Chapter 10

0Shares

நதியோரம் நடந்தபோது

ரகசியக் கனவு தோன்றும்

கனவு கலையக் கூடாதென்று

கடவுளிடம் மனம் கேட்கும்

…நதியோரம் நான் நடந்த போது…

நிலா வெளிச்சத்தில் கோட்டுச் சித்திரம்போல் அவன் நின்று கொண்டிருந்தான்.. அந்த இருளிலும் தெரிந்த அவனது நெடிய உயரத்தின் கம்பீரம் அவளை மயக்கியது.. அவனது அருகாமை மனதிற்கு அச்சத்தைத் தந்தது.. மனம் விரும்பும் ஆண் மகனுடன் தனியே இருக்க நேர்கையில் மனதிற்கு எப்படி கடிவாளம் இடுவது..? அடங்க மறுத்து திமிறும் மனக்குதிரையை எப்படி அடக்குவது..? இவன் வேறு ‘தனியே வா’ என்று ஏன் அழைக்கிறான்..?

மனதிற்குள் நரேந்திரனை சபித்தபடி அருகே சென்றாள் அவள்.. நரேந்திரன் சங்கடப்பட்டான்.. தன் குடும்ப பிரச்சனைக்காக இந்த நல்ல பெண்ணை சங்கடத்துக்குள்ளாக்குகிறோமே என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டான்.. இரவில் மெல்லிய ரீங்கார சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.. வித்யாவின் தலையில் சூடியிருந்த மல்லிகையின் மணம் அவன் நாசியை வருடியது.. அவனறிந்த பெண்களில் யாரிடமாவது மல்லிகை வாசம் வந்ததா என்று ஏனோ தேவையில்லாமல் நினைவு வந்தது.. இல்லையென்ற பதிலும் வந்தது.. கூடவே ஓர் வரம் கொடுக்கும் தேவதை போன்ற அழகே உருவான அவளை அவனறிந்த பெண்களுடன் ஒப்பிடுவதா..? என்று தன்னைத்தானே குட்டிக் கொண்டான்.. வித்யாவின் மேல் மல்லிகை வாசனையோடு கூடிய இதமான வேறு வாசனைகளும் வருவது போல் தோன்ற, தனியாக அவளை இந்த இரவு நேரத்தில் மொட்டைமாடியில் சந்திக்க முயன்றிருக்கக் கூடாதோ என்று தடுமாறிப் போனான்..

இருவருமே இருவேறு மனப்போராட்டங்களுடன் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று திணறினார்கள்.. ஒரு வழியாக வித்யா தன் தைரியத்தை ஒன்று திரட்டி..

“எதற்கு வரச் சொன்னீர்கள்..?” என்று கேட்டாள்..

சுதாரித்துக் கொண்ட நரேந்திரன் அவளைப்பார்த்து..

“வித்யா.. என்னை சுயநலவாதி என்று நினைக்காம லிருந்தால் ஓர் யோசனை சொல்லவா..?” என்று கேட்டான்..

“சுயநலவாதியா.. யார் நீங்களா..? ஒரு போதும் உங்களை அப்படி நினைக்க மாட்டேன்.. என்ன விசயம் சொல்லுங்கள்..” என்று மென்மையாகக் கூறினாள் வித்யா.

நரேந்திரனின் மனம் சிலிர்த்தது.. இரவு நேரக் காற்று இதமாக அவர்களது உடல் தொட்டுச் சென்றது.. கடல் காற்று சிலுசிலுவென்று இருந்தது.. அந்த மாதிரி சூழ்நிலையில் தான் பாரதி..

‘மயங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை’ என்று மயங்கிப் பாடினானோ.. அந்த வினாடியில் தான் புதிதாகப் பிறந்து வந்தால் நன்றாயிருக்குமே என்று அவன் ஏங்கினான்.. கழிந்துபோன கசடு வருடங்கள் மறந்து போகும்படி ஓர் அம்னீசியா வியாதி தனக்கு வரக் கூடாதா என்று ஆசைப்பட்டான்..

