Chapter 14

0Shares

ஹரிஹரனின் முகம் கடுமையாக மாறியிருந்தது.. முகச்சுளிப்புடன் ரூபிணியைப் பார்த்தான்.. கண்ணுக்குக் குளுமையாக அழகான தோற்றத்துடன் அவள் இருந்தது அவனது கோபத்தைக் குறைக்கவில்லை.

ரூபிணி அவனது முக மாற்றத்தைக் கவனிக்காமல் சாலையிலேயே கவனமாய் இருக்க,

“கார் கதவு மூடியிருக்கிறது.. உள்ளே யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று வெளியே தெரியாது…” என்றான் எரிச்சலுடன்..

நிம்மதியுடன் ரூபிணி.. “அப்பாடி…” என்று மூச்சுவிட்டாள்..

அப்போதுதான் அவனது முகத்தைக் கவனித்தவள் துணுக்குற்றாள்..

‘இவன் ஏன் இவ்வளவு கோபமாய் இருக்கிறான்..?’

ஹரிஹரனின் விரல்கள் ஸ்டியரிங்கில் தாளமிட்டுக் கொண்டிருந்ததையும் அவன் தன் டென்சனை கட்டுப்படுத்திக் கொள்ள முயல்வதையும் கண்டவள்,

“கோபமாய் இருக்கிறீர்களா..?” என்று பயத்துடன் கேட்டாள்..

“இல்லை.. மகா சந்தோசமாய் இருக்கிறேன்..” அவன் வெடித்தான்..

“நான் என்ன செய்தேன்..?”

“கடுப்பைக் கிளப்பாதே.. இப்போது என்ன நடந்து விட்டதுன்னு இப்படி ஓவராய் ரியாக்ட் பண்ணுகிறாய்..? ரோட்டில் வண்டி ரிப்பேர்ன்னு நின்று கொண்டிருந்தாய்.. வண்டியை வொர்க் சாப்புக்கு அனுப்பி விட்டு உன்னைக் காரில் அழைத்துக் கொண்டு வருகிறேன்.. உடம்பு சரியில்லையென்று சொன்னாய்.. டாக்டரிடம் போகலாம் என்றேன்.. இதற்குப் போய் இப்படி அலறக் காரணம் என்ன? நான் முதன் முதலாய் பார்த்த அஞ்சாத பார்வை கொண்ட அந்த ரூபிணி எங்கே.. இயல்பான செய்கைகளுக்குக் கூட பயந்து அலறும் இந்த ரூபிணி எங்கே.. ஏன் இப்படி மாறிப்போனாய்…?” அவன் கோபத்துடன் படபடத்தான்..

“நீங்கள் ஒருவர்தான் பாக்கி.. நீங்களும் சொல்லி விட்டீர்களா…” ரூபிணி கண் கலங்கிவிட்டாள்..

“ஸ்ஸ்.. இப்போது எதற்காக இந்தக் கண்ணீர்..? நேற்று இரவும் இப்படித்தான் அழுதாய்.. வாட் இஸ் ராங் வித் யு ரூபிணி.. உன்னை உன் ஹாஸ்டலில் டிராப் பண்ணத்தானே காரில் ஏறச் சொன்னேன்..? வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லையே…”

“ஹரி.. ப்ளீஸ்.. இப்படியெல்லாம் பேசாதீர்கள்.. நான் கனவில் கூட உங்களைப் பற்றித் தவறாக நினைத்த தில்லை.. இனி நினைக்கவும் மாட்டேன்..” ரூபிணி இன்னும் கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள்..

‘ஹரி…’ என்ற அழைப்பில் அவனது இறுக்கம் தளர்ந்து இளகியவன்..

“ஈஸி.. ஈஸி.. இயல்பாய் இருக்காமல் இப்படிப் பேசுகிறாயே என்ற கோபம்தான் எனக்கு.. லீவ் திஸ் மேட்டர்…” என்றான்.

“இல்லை ஹரி.. இதை இப்படியே விட்டு விட முடியாது.. நேற்றுப் பார்த்து பேசியதற்கே என் பிரண்ட்ஸ் என்னை திட்டினார்கள்..”

“அவர்கள் ஏன் உன்னைத் திட்ட வேண்டும்..?”

