Chapter 26

0Shares

மேடையில் வேலைப்பாடுகள் செய்த நாற்காலி போடப்பட்டு.. அதில் சுகந்தி அமர வைக்கப்பட்டிருந்தாள்.. பெண்மணிகள் எல்லோரும் வரிசையாய் மேடைக்குப் போய் நலங்கு வைத்துவிட்டு வந்தார்கள்..

பிரசன்னா ஓரமாக.. உறவினர்களின் மத்தியில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போல் பாவனை செய்து கொண்டே.. மேடையைக் கவனித்துக் கொண்டிருந்தான்..

“பிரசன்னா.. பெண்ணுக்கு மோதிரம் போட வா..”

பிரசன்னாவின் பெரியம்மா அழைக்கவும்.. அதற்காகவே காத்திருந்தவன்.. ஆவலுடன் எழுந்து கொண்டான்.. பட்டு வேட்டி சரசரக்க.. மேடையேறினான்.. புதிய மோதிரத்தைப் பெட்டியில் இருந்து எடுத்து அவனுடைய பெரியம்மா கொடுக்க.. அவளது விரல் பற்றி.. மெலிதாக அவளுக்கு மட்டும் புரியும்படி அழுத்தம் கொடுத்துவிட்டு.. மோதிரத்தை அணிவித்தான்..

சுகந்தியின் மேனி சிலிர்த்தது.. அவளது உடலில் மின்சாரம் பாய்ந்தது… குனிந்தவனின் விழிகள்… அவளுடைய விழிகளுடன் கலக்க.. அதை வீடியோ காமெரா பதிவு செய்தது..

மணமக்களின் இந்த உணர்வுகளை.. அவர்களது முகங்கள் பிரதிபலிக்க.. அதை ரசித்த வண்ணம்.. மண்டபத்தின் வாசலருகே நின்று கொண்டிருந்தாள் வாசவி.

“அக்கா.. இங்கே வாயேன்..” அவளுடைய சித்தியின் பெண் ரமா அழைத்தாள்..

“என்னடி..” என்றவாறு அருகே சென்றாள் வாசவி..

“இந்த டேபிளை இங்கே போடலாமா.. இல்லை அங்கே போடலாமா..? நீயே பார்த்துச் சொல்.. ஏன்னா உன்னுடைய ஒபினியன்தான் இதற்கு ரெம்பவும் முக்கியம்..!” என்று பெரிய மனுஷி போல் கூறினாள் ரமா..

“ஏன்டி.. இந்த மரடேபிளென்ன.. எனக்கு மாப்பிள்ளையாக வரப்போகிறதா..? இதைப் பற்றி என்னிடம் ஒப்பினியன் கேட்கிறாயே.. காது வலி குறைந்து போய் விட்டது போல.. திரும்பவும் திருகினால்தான் நீ சரிப்படுவாய் போல..” வாசவி ரமாவின் காதைப் பிடிக்கப் போனாள்..

“நீ காதைத் திருகுவதிலேயே குறியாக இரு.. நாளைக்கு வரவேற்பில் நீதானே நிற்க வேண்டும்..”

“ஆமாம்.. நீயும்தான் கூட நிற்பாயே..”

“நிற்பேன்தான்.. ஆனால்.. எனக்கொன்றும் பாசமலர் தங்கையாக அண்ணனை மேடையில் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.. வரவேற்பில் நிற்கவும் வேண்டும் என்று இருக்காதே.. நீதானே மேடையையும் பார்க்க வேண்டும்.. வரவேற்பிலும் நிற்க வேண்டும்ன்னு சொன்னாய்..”

“அட.. ஆமாம்..”

“அதைச் சொன்னால் என் காதைத் திருக வருகிறாயே..”

“ஸாரி.. ஸாரி.. ஸாரி..”

“சரி.. சரி.. சரி.. முதலில் டேபிளை எங்கே போட வேண்டும்ன்னு சொல்லு..”

“ம்ம்ம்..”

வாசவி நின்று.. மேடை தெரியும் கோணத்தைக் கணக்கிட்டாள்..

“இதோ.. இங்கே.. இப்படித் திருப்பிப் போடு..”

“அசைக்க வரவில்லைக்கா..”

“ஏன்டி.. மூக்கு முட்டச் சாப்பிட்டாயா.. இல்லையா..? இதைத் தூக்க உனக்குச் சக்தி இல்லையா..?”

“நான் மட்டுமா சாப்பிட்டேன்..? நீயும்தானே சாப்பிட்டாய்.. நீ தூக்கு..”

ரமா கோபமாய்க் கூறவும் வாசவி.. மேஜையை அசைத்துப் பார்த்தாள்.. அது அசைய மறுத்தது..

“என்னடி இது.. இந்த டேபிள் இப்படி அழிச்சாட்டியம் பண்ணுது..?”

வாசவி.. கையை ஊதிக் கொண்டு.. கவலையுடன் மேஜையைப் பார்த்தபோது.. அவள் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது..

“நான் வேண்டுமானால் ஹெல்ப்.. பண்ணட்டுமா..?”

திரும்பிப் பார்க்காமலேயே.. அது சந்தோஷின் குரல் என்பதை உணர்ந்து கொண்ட வாசவி.. பல்லைக் கடித்தாள்..

“வேண்டாம்..”

“ஏன்க்கா.. வேண்டாம் என்கிறாய்.. மாமாதான் ஹெல்ப் பண்ணுகிறேன்னு சொல்கிறாரே..”

ரமா வாதாட.. வாசவி பல்லைக் கடித்தபடி.. அவளை முறைத்தாள்..

“மாமாவா..? யார் மாமா..? யாருக்கு மாமா..?”

“ஏன்க்கா.. இவர்தான் மாமா.. நமக்குத்தான் மாமா..”

“நீ அடி வாங்கப் போகிறாய் ரமா.. அப்படி யார் உனக்குச் சொன்னது..”

“உன் அம்மாவும்.. என் அம்மாவும்தான் சொன்னாங்க.”

வாசவி என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்க. சந்தோஷ்.. நமட்டுச் சிரிப்புச் சிரித்தான்..

“ம்ஹூம்.. பெரியவங்களுக்குத் தெரியும் உறவு முறை.. சிறியவங்களுக்குத் தெரியவில்லை.. நகரு..”

வாசவி நகர்ந்தாள்.. சந்தோஷ் மேஜையை வாசவி விரும்பிய கோணத்தில் நகர்த்தி மிகச் சரியாகப் போட்டான்.

“போதுமா..”

அவன் நிமிர்ந்து வாசவியைப் பார்க்க.. அவள் தலையாட்ட மனமில்லாமல்.. மண்டபத்தின் படிகளில் இறங்கி.. காற்றாட வாசலில் போய் நின்றாள்.. ரமா மண்டபத்திற்குள் ஓடி விட.. சந்தோஷ்.. வாசவியின் அருகில் சென்றான்..

0Shares

Reviews – Nesam Mattum Nenjinilay / நேசம் மட்டும் நெஞ்சினிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link