பெண்ணின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு குடும்பத்தில் சேர்த்துக் கொள்வது என்பது என்ன அவ்வளவு எளிதான காரியமா..? அதை கைலாசத்திடம் எப்படிக் கூறுவது..?

“ஸோ.. வாட் தாத்தா..?”

“எனக்குன்னு வீடு இருக்கு வெற்றி.. நான் என் பேத்தியோட அந்த வீட்டில் போய் இருந்துக்கிறேன்.. என் பென்சன் பணம் வருது.. எங்க ரெண்டு பேருக்கும் அது போதும்.. கீர்த்தனா பர்ஸ்ட் இயர் காலேஜ் படிப்போட வந்திருக்கா.. அவளை செகண்ட் இயரில் சேர்த்து விடனும்.. எனக்கு தலைக்கு மேலே ஆயிரம் வேலை இருக்கு.. வழியை விடு..”

“வெயிட்.. வெயிட்.. கீர்த்தனா.. கீர்த்தனான்னு சொல்கிறிங்களே.. கீர்த்தனான்னா யாரு..?”

வெற்றிவேல் கேட்டு வைத்த சந்தேகத்தில் விமலா வாய்விட்டுச் சிரிக்க.. கைலாசம் அவளை நேரடியாகவே முறைத்தார்..

“கேட்பேடா.. கேட்பே.. விடிய விடிய எங்க வீட்டு ராமாயணத்த கேட்டுட்டு.. கதை முடிஞ்ச பின்னாலே.. என் தம்பி மகள் பெத்த பொண்ணோட பெயரைக் கேட்ப..”

மருமகள் மேலிருந்த கோபத்தை அவர் பேரனின் மீது காட்ட அவன்..

“அம்பேல்..” என்று கைகளை உயர்த்தினான்..

“இந்தப் பெண்ணின் பெயர்தான் கீர்த்தனாவா..? எனக்கு இது எப்படித் தெரியும் தாத்தா..?” சமாதானத்திற்கும் வந்தான்..

“தெரியலைன்னா வாயை வைத்துக்கிட்டு சும்மா இருக்கனும்.. ஊடே நியாயம் பேச வரக்கூடாது..”

“உங்க வேலைகளைச் செய்யறதுக்கே உங்க உதவிக்கு ஆள் வேணும்.. இதில தலைக்கு மேலே ஆயிரம் வேலைகளைப் பார்க்கப் போறிங்களா..?”

“அது என் பிரச்னை..”

“மூச்.. பேசக்கூடாது.. வயசான காலத்தில் உங்களைத் தனியா அனுப்பி வைச்சா… சிவகாசியில என்னை மெச்சிக்குவாங்க..! இது என் பிரச்னை..”

“அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை..”

“நான் உங்க பேரன் தாத்தா.. எனக்கொரு பிரச்னைன்னா.. அதைப் பத்தி உங்களுக்கு கவலையில்லையா..?”

“இல்லைடா.. எனக்கு என் பேத்தி கீர்த்தனாவைப் பத்தி மட்டும்தான் கவலை.. வேற யார் கவலையும் எனக்கு இல்லை…”

கைலாசம் முகம் திருப்பிக் கொண்டார்.. வெற்றி வேலின் முகத்தில் கோபம் பிரசன்னமானது.. அது நாள் வரை.. அவனுக்கும்.. அவனுடைய அக்கா நந்தினிக்கு மட்டும் சொந்தமாக இருந்த அவர்களுடைய தாத்தாவின் மீது புதிதாக உரிமை கொண்டாடிக் கொண்டு வந்திருக்கும் கீர்த்தனாவை போட்டி உணர்வோடு பார்த்து வைத்தான்.. கீர்த்தனா தலை குனிந்தாள்…

ஏனோ தெரியவில்லை.. அவனுடைய மனத்தாங்கலுக்கு ஆளானதில் அவளுக்குள் வருத்தம் வந்தது..

“ஓகே தாத்தா.. உங்களுக்காக ஒன்று செய்யலாம்..”

“சொல்லு..”

“இந்தப் பெண்ணை ஏதாவது ஒரு ஹாஸ்டலிலே சேர்த்து விடலாம்..”

வெற்றிவேல் யோசனை சொல்ல.. அவனை தீம்பிழம்பாக முறைத்தார் கைலாசம்.. அவரின் கோபத்தில் யோசனையானான் வெற்றிவேல்..

இப்போது அவன் என்ன சொல்லி விட்டான் என்று அவனுடைய தாத்தா இப்படியொரு அன்புப் பார்வையை அவன் பக்கம் வீசி வைக்கிறார்..?

“என்ன தாத்தா..?”

“என்ன ‘நொன்ன தாத்தா..?’ கல்லுக்குண்டு போல் அவளோட தாத்தா நானிருக்க.. என் பேத்தி அநாதையைப் போல ஆஸ்டலுக்குப் போகனுமா..? ஊஹீம்.. வழியை விடு.. நாங்க எங்க வீட்டுக்குப் போகிறோம்..”

“உங்க வீடா..?”

“ஆமா.. நான் உழைத்துச் சம்பாதிச்சுக் கட்டின வீடு அது.. சந்தேகமிருந்தா உங்கப்பன்கிட்டக் கேளு.. அவன் சொல்லுவான்..”

“ஏன் தாத்தா இப்படி அடம் பிடிக்கறிங்க.. தூரத்துச் சொந்தக்காரங்களையெல்லாம் பேமிலியில இன்வால்வ் ஆகவிட்டா அதுக்குப் பெயர் பேமிலியா தாத்தா..?”