“நீங்கள் மூர்த்தியை பனிஷ் பண்ணியது.. என் பின்னால் ஒரு ஆளை பாதுகாப்பாய் ஹாஸ்டல் வரை புல்லட்டில் பாலோ பண்ண வைத்தது.. எல்லாமே எல்லோருக்கும் தெரிந்து விட்டது…”

“அதனால் என்ன..? என் கண் முன்னால் அந்த ராஸ்கல் உன்னை டார்ச்சர் பண்ணினான்.. வார்ன் பண்ணினேன்.. வெளியே போனதும் உன்னை பாலோ பண்ணி வம்பு இழுப்பானோ என்ற சந்தேகத்தால் பாதுகாப்புக்கு ஒரு ஆளை உன் பின்னால் அனுப்பி வைத்தேன்..”

“இந்த அதீதமான அக்கறை எனக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்…”

“ஆபத்தா….? என்னாலா..? உனக்கா..?”

“ஆமாம்…”

“உன் மேல் சிறு துரும்பு பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.. என்னால் உனக்கு எப்படி ஆபத்து வரும் ரூபிணி..?”

“வேண்டாம்.. நேற்று இரவு முழுவதும் தூங்காமல் போனில் பேசும் அளவிற்கு நமக்குள் என்ன இருக்கிறது..?”

“எதுவும் இல்லையா..? உன் மனச்சாட்சியைக் கேள்..”

“இந்த வேகத்தை நான் தாங்கமாட்டேன்.. நேற்று தூக்கம் கெட்டது உங்களை எந்த விதத்திலும் பாதிக்க வில்லை.. ஆனால் நான் ஆபிஸில் வேலை செய்ய முடியாமல் லீவ் போட்டுவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்…”

“எனக்குத் தூங்காமல் கண் விழித்துப் பழக்கம் உண்டு. பல பிஸினெஸ் பார்க்கிறவன் நான்.. நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரம் தூங்கினாலே அதிகம்…”

“அதைத்தான் சொல்கிறேன்.. உங்கள் பழக்க வழக்கமும் வாழ்க்கை முறையும் வேறு.. என் பழக்கவழக்கமும் வாழ்க்கை முறையும் வேறு…”

“எதிர்மறைத் துருவங்கள் தானே ஒன்றையொன்று ஈர்க்கும்…”

“நீங்கள் பெரிய பிஸினெஸ் மேன்.. என்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் உங்களிடம் விடை இருக்கும். ஆனால் நான்..? போன வருடம் வரை என் பேரண்ட்ஸின் நிழலில் காலேஜ் படித்துக் கொண்டிருந்த மாணவியாக இருந்தேன்.. இந்த வருடம் தான் வேலைக்கு என்று அவர்களைப் பிரிந்து தனியாக வந்திருக்கிறேன்.. என் பிரண்ட்ஸ் என்னைப் பார்த்து இன்று கேட்ட கேள்விகளை நாளை என் பேரண்ட்ஸ் என்னைப் பார்த்து கேட்டு விடக்கூடாது..”

“அதற்காக என்ன செய்ய வேண்டும் என்கிறாய்..? நான் உன்னை டிஸ்டர்ப் செய்வதாக நீ நினைக்கிறாயா..?”

“நிச்சயமாக இல்லை.. எனக்கு உங்களைப் பிடிக்கும்..”

“என்ன சொன்னாய்..? திரும்பவும் சொல்லு…” ஹரியின் விழிகள் மின்னின..

“எனக்கு உங்களை மிக.. மிக.. அதிகமாகப் பிடிக்கும் ஹரி.. ஆனால் அது எதனால் என்று நான் இன்னும் சரிவர ஒரு முடிவிற்கு வரவில்லை..” ரூபிணி மெதுவான குரலில் கூறினாள்.

“இதில் முடிவுக்கு வர என்ன இருக்கிறது..?”

“இல்லை ஹரி.. நான் என்னுடைய இந்த வயதுவரை பார்த்த ஆண்கள் வேறு.. நீங்கள் வேறு.. உங்களைப் பார்ப்பதற்கு முன் உங்களைப் பற்றி ஏதேதோ சொல்லிப் பயமுறுத் தினார்கள்.. நேரில் பார்த்தால் நீங்கள் மிகவும் நல்லவராக.. நியாயவாதியாக இருந்தீர்கள்.. உங்களிடம் வேலை பார்த்தவனை பனிஷ் பண்ணுவது உங்கள் சொந்த விசயம்… மனம் பொறுக்காமல் நான் அதில் தலையிட்டேன்.. எனக்காக நீங்கள் லாரன்ஸை மன்னித்து வேலைக்குச் சேர்த்துக் கொண்டீர்கள்.. இதனால் சொல்லத் தெரியாத சொந்தம் ஒன்று உங்கள் மேல் எனக்குள் உருவாகிவிட்டது… ஆனால் இதையெல்லாம் வைத்து பெரிய முடிவிற்கு என்னால் வர முடியவில்லை..” ரூபிணி சஞ்சலத்துடன் பேசினாள்.