யாரிந்தப் பெண்..? இவளுக்கும் தன் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்..? தோழமைக்காக தன் வாழ்வை பணயம் வைக்கும் பொய்யை எந்தப் பெண்தான் சொல்வாள்..? இவள் சொன்னாள்.. இது போதாது என்று இன்னும் அவள் எதிர்காலத்தை குலைக்கும் வண்ணம் உதவி கேட்க அவன் அழைத்திருப்பது தெரியாமல் வந்திருக்கிறாளே.. இந்த சௌந்தர்ய தேவதையின் வசம் தன் மனம் ஈர்க்கப்படுவதை உணர்ந்தும் செயலற்றவனாய் நிற்க வேண்டி இருக்கிறதே.. என்று அவன் மனம் தவித்தது.. உண்மையிலேயே அவள் போன்ற ஓர் பெண்ணை மணக்க வேண்டி வர நேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..? ஆனால் அவன்தான் தன்னை அதற்குத் தகுதியில்லாதவனாக மாற்றிக் கொண்டு விட்டானே.. ஒரு நிமிடம்..

‘வித்யா.. உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. வாழ்ந்தால் உன்னுடன்தான் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.. என்னை மணந்துகொள்வாயா..?’ என்று உளமாரக் கேட்க விரும்பினான்.. ஆனால் அதை மறைத்து வெளியில் வேறு பேசினான்..

“வித்யா.. எங்களுக்கு மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பேக்டரியும் துணி தயாரிக்கும் மில்லும் இருக்கிறது தெரியுமில்லையா..?”

“தெரியும் சார்.. பூர்ணிமா சொல்லியிருக்கிறாள்..”

“வித்யா.. அந்த பேக்டரியில் ஜெனரல் மேனேஜருக்கு அடுத்தபடி பெர்ஸனல் மேனேஜர் பதவி காலியாக இருக்கிறது.. அதற்கு நீங்கள் ஏற்றவராக இருப்பீர்கள்..”

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்..?”

“வித்யா.. நீங்கள் அந்த வேலையை ஏற்றுக் கொள்ளுங்கள்.. நீங்கள் ஜாயின் பண்ண இருக்கும் வேலையைவிட அதிகச் சம்பளம் தருகிறேன்.. நீங்கள் கொஞ்ச நாள் அங்கே வேலை பாருங்கள் பிறகு..”

“பூர்ணிமாவின் திருமணம் முடிந்தவுடன் வெளியேறி விட வேண்டும் அப்படித்தானே…”

நரேந்திரன் பேச்சிழந்து போக வித்யா கசப்புடன் சிரித்தாள்.

“வித்யா.. நான் வெளிநாட்டில் படித்தவன். எனக்கு அங்கே நண்பர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் மூலம் உங்களுக்கு நல்ல வேலை வெளிநாட்டில் நான் வாங்கிக் கொடுக்கிறேன்..”

“தேவையில்லை சார்..” என்று மறுத்தாள் வித்யா..

“அப்படியானால் நீங்கள் எங்களோடு வர மாட்டீர்களா..?”

“நான் அப்படிச் சொல்லவில்லையே.. உங்கள் உதவி தேவையில்லைன்னு தான் சொன்னேன்.. நான் உங்களோடு உங்கள் ஊருக்கு வருகிறேன்..” என்று நிதானமாகக் கூறினாள் அவள்..

“என்ன சம்மதித்து விட்டீர்களா..? நன்றி வித்யா.. மிகவும் நன்றி.. வித்யா.. நீங்கள் உங்கள் எதிர்காலத்தை நினைத்துப் பயப்பட வேண்டாம்.. அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்..”

வித்யாவின் செவிகளில் ‘உனக்கு நான் பொறுப்பு’ என்ற வார்த்தைகள் தேனாகப் பாய்ந்தன.. விரக்தியுடன் சிரித்தவள்..

