Chapter 15
சந்தோஷ் மிகப் பெரிய சாதனையைச் சாதித்திருந்தான்.. அவருடைய பரம்பரையில் யாருமே தொட்டிராத வெற்றிச் சிகரத்தைத் தொட்டுக் காட்டி யிருந்தான்.. அதைச் சாதிக்க அவன் படித்த வெளிநாட்டுப் படிப்பும்.. வெளிநாட்டில் அவன் பழகிய நண்பர்களின் உதவியும் கிடைத்தன.. வங்கிக் கடன் எளிதாகக் கிடைக்க.. அவனது மேல்தட்டு நண்பர்கள் கை கொடுத்தார்கள்..
மேல்தட்டு மத்திய தர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த ராமகிருஷ்ணன்.. உயர் மட்ட வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்.. ஒரு பெரிய ஹாலும் அதையொட்டிய சமையலறையும் மட்டுமே கொண்ட அவருடைய ‘செட்டிநாடு மெஸ்’ இன்று இரண்டு ஏக்கர் பரப்பளவில்.. நீச்சல் குள வசதியுடன்.. ஆறு தளங்கள் கொண்ட நூற்று ஐம்பது அறைகளுடன் கூடிய நட்சத்திர ஹோட்டலாக உயர்ந்து நின்றது..
சந்தோஷிற்குப் பெண் கொடுக்க.. மேல் தட்டு வாசிகள் ஆர்வம் காட்டினர்.. ஆனால் சந்தோஷ்.. திருமணத்தில் ஆர்வம் காட்டவில்லை.. அதில் ராம கிருஷ்ணனுக்கும்.. ஜானகிக்கும் வருத்தம் நிறைய உண்டு..
“ஏன் இப்படியிருக்கான்னு தெரியலை சரசு.. நீயாவது உன் தம்பிக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா..”
தினமும் மகளிடம் போனில் பேசும்போது.. தவறாமல் இந்த வார்த்தைகளைச் சொல்லிப் புலம்புவாள் ஜானகி..
சரஸ்வதியும் தம்பியிடம் பலவிதமாய்க் கேட்டுப் பார்த்து விட்டாள்..
“என்னை இம்ப்ரெஸ் பண்ணுகிறது போல.. ஒரு பெண் கூட என் கண்ணில் தட்டுப்படவில்லையே அக்கா..!” என்று அவன் கூறிவிடுவான்..
“நீ பெண் பார்க்கப் போனால்தானே.. உன்னை இம்ப்ரெஸ் பண்ணும் பெண்ணை நீ பார்க்க முடியும்..?” சரஸ்வதி தம்பியை மடக்குவாள்..
“அப்பா கொண்டு வரும் இடமெல்லாம்.. ஹைடெக் அக்கா.. என்னை அது இம்ப்ரெஸ் பண்ணாது..”
“இதைப்பாருடா.. நம் தமிழ்நாட்டுக் கலாச்சாரத் தோடு.. அம்மாவின் கைமணத்தோடு.. வீட்டுச் சமையலின் ருசியோடு இருந்த மெஸ்ஸைக் காலி பண்ணிவிட்டு.. ஹைடெக் ஸ்டார் ஹோட்டலைக் கொண்டு வந்திருக்கும் முதலாளியின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளா இது..?”
“அக்கா.. தொழில என்பது வேறு.. வாழ்க்கை என்பது வேறு..”
“எப்பேர்ப்பட்ட கண்டு பிடிப்பு.. சொல்லு.. சொல்லு..”
“என் தொழிலில் நான் உச்சத்தைத் தொட ஆசைப் பட்டேன்.. தொட்டு விட்டேன்.. என் வாழ்க்கையில்.. மனதுக்குப் பிடித்த ஒரு பெண்ணோடு வாழ ஆசைப் படுகிறேன்..”
“அப்பா பார்க்கும் பெண்களில் ஒருத்திகூட உன் மனதைத் தொடாமல் போய் விடுவாளா..? நீதான் பெண் பார்க்கவே போக மாட்டேன் என்கிறாயாமே..”
“பெண் பார்க்கத்தான் போவதில்லை.. பெண்ணின் போட்டோவைப் பார்க்காமல் இருக்கிறேனா..? பார்க்கிறேனே..”
“வெறும் போட்டோவில் என்னடா தெரியும்..? அது வெறும் நிழல்டா..”
“நிழலிலேயே கர்வத்துடன் பார்க்கிறவள், நிஜத்தில் எப்படி இருப்பாள்.. நீயே சொல்லு..”
“சந்தோஷ்.. நீயாக எதையாவது நினைத்துக் கொண்டு கல்யாணத்தைத் தள்ளிப் போடாதே.. ஹைடெக் பெண்கள் வேண்டாமென்றால்.. மிடில் கிளாஸில் பெண் தேடச் சொல்கிறேன்..”
“அக்கா.. இங்கே வாழ்க்கைத் தரம் என்பது முக்கிய மில்லை.. எனக்குப் பிடித்தவள் ஹைகிளாஸிலேயே அமைந்தால் வேண்டாம்ன்னா சொல்லப் போகிறேன்..? அப்படி ஒரு பெண்ணைக்கூட இதுவரை.. நான் பார்க்க வில்லையே, அக்கா..”
“என்னவோ போ… உன் மனதில் என்ன இருக்கிறதுன்னு எனக்கு ஒன்றும் விளங்கவில்லை..”
சரஸ்வதி தம்பியுடன் போராடிப் பார்த்து விட்டு.. கடைசியில் பின்வாங்கி விட்டாள்..
“அம்மா.. அவன் மனதிற்குப் பிடித்த பெண்ணை அவனே பார்த்துக் கொள்ளட்டும்.. நாம் எது செய்தாலும் அவன் ஒப்புக் கொள்ளப் போவதில்லை.. எனவே.. அவன் போக்கிலேயே அவனை விட்டு விடுங்க..”
சரஸ்வதி இப்படிக் கூறிய பின்னும்.. ஜானகிக்கு மனம் அலைபாயும்.. உறவினர் வீட்டு விசேஷங்களுக்குப் போனால்.. திருமண வயதிலிருக்கும் பெண்களை விழியால் பார்வையிடுவாள்.. அவர்களைப் பற்றி விசாரிப்பாள்.. அவர்களும் சந்தோஷ் இருக்கும் இடத்தைச் சுற்றிச் சுற்றி வருவார்கள்.. ஆனால் சந்தோஷ் அவர்களின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான்..
“என்ன பையனோ.. இப்படி பெண் வாடை ஆகாதுன்னு இருந்தால் எப்படி..?” ஜானகி அங்கலாய்த்துக் கொண்டிருந்த போதுதான், அது நிகழ்ந்தது..
சுகந்தியைப் பெண் பார்க்கப் பிரசன்னாவின் குடும்பம் வந்தபோது.. ராமகிருஷ்ணனின் குடும்பம் ஊரில் இல்லை.. சரஸ்வதியின் வீட்டிற்கு.. பெங்களூருக்குச் சென்றிருந் தார்கள்.. திரும்பி வந்தபின்.. செய்தி அறிந்த சந்தோஷ்.. சுகந்தியிடம் விசாரித்தபோது.. அவள் தன் செல்போனில் படம் பிடித்து வைத்திருந்த பிரசன்னாவின் குடும்பத்தைக் காட்டினாள்..
Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.