“ஓ.கே.. நீ குழப்பத்தில் இருக்கிறாய்.. டேக் யுவர் ஓன் டைம். எவ்வளவு நாள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்.. நீயாக ஒரு முடிவுக்கு வந்து என்னை போனில் அழைக்கும் வரை நான் உன்னை எந்த வகையிலும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. உன் மனதிலிருப்பதை நீ சொல்லிவிட்டாய்.. என் மனதில் இருப்பதையும் தெரிந்துகொள்.. என்னை வசீகரித்த முதல் பெண் நீ.. இந்த ஹரிஹரன் பெண்கள் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டான். ஆனால்.. உன் முகம் பார்க்காமல் இனி இருக்கவும் மாட்டான்.. உன்னைப் பார்க்கும் வரை உன் மேல் நல்ல ஓபினியன் எனக்கு இல்லை.. ஊர் சுற்றிப் பார்க்க வந்தவள் விளையாட்டாய் என் ஆள் ஏதோ சொன்னதற்கு வேண்டுமென்றே ஈவ் டீஸிங் என்று புகார் பண்ணிவிட்டாள் என்ற கோபம் தான் எனக்கு இருந்தது.. ஆனாலும்.. நீ வெளியூரிலிருந்து வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாய்.. உன்னிடம் நானே நேரே பேசுவதுதான் உனக்குப் பாதுகாப்பு என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே நான் உன்னை நேரில் பார்க்க வந்தேன்…”

“ஏன்..? இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும்?” ரூபிணி புரியாதவளாய் கேட்டாள்.

“நீயே சொன்னது போல் என் உலகம் வேறு ரூபிணி.. என் ஆள்கள் ஒருவர் மேல் ஒருவர் பாசமாய் இருப்பவர்கள்.. அவர்களில் ஒருவனை நீ தூக்கி உள்ளே போட்டு விட்டதால்.. உன் மேல் கோபமாய் இருந்தார்கள்.. உன்னைப் பார்த்துப் பேச யாரை நான் அனுப்பியிருந்தாலும் அவன் உன்னிடம் நல்ல விதமாய் பேசியிருக்க மாட்டான். மிரட்டியிருப்பான்.. அதைத் தவிர்க்கத்தான் நானே உன்னிடம் நேரில் பேச வந்தேன்..” ஹரிஹரன் அவள் முகம் பார்த்தான்..

“இதில் இவ்வளவு விசயம் இருக்கிறதா..?” கண் விரியக் கேட்டாள் ரூபிணி.. ஹரிஹரனின் அந்தக் குணம்.. அந்தத் தன்மை.. அவளைக் கவர்ந்தது.

“ஆமாம்.. வந்த இடத்தில்.. உன்னைப் பர்த்ததும் அயர்ந்து விட்டேன்.. உன் பேச்சும்.. உன் பக்க நியாயத்தை நீ விளக்கிய விதமும்.. என்னைக் கவர்ந்து விட்டன.. முதன் முதலாய் ஒரு பெண்ணின் மேல் எனக்குள் ஓர்வித ஈர்ப்பு தோன்றியதென்றால்.. அது உன் மீது தான்..” ஹரிஹரன் முகம் திருப்பி சாலையைப் பார்த்தான்..

ரூபிணி கீழ் உதட்டை மடித்துப் பற்களால் கடித்தாள்.. சரேலெனத் திரும்பிய அவனது பார்வை அவள் உதட்டில் படிந்தது. ரூபிணி முகம் சிவக்க பார்வையைத் தாழ்த்தினாள். ஹரிஹரனின் முகம் மென்மையானது..

ஓர் சிறு பார்வையைக் கூடத் தாங்க முடியாமல் நாணித் தலைகுனியும் பூங்கொடி போன்றவள் இவள்…

இவளை எப்படி அவனால் விட முடியும்..?

0Shares

Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link