“சார்.. நான் இன்ஜினியரிங் படிக்கணும்னு ஆசைப் பட்டேன்.. என் அப்பாவும்.. சித்தியும் படிக்க வைக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. வேலை தேடியது இந்தப் படிப்பிற்காகத்தான்.. நான் ஆசைப்பட்ட படிப்பை படித்து முடித்துவிட்டேன்.. இனி இந்த வேலை எனக்குத் தேவைப் படாது.. நான் வருகிறேன்.. என் வேலைக்கான சம்பளத்தை மட்டும் கொடுங்கள் போதும்.. பூர்ணிமா திருமணம் முடிந்தவுடன் என் படிப்பு எனக்கு ஒரு நல்ல வேலையை தேடிக் கொடுக்கும்.. அதனால் நீங்கள் எனக்காகக் கவலைப்பட வேண்டாம்..”

“வித்யா.. எனக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை.. எனக்காகவும் மனம் இரங்க ஒரு ஜீவன் இருக்கிறதா..?”

வித்யா உதடுகளை மடித்துக் கடித்துக் கொண்டாள்.. ‘உனக்காக மட்டும்தானே நான் இருக்கிறேன்..? உனக்கு உதவாமல் யாருக்கு உதவப்போகிறேன்..’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டவள்..

“வெயிட் சார்.. என்னுடை நிபந்தனைகளை கேட்டு விட்டு சந்தோசப்படுங்கள்..” என்றாள்..

“என்ன நிபந்தனை வித்யா..? எது வேண்டுமானாலும் செய்கிறேன்.. பணம் வேண்டுமா..? இல்லை சொத்தாக ஏதாவது.. இங்கே இருக்கும் பங்களாக்களில் என் பெயரில் உள்ளதை உங்கள் பெயருக்கு எழுதித் தருகிறேன்.. மேலும் பேங்கில் டெபாசிட்டாக ஒரு தொகையை.. எவ்வளவு வேண்டுமென்று சொல்லுங்கள்.. போட்டு விடுகிறேன்.. உங்கள் எதிர்காலப் பாதுகாப்பிற்கு வேறு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் வித்யா..”

“சார்.. உங்கள் பணம் உங்களோடு.. நான் வேலை பார்ப்பதற்கு மட்டும் எனக்கு ஊதியம் கொடுங்கள் போதும்.. வேறு ஏதேனும் செய்ய நினைத்தால் அந்த வினாடியிலேயே வெளியேறி விடுவேன்..”

“ஓகே.. ஓகே.. என்ன நிபந்தனை சொல்லுங்கள்..”

“நான் அங்கே இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நான் இருக்கும் காலம் வரை நீங்கள் சிகரெட் பிடிக்கக்கூடாது.. மது அருந்தக் கூடாது.. அப்புறம்..”

“பெண்களின் சிநேகிதம் கூடாது.. சரி.. வித்யா.. நீங்கள் சொன்ன அத்தனைப் பழக்கமும் இடையில் வந்ததுதான்.. எனக்காக நீங்கள் கவர்ன்மெண்ட் வேலை, மல்ட்டி நேஷனல் கம்பெனியின் வேலைன்னு அனைத்தையும் விடும்போது நான் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு இந்த மோசமான பழக்கங்களை விட மாட்டேனா..” என்றவன் தன் பாக்கெட்டில் இருந்த சிகரெட் பெட்டியை எடுத்துத் தலையைச் சுற்றி எறிந்தான்.. வித்யா மனம் விட்டுச் சிரித்தாள்..

“அப்புறம் வித்யா.. இன்னொரு விஷயம்..”

“இனியும் என்ன..?”

“இல்லை.. நான் உங்களை ‘நீங்கள் வாங்கள்’ன்னு கூப்பிடுவது மற்றவர்களிடம் சந்தேகத்தை உண்டாக்கும்..”

“என்னை தாராளமாக ‘நீ, வா, போ’ன்னு ஒருமையில் கூப்பிடலாம்..”

“அப்புறம் என்னை நீ ‘சார்’ன்னு கூப்பிட வேண்டாமே..”

