Chapter 01

0Shares

முன்னுரை

ஆசிரியர் கடிதம்…

மனம் விட்டுப் பேசலாமா..?

என் பிரியத்துக்குரிய வாசக.. வாசகிகளே..!

‘ரயில் பயணங்களில்..’ன்னு ஒரு சினிமா இருக்கு.. அந்தப் படத்தோட டைட்டில் எனக்குப் பிடிக்கும்.. எதனாலன்னு யோசிச்சுப் பார்த்தப்ப ரயில் பயணங்கள் என் வாழ்வில் அரிதானவை என்பதினால்தான்னு பிடிபட்டது.

சென்னையிலே என் தாய்மாமாக்களின் வீடுகள் இருக்கிறதினால சின்ன வயசில ‘மே’ மாத லீவுக்கு சென்னைக்கு வந்து போவோம்.. அப்போது வந்து போன ரயில் பயணங்கள் என் நினைவில் இல்லை..

நினைவு தெரிந்த நாள் முதல் சென்னைக்கு வந்து போனது பஸ்ஸில்தான்.. ரயிலில் இல்லை.. ரயிலில் பயணித்து விட வேண்டும் என்ற என் நீண்டநாள் ஆசைக்காக திருப்பதிக்கு ரயிலில் சென்று வரலாம் என்று கூறினார் என் கணவர்.. சிறுவனாக இருந்த என்மகனும் உற்சாகத்துடன் அதை வரவேற்றான்.. சந்தோசமாக ரயிலில் கிளம்பினோம்.. ரயிலில் பயணித்ததைப் போட்டோ பிடித்துப் பொக்கிசமாக வைத்துக் கொண்ட முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.. திருப்பதி சென்று ஏழுமலையானையும், அடிவாரத்தில் கோவில் கொண்டிருக்கும் அலமேலுமங்கை நாச்சியாரையும்.. ஸ்ரீனிவாசப் பெருமாளின் திருமணத்திற்கு பொன் நாணயங்களை மரக்காலில் அளந்து செலவு செய்த களைப்பில் தங்க மரக்காலைத் தலைக்கு வைத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் கோவிந்தராஜப் பெருமாளையும் சேவித்து விட்டுக் காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று வணங்கி விட்டுத் திரும்பினோம்..

திண்டுக்கல்லை ரயில் அடைந்தபோது இரவுப் பொழுது.. நள்ளிரவைத் தாண்டியிருந்தது.. பிளாட்பாரத்தில் ஒரேயொரு போர்ட்டர் மட்டும் தான் இருந்தார்.. ரயிலை விட்டு நாங்கள் மூவர் மட்டும்தான் இறங்கினோம்.. என் கணவரும், மகனும் பெட்டிகளுடன் பிளாட்பாரத்தில் இறங்கிப் பத்திரமாக நின்ற பின்னால் கடைசியாக நான் இறங்கினேன்..

பொதுவாக நான் பாதங்களை அழுத்தி ஊன்ற மாட்டேன்.. ரயிலின் இரண்டாவது படி வழுவழுப்பாக சிறியதாக இருக்கும்.. அந்தப் படியில் அழுத்தமில்லாமல் நுனியில் நான் காலை வைத்து இறங்கியதில் வழுக்கி விட்டு பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்து சொறுகி 

விட்டேன்.. என் கால் தண்டவாளத்தில் பதிந்திருந்ததா என்பது கூட என் நினைவில் இல்லை.. என் அலறல் சப்தத்தில் பிளாட்பாரத்தில் இருந்த போர்ட்டரும், ரயிலின் ஏஸி கோச்சில் நாங்கள் பயணம் செய்ததால் விழித்திருந்த ஏஸி கோச்சின் ஊழியர்களும் ஓடி வந்து என் கையைப் பற்றினார்கள்.. என் மகன் சிறுவன்.. தூக்கக் கலக்கத்துடன் தள்ளி நின்றவனுக்கு நான் விழுந்ததுகூடத் தெரியாது.. என் கணவர் பாய்ந்து என் தோளைப் பிடித்துத் தூக்க.. மற்றவர்கள் கையைப் பிடித்துத் தூக்க என்று என்னை நொடிப் பொழுதில் பிளாட்பாரத்தில் தூக்கி நிறுத்தி விட்டார்கள்.

