Chapter 27
“கிளியை வளர்த்து பூனையிடம் கொடுப்பதா..?”
“புலி கையில் கொடுப்பதற்கு பூனை கையில் கொடுப்பது பெட்டர்டி…”
“கல்யாணம் பண்ணிக்காமலே குடும்பம் நடத்து கிறவனுக்கு பெண்டாட்டி எதற்கு..?”
“இத்தனைக்கும் பின்னால் நம் பெண்ணை யார் கட்டுவார்கள்..”
“அதற்கு அவளுக்குக் கல்யாணம் என்ற ஒன்றையே பண்ணாமல் விட்டு விடலாமே…”
“விட்டால் அவளைப் பிடிக்க முடியாது போல இருக்கேடி…”
“அதுக்காக அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.. இப்போதைக்கு அவளை உடனே கிளம்பி வரச் சொல்லுங்க.. வந்தவுடன் லீவை எக்ஸ்டென்சன் பண்ணச் சொல்லலாம்.. நமக்குத் தோதான இடமாய் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்.. அதை விட்டு விட்டு கிடைத்தது சாக்குன்னு உங்க அக்காள் மகனுக்கு என் பெண்ணைக் கொடுக்கணும்னு பேசினீங்கன்னா நடக்கிறதே வேற.. நான் பொம்பளையா இருக்க மாட்டேன்.. சொல்லி விட்டேன்..”
ரெங்கநாதன் வேகம் தணிந்தார்..
“இல்லைடி வீரலட்சுமி.. நான் எதற்கு சொல்கிறேன்னு கொஞ்சம் கேட்டுப் பேசுடி…”
“என்னத்தைக் கேட்கிறது..? எனக்கு உங்கள் புத்தி போகும் போக்குத் தெரியாதா..? இப்ப என்ன… மொட்டைக் கடுதாசி வந்திருக்கு.. ரூபிணியைக் கூப்பிட்டு விசாரிப்போம்.. அவள் பக்கம் என்ன நியாயம் இருக்குன்னு கேட்போமே..”
“அவள் உண்மையிலேயே அந்த ஹரிஹரனைக் காதலித்திருந்தால்…”
“கேட்போம்.. அவள் சொல்லட்டும்.. அதன் பின்னால் ஒரு முடிவு எடுப்போம்..”
“என் அக்கா மகனைக் கூப்பிட்டுப் பேசும் முடிவுதானே..”
“அதற்கு என் மகளின் கழுத்தை நெரித்துக் கொன்று விடலாம்..” வீரலட்சுமி வெறி கொண்டவளாய் முறைத்தாள்.. ரெங்கநாதன் பின் வாங்க வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்து பின் வாங்கினார்.. செல்போனை எடுத்து ரூபிணியிடம் பேசினார்..
“அப்பா..” ரூபிணியின் குரல் கேட்டது..
“நீ உடனே லீவு போட்டுவிட்டு கிளம்பி வாம்மா…” ரெங்கநாதன் பல்லைக் கடித்தவாறு கூறினார்..
“என்னப்பா.. என்ன ஆச்சு…” ரூபிணி பதட்டமாகக் கேட்டாள்..
“இங்கே உன் அம்மாவுக்கு உடம்புக்கு முடியலைம்மா.. இழுத்துக்கோ.. பறிச்சுக்கோன்னு கிடக்கிறா..” மனைவியை முறைத்துக் கொண்டே கூறினார் ரெங்கநாதன்..
‘உங்க அக்கா மகனுக்கு பொண்ணு கொடுக்க லைன்னா.. என்னை போய் சேர வைச்சிருவீங்களா..?’ வீரலட்சுமி விழியால் கணவரை சுட்டெரித்தாள்.
“ஐயையோ.. அப்பா.. அம்மாவுக்கு இப்ப எப்படியிருக்கு…”
“உன்னைப் பார்த்தால்தான் உயிர் தங்குமாம்.. உடனே புறப்பட்டு வா..”
ரூபிணி கதறி அழுக ஆரம்பித்து விட்டாள்.. ப்ரீதி சமாதானப்படுத்த.. அலுவலகமே அவளைச் சூழ்ந்து கொண்டது.. ஒரு வழியாய் லீவு லெட்டரை எழுதிக் கொடுத்து விட்டு ரூபிணி ஹாஸ்டலுக்கு விரைய ஜவஹர் கேண்டின் பக்கம் சென்றான்.. இவன் வருவதைக் கவனிக்காமல் மூர்த்தி யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தான்.
“ஆமாம்டா.. காரியம் சக்ஸஸ் ஆகிவிட்டது.. என் ஐடியா வொர்க் அவுட் ஆகி விட்டது.. நான் போட்ட மொட்டை கடுதாசி இன்னைக்கு அவங்க கையில் கிடைச்சிருச்சு போல.. அம்மாகாரிக்கு சீரியஸ்ன்னு அப்பன்காரன் போன் பண்ணினான்.. பட்சி பதறி அழுது கொண்டு ஓடுது.. திரும்பி வரும்போது மூக்கணாம் கயிறோடுதான் வரும்.. இந்த மிடில் கிளாஸ்காரங்க சைக்காலஜி எனக்குத் தெரியாதா..? எங்கே வெடி வைத்தால் எப்படி வெடிக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். யாரைப் பார்த்து தெனாவெட்டாய் சிரிக்கிறா… ம்.. இப்ப இந்த மூர்த்தி யாருன்னு காட்டி விட்டேனில்ல..? ஹா… ஹா…”
ஜவஹர் காபி குடிக்காமலே ப்ரீதியிடம் திரும்பிச் சென்றான்.