“வேறு எப்படிக் கூப்பிடுவது..?”

“என் பெயரைச் சொல்லிக் கூப்பிடு..”

“இல்லை சார்.. எனக்கு அப்படிக் கூப்பிட வராது..”

“வர வேண்டும்.. இல்லாவிட்டால் பூர்ணிமா சந்தேகப் படுவாள்..”

“ம்.. முயற்சி செய்கிறேன்… இப்போது நாம் போகலாமா..”

இருவரும் கீழே இறங்கி வந்தார்கள்.. வித்யா தன் அறைக்குள் போய் கதவைச் சாத்திக் கொள்வதற்கு முன் ஒரு முறை நிமிர்ந்து பார்த்தாள்.. அதே கணம் பூர்ணிமாவின் அறைக்குப் பக்கத்திலிருந்த இன்னொரு பெரிய அறைக்குள் போக வேண்டிய நரேந்திரன் திரும்பிப் பார்த்தான்.. இருவர் பார்வையும் சந்தித்துக் கொண்டன.. பார்த்த விழிகளில் ஓராயிரம் தாபங்கள்.. ஏக்கங்கள் நிராசைகள் இருந்தன..

வித்யா அறைக்கதவோடு மனக் கதவையும் தாழிட்டுக் கொண்டாள்.. மூடிய கதவின் மேல் சாய்ந்து நின்றவளின் நெஞ்சம் விம்மியது.. இனம் புரியா சோகம் நெஞ்சை அழுத்தியது.. கண்களில் கண்ணீர் வழிந்தது.. படுக்கையில் சாய்ந்து தலையணையில் முகம் புதைத்துக் கொண்ட அந்தத் தாயில்லாத பேதை குலுங்கி அழுதாள்.. அவள் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே ஒரு ஜீவனான பூர்ணிமாவிடம் கூடச் சொல்ல முடியாத சோகத்தை சுமந்தவளாய் நெஞ்சம் கனக்க அவள் கண்ணீர் விட்டாள்.. தலையணை நனைந்தது.. கண்ணீரில் துயர் கரைத்தவள் தன்னை அறியாமல் தூங்கி விட்டாள்..

மறுநாள் காலையில் பூர்ணிமா கதவைத் தட்டியதும் எழுந்தவள் முதல் நாளைய இரவின் நினைவை வலுக்கட்டாயமாய் மனதிலிருந்து அகற்றியவள் தேர்விற்கான பாடங்களை படிப்பதில் முனைந்தாள்.. அன்றைய தேர்வு முடிந்து இருவரும் வீட்டிற்கு வர நரேந்திரன் ஊருக்குக் கிளம்பத் தயாராகி இருந்தான்..

“என்னங்கண்ணா.. கிளம்பி விட்டீர்களா..?”

“ம்.. சாப்பிட்டதும் கிளம்ப வேண்டியதுதான்.. உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்..”

“வித்யாவுக்காக காக்கவில்லையா..?”

“அவளுக்காகவும் தான்.. ஹி.. ஹி..”

“போதும் வழிகிறது.. வித்யா பாரேன் அண்ணாவின் முகத்தை..” என்று தோழியைத் திரும்பிப் பார்த்தாள் பூர்ணிமா..

உணர்ச்சி மரத்துப் போன குரலில்.

“பார்த்தேன் பூர்ணி.. வாயேன் சாப்பிடலாம்..” என்றாள் வித்யா..

நரேந்திரன் வேதனையடைந்தான்.. சீக்கிரம் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுக் கிளம்பி விட வேண்டும்.. இந்தக் குணவதியை மென்மேலும் சோதிக்கக் கூடாது.. சோதனைக்கு ஆளாக்கவும் கூடாது..

“பூர்ணி.. வா சாப்பிட்டு விடலாம்.. உன் அறைக்குப் போய் நாம் பேச வேண்டியது நிறைய இருக்கிறது..”