நான் விடுபடுவதற்கும், ரயில் நகர்வதுக்கும் சரியாக இருந்தது.. நன்றி ஏழுமலையானுக்கு..

அதற்குப் பின்னால் ரயிலை நினைத்தாலே குளிர் ஜீரம் வந்து விட்டதால் ரயில் பயணத்தைப் புறக்கணித்துக் கொண்டிருந்தேன்.. கோபி செட்டிப் பாளையத்தில் நடந்த கானபிரியாவின் திருமணத்திற்கு நான் ரயிலில் போக வேண்டியதாகி விட்டது.. நல்லவேளையாக ஊடே ஏறி இறங்க வேண்டிய அவசியமில்லாமல் சென்னை ஈரோடு எக்ஸ்பிரஸ்ஸிலேயே போய் வந்து விட்டோம்.. அந்தப் பயணத்தைக் குறித்த என் ஆயிரம் கேள்விகளுக்கு லட்சுமி மோகன் பொறுமையாகப் பதில் சொன்னது தனிக் கதை..

பவானி ஆற்றங்கரையை ரசிக்க முடிந்த அந்த ரயில் பயணத்தில் திரும்பும் போது.. எங்களின் கம்பார்ட்மெண்டில் என் கணவருடன் பேசிக் கொண்டிருந்த சக பயணிகள் அவர் நாவல் வெயிட்டாளர் என்பதில் ஆர்வம் காட்டிப் பேசினார்கள்.. அதில் ஒருவர் என் கதையைப் பற்றி வியந்து பேசினார்.. கடைசிவரை நான்தான் அந்தக் கதைகளை எழுதிய எழுத்தாளர் என்பதை நான் வெளிப்படுத்தவே இல்லை.. மௌனமாக அவர்களின் பேச்சைக் கவனித்தபடி தூங்கி விட்டேன்.. நான் யாரென்பதை அறியாமலே அவர் இறங்கிப் போய் விட்டார்.. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

அரிதான எதுவும் ஆகர்ஷிப்பதுதான்.. ரயில் பயணங்களைப் போல.. அடுத்த ஆசிரியர் கடிதத்தில் பேசலாமா..?

– நட்புடன் –

முத்துலட்சுமி ராகவன்

கவிதை சொல்லவா..?

விளக்கின் சுடர்..!

இருள் நிரம்பிய என் வாழ்வில்

வெளிச்சப் புள்ளிகள் நிறைவது எப்போது..?

காத்திருக்கிறேன்.. விளக்கின் சுடர் தேடி..

அருள்தீபம் நீயேந்தி

        அருகில் வா..

என் மன இருளை விரட்டி

        மகத்துவம் தா..

– முத்துலட்சுமி ராகவன்

Chapter 01

மழையும் இல்லாத வெயிலும் இல்லாத இதமான நிழல்பொழுது அவளை பால்கனியின் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆட ‘வா’ என்று அழைத்தது.. ஆசையுடன் போனாள்.. ஓர் இளவரசியைப் போல ஊஞ்சலில் உட்கார்ந்து கால்களை விந்தி ஆடினாள்.. 

மயில் தோகை போலத் தொங்கிய கூந்தல் தரை தொட முயன்று ஊஞ்சலின் வேகத்தில் அலை பாய்ந்தது.. மஞ்சள் அரைத்துப் பூசியதைப் போன்ற நிறம் கதிரவனின் கதிரில் ஜொலித்தது.. மெலிதாக நீண்டிருந்த நாசியில் இருந்த வைர மூக்குத்தி அவளின் சாத்வீகமான அழகோடு ஒன்றி ஒளிர்ந்தது.

அவள்.. பூர்ணிமா..! கொடி போன்ற உடல் கொண்டவள்.. பூப்போன்ற மனம் கொண்டவள்.. வங்கியில் மேனேஜராக பணிபுரியும் விஸ்வநாதனின் இளைய மகள்.. குடும்பமே உலகம் என்று வாழும் பாகீரதியின் செல்லமகள்.. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று கஞ்சி போட்ட சட்டையை விட விறைப்பாக முறைக்கும் டி.எஸ்.பி பூபாலனின் அன்புத்தங்கை.. மணாளனே மங்கையின் பாக்கியம் என்று பூபாலனிடம் சொக்கி நிற்கும் ஆனந்திக்குப் பிரியமான நாத்தனார்.. சாக்லெட்டிலிருந்து சகலத்தையும் பகிர்ந்து கொள்ளும் குட்டிக் குழந்தை ஆஷாவின் அருமை அத்தை..