“என்னவாம் ஐயா முகம் வேர்த்து வழியுது…?”
“வெயில்.. அதுதான் உன் பக்கத்தில் இருந்தால் குளுகுளுவென இருக்கும்ன்னு நினைத்து வந்தேன்…”
ப்ரீதி முகம் சிவந்தாள்..
“ஐயே… ஆபிஸில் வழியாமல் போய் வேலையைப் பாருங்கள்..”
“ப்ரீதி…”
“ம்ம்..”
“இந்த ரூபிணியிடம் நீ ஒரு விசயம் சொல்ல வேண்டுமே…”
“என்ன…?”
ஜவஹர் விசயத்தைச் சொன்னான்.. ப்ரீதி முகம் மாறினாள்..
“இது இவனுடைய வேலையா..? பாவி… ரூபிணி துடித்துப் போய் விட்டாள்.. பெற்ற தாய்க்கு உடல் நிலை சரியில்லையென்றால் எந்த மகள்தான் தாங்கிக் கொள்வாள்..?”
ப்ரீதி செல்போனை எடுத்து ரூபிணியின் எண்களை அழுத்தினாள்..
“சொல் ப்ரீதி…”
“அழுகிறாயா… இதற்குத்தான் போன் பண்ணினேன்.. நீ அழுகாதே ரூபிணி.. உன் அம்மாவிற்கு ஒன்றும் இல்லை.. எல்லாம் இந்த மூர்த்தி ராஸ்கல் செய்த வேலை..”
ப்ரீதி விவரம் சொல்லிவிட்டு போனை அணைத்தாள்.. ஹாஸ்டலில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த ரூபிணி தன்நிலைக்கு வந்தாள்.. பதற்றம் தணிந்து புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது..
இப்போது அவளுக்கு உடனடியாக ஹரிஹரனின் ஆலோசனை தேவை… ஹரிஹரனை போனில் அழைததாள்.. அழைத்த மறுகணம் போனில் அவன் குரல் ஒலித்தது..
“என் கண்ணம்மாவிற்கு மதியத்திலும் என் நினைவா..?”
“ஆமாம்.. உச்சி வெயிலில் உங்களை நினைத்து உருகுகிறேன்.. அதனால்தான் உங்களோடு கொஞ்சிக் குழாவ அழைத்தேன்…”
“என்னடா… எதற்கு இந்தக் கோபம்..?”
“ஹரி.. என் வீட்டாருக்கு என் காதல் தெரிந்து விட்டது…”
“என்றைக்கு இருந்தாலும் தெரிய வேண்டிய மேட்டர்தானே.. அதற்கு ஏன் இவ்வளவு பதட்டம்…?”
“நான் சொல்லி அவர்களுக்கு என் காதல் தெரியவில்லை…”
“வேறு எப்படித் தெரிந்தது…?”
“என் ஆபிஸில் ஓர் அயோக்கியன் மொட்டைக் கடிதம் போட்டிருக்கிறான்.. அதில் என்ன என்ன தப்புத் தப்பாய் எழுதி இருந்தானோ.. தெரியவில்லையே…”
“வாட்… யார் அந்த ஸ்கௌன்ட்ரல்…?”
“நீங்கள் வேறு கோபப்படாதீர்கள் ஹரி…”
“யார் அவன்னு கேட்கிறேனில்ல…”
“எல்லாம் ஏற்கனவே நீங்கள் மொத்து மொத்தென்று மொத்திய ராஸ்கல்தான்..”
“ஹோட்டலில் உன்னை டார்ச்சர் பண்ணியவனா..”
“அவன்தான்.. என்ன எழுதி வைத்தானோ… தெரிய வில்லை.. அப்பா உடனே புறப்பட்டு வரச் சொல்லி போன் பண்ணி விட்டார்… சும்மாவும் சொல்லவில்லை.. அம்மாவுக்கு சீரியஸ்.. நீ உடனே வராவிட்டால் உன் அம்மாவின் உயிருக்கு ஆபத்துன்னு சொல்லி விட்டார்… என் உயிரே பறந்து விட்டது ஹரி.. இப்போதுதான் ஹாஸ்டலுக்கு வந்து துணிகளை பேக் பண்ணிக் கொண்டிருந்தபோது ப்ரீதி போன் பண்ணிச் சொன்னாள்.. மூர்த்தி யாரிடமோ போனில் அவனுடைய வீரப்பிரதாபத்தைச் சொல்லிக் கொண்டிருந்தானாம்.. ஜவஹர் கேட்டு விட்டு ப்ரீதியிடம் வந்து சொன்னாராம்.. ஹரி… என்னை எப்படி ஆட்டி வைத்து விட்டான் பார்த்தீர்களா…”
ரூபிணியின் குரலில் வேதனை வழிந்தது.. ஹரிஹரனின் கண்கள் சிவந்தன.. அவன் ரூபிணியிடம் போனில் பேசியபடியே ஒரு பேப்பரை எடுத்து எதையோ எழுதி அவனது உதவியாளரிடம் கொடுத்தான்.. அவன் வெளியேறினான்…
Reviews – Nenjamadi Nenjam / நெஞ்சமடி நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.