பூர்ணிமாவின் அறையில் அவர்கள் அமர்ந்திருந் தார்கள்.. பூர்ணிமா வழக்கம் போல் அறைக் கதவை அடைத்திருந்தாள்.. வித்யா, பூர்ணிமாவின் அருகே அமர்ந்திருந்தாள்.. விரக்தியுடன் இருந்தாலும் அதை வெளியே மறைத்து அமைதியுடன் காட்சியளித்தாள்.. நரேந்திரன் தன் சின்னஞ்சிறு தங்கைக்காக அவளது வயதையொத்த ஒரு சிறு பெண்ணின் வாழ்வில் விளையாடுகிறோமே என்ற தவிப்பிலிருந்தான்.. எனவே ஒரு வகையான பரபரப்போடு கால் மாற்றி உட்காருவதும் செல்போனை நோண்டுவதுமாக இருந்தான்.. பூர்ணிமா அவனது செல்போனைப் பிடுங்கி அணைத்துத் தூக்கி எறிந்தாள்..

“முதலில் என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்.. அதைச் சொல்லுங்கள்..” நரேந்திரன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.. வித்யாவைக் குற்ற உணர்வுடன் ஒரு முறை பார்த்துக் கொண்டான்..

“பூர்ணி.. பரிட்சை முடிந்ததும் வித்யா உன்னுடன் தான் வரப் போகிறாள்..”

“ஹையோ..” என்றபடி தோழியைக் கட்டிக் கொண்டாள் பூர்ணிமா..

“பூர்ணி.. வித்யாவுக்கு நம் பேக்டரியில் பெர்ஸனல் மேனேஜர் வேலையைக் கொடுக்க இருக்கிறேன்.. உன் திருமணம் முடிந்து.. என் பிரச்னைகளும் சரியான பின் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம்..”

நரேந்திரன் கை விரல் நகங்களைப் பார்த்தபடி இதைக் கூறினான்..

“சரி அண்ணா.. வித்யாவிற்கு நம் வீட்டில் மாடி அறைகளில் என் அறைக்குப் பக்கத்திலிருக்கும் அறையை கொடுத்து விடலாம்..” என்று அவள் கூற மற்ற இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது..

இதை யோசிக்கவேயில்லையே என்று வித்யா தவித்த போது நரேந்திரன் மிகத் தெளிவாக அதை ஏற்றுக் கொண்டான்.. எப்போது அவன் வார்த்தைக்காக வித்யா அவளது வாழ்வை பணயம் வைக்கிறாளோ.. அதன் பின் அவள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் அவள் நரேந்திரனது பொறுப்பு.. அவளது எதிர்காலத்தை செம்மையாக்க அவன் நிச்சயம் பாடுபடுவான்.. தகுந்த மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்து வைப்பான்.. அவன் மனதில் ஓர் எண்ணம் உதித்திருந்தது.. அதற்கு வித்யாவை நிச்சயம் சம்மதிக்க வைத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் நிமிர்ந்தான்.. வித்யா அவனுக்காக அவன் பின்னே வரும்போது அவள் வீட்டில் அவன் காவலில் தான் தங்க வேண்டும்.. அதில் சந்தேகம் என்ன இருக்கிறது..?

“நானும் அதையேதான் நினைத்தேன் பூர்ணிமா.. அடுத்த வாரம் நீங்களிருவரும் வரும்போது உங்களிருவரின் ரூம்களும் உங்கள் வருகைக்குத் தயாராகக் காத்திருக்கும்..”

நரேந்திரன் கிளம்பிப் போனான்.. பரிட்சை முடிந்து வீட்டைக் காலி பண்ணிக் கொண்டு வரும் பொறுப்பை சின்னய்யன் வசம் ஒப்படைத்து விட்டு சதாசிவம் காரோட்ட கண்ணம்மாவை அழைத்துக் கொண்டு அவர்கள் மணிமுத்தாறை நோக்கிப் பயணப்பட்டனர்..

0Shares

Reviews – Nathiyoram Nadantha Pothu / நதியோரம் நடந்தபோது…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link