“ஓஹோ..”

கைலாசம் வன்மத்துடன் மருமகளைப் பார்த்தார்.. அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த மோகன ரங்கத்தையும்.. மாலதியையும் பார்த்தார்.. 

“ஏண்டா பேராண்டி.. என் கூடப் பிறந்த தம்பியோட மக வயிற்றுப் பேத்தி துரத்துச் சொந்தம்.. உன் அம்மாவோட ரெண்டு விட்ட பெரியப்பா மகனும்.. அவனோட குடும்பமும் கிட்டத்துச் சொந்தமா..?”

“தாத்தா..! நீங்க இருக்கீங்களே…”

வெற்றிவேலுக்கு கோபம் கலந்த சிரிப்பு வந்தது.. கைலாசம் பண்ணிக் கொண்டிருந்த அழும்பில் தலை வேதனை வந்தாலும் அதிலிருந்த நியாயத்தையும்.. அதை அவர் மிகச் சரியாக கேட்டு வைத்த விதத்தையும்.. அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.. விமலாவின் முகம் போன போக்கைப் பார்க்க முடியாமல் வேறு திசையில் திரும்பிக் கொண்டவனுக்கு இந்தத் தாத்தாவை என்ன செய்தால் தேவலாம் என்றிருந்தது..

விமலாவின் அண்ணன் என்று கூறிக் கொண்டு.. அந்த குடும்பத்துக்குள் ஒருவராக ஐக்கியமாகியிருக்கும் மோகனரங்கம்.. கைலாசம் சொன்னதைப் போல விமலாவின் இரண்டு விட்ட அண்ணன்தான்.. மோகன ரங்கத்தின் அப்பாவும்.. விமலாவின் அப்பாவும் ஒன்று விட்ட சகோதரர்கள்.. நியாயப்படி பார்த்தால் மோகனரங்கம் விமலாவுக்கு மூன்று விட்ட அண்ணனாகத்தான் வருவார்.. போனால் போகிறதென்று கைலாசம் இரண்டு விட்ட அண்ணன் என்று சொன்னதோடு நிறுத்தி கொண்டார்..

மோகன ரங்கம் பெங்களூரில் வசித்து வந்தவர்.. இடைக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் உதவி கேட்டு விமலாவை அணுகினார்.. அப்போது நந்தினியும்.. வெற்றி வேலும் சின்னக் குழந்தைகள்.. சுந்தர வடிவேலின் கையில் பிஸினெஸ் இருந்தது.. மனைவி சொல்லே மந்திரம்.. என்று விமலாவின் வாக்கை வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் தன்மையும் அவரிடம் இருந்தது..

“நீங்க ஒற்றை ஆளா எத்தனை வேலைகளைப் பார்ப்பீங்க.. என் பெரியப்பா மகனை வரச் சொல்றேன்.. அவரை நம்ம கம்பெனியில மேனேஜராப் போட்டுக்கங்க.. உங்க பிஸினெஸ்ஸீக்கு உதவியா இருப்பார்..” என்ற விமலாவின் வாக்கை வேத வாக்காக எடுத்துக் கொண்டு பூம்பூம் மாடு போல தலையாட்டி வைத்து விட்டார்..

மோகன ரங்கமும் குடும்பத்துடன் சிவகாசிக்கு வந்து இறங்கி விட்டார்.. நாலைந்து பெட்டிகளுடன் வந்தவர்கள்.. வீடு பார்த்து குடித்தனம் போகும் வரைதான் அங்கே இருப்பார்கள்.. வீடு பார்த்ததும் அவர்களின் சாமான்களை வரவழைத்துக் கொண்டு மங்கல பவனத்தை விட்டு வெளியேறி விடுவார்கள் என்று சுந்தரவடிவேல் போட்ட கணக்கு தப்புக் கணக்காக ஆகித் தொலைத்தது..

“எதுக்காக என் அண்ணன் குடும்பம் வெளியே போய் வீடெடுத்து தங்கனும்..? கடல் போல நம்ம வீடிருக்கு.. இங்கே அவங்களுக்கு இடமில்லையா என்ன..?” என்று கேட்டு வைத்தாள் விமலா..

சுந்தரவடிவேல் அதிர்ச்சியானார்தான்.. ஆனால் அதை வாய் விட்டு விமலாவிடம் சொல்லிவிட அவரால் முடியுமா..?

“அண்ணன் உங்க பிஸினெஸ்ஸீக்கு உதவியா இருப்பார்.. அண்ணி வீட்டைப் பார்த்துக்குவாங்க..” விமலா முடிவெடுத்து விட்டாள்..

கம்பெனியில் நுழைந்த மோகனரங்கமும் சுந்தரவடிவேலுக்கு உதவியாக இருந்து விடவில்லை.. வீட்டுக்குள் நுழைந்து விட்ட மாலதியும் வீட்டைப் பார்த்து விடவில்லை..

மாறாக.. விமலாவின் அண்ணன் என்ற செல்வாக்குடன் தனி அறையில் ஏஸி வசதியுடன்.. மணியடித்தால் ஓடி வர பியுன் வசதியுடன் மோகனரங்கம் கம்பெனியில் செட்டிலாக.. காலையில் பெட்காபியுடன் எழுப்பி விட வேலைக்காரப் பெண்தான் வர வேண்டும் என்ற வசதியுடன் மாலதி அந்த வீட்டில் செட்டிலானாள்..

0Shares

Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link