பூர்ணிமா தென்றலைப் போன்றவள்.. அகல் விளக்கின் அமைதியைத் தருபவள்..

அவள் அட்சயப் பாத்திரம்..! கற்பகத்தரு..! காமதேனுவைப் போலக் கேட்ட வரம் அளிக்கும் காருண்யம் கொண்டவள்..

விஸ்வநாதனுக்கு பூர்ணிமா என்றால் உயிர்.. மகளின் கனிவான சுபாவத்தில் பெருமை கொண்டவர் அவர்.. ஒரு வகையில் மகளைச் செல்வம் போல நினைப்பவர்.. மகள் நடந்தால் அந்த மகாலட்சுமியே நடப்பதைப் போல இருக்கிறது என்று சொல்லிச் சொல்லி மகிழ்வார்..

அமைதி ததும்பும் அகல் விளக்கின் சுடரொளியைத் தன்னுள் கொண்டவள் பூர்ணிமா.. பூவினும் மெல்லிய பாதங்கள் நிலத்தில் பதிந்து நடக்கும் ஒலியை சன்னமான கொழுசின் ஒலி மட்டுமே காட்டிக் கொடுக்கும் இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க என்று அன்னம் போல நடை பயில்பவள் அவள்..

இதழ்விரித்து சின்னச் சிரிப்பை அவள் சிரிக்கும் விதமே அலாதியானதாக இருக்கும்.. மெல்லச் சிரிக்கும் அவளது சன்னச் சிரிப்பிற்கு இந்த பூலோகத்தையே எழுதி வைத்து விடலாம் போலத் தோன்றும்.. பூலோகத்தில் சதுர அடியின் விலை நாளுக்கு நாள் ஏறி வருவதாலும்.. தனியொரு மனிதருக்குச் சொந்தமில்லாமல்  அனைத்து ஜீவராசிகளுக்கும் அது சொந்தமானதாக இருப்பதாலும் அவளுக்கு பூலோகத்தை எவரும் சாசனம் பண்ணிக் கொடுத்து விட முடியவில்லை என்பதினால் விட்டு வைத்துள்ளார்கள்.

அத்தகைய அகல்விளக்கின் ஒளி வடிவாக விளங்கும் பூர்ணிமா ஆகாயத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்… மைதீட்டிய அவளது மைவிழிகளுக்குள் மையல் ததும்பிக் கொண்டிருந்தது.. இன்னதென்று சொல்லில் வரையறுக்க முடியாத சந்தோசம் அவளது  நெஞ்சகத்தில் நிரம்பியிருந்தது.. ரகசியக் கனவுகளை உற்பத்தி செய்யும் அந்த சந்தோசம் சமீப காலத்தில்தான் அவளை ஆக்ரமித்திருந்தது.. பகிர்ந்து கொள்ள அந்தரங்கத் தோழியில்லாத நவின யுகத்தின் இளவரசி அவள்.. தனிமையில் தன் ரகசியக் கனவுகளில் கரைந்து கொண்டிருந்தாள்..

வானம் மேக மூட்டங்களுடன் காட்சி தந்தது.. மீண்டும் மழை வரக்கூடுமோ என்று யோசித்தாள்.. மழை பொழிந்தால் மயிலைப் போலத் தோகை விரித்து நாட்டியமாடப் போகிறாளா என்று அவள் மனம் அவளைக் கேலி செய்தது.. மேகக் கூட்டங்கள் விதம் விதமான வடிவங்களுடன் காட்சி தந்தன.. ஒவ்வொரு வடிவத்திற்கும் உருவம் கொடுத்து அவள் கற்பனை செய்து பார்த்தாள்.. இது யானை, இது குதிரை, இது பறவை என்று பற்பல பெயர்களைச் சூட்டி அழகு பார்த்தவளை அந்த முரட்டு மேகம் ஈர்த்தது..

‘இது.. இது..இது..’

பூர்ணிமாவின் முகத்தில் மென்மை படர்ந்தது.. அவளது மனக்கண்ணில் ஒர் உருவம் விரிந்தது.. ஆறடி உரயத்தில், ஆஜானுபாகுவான தோற்றத்தில், மாநிறத்தில், வடிவான தோற்றத்துடன் கண் சிமிட்டி ‘வா’ என்றழைத்தது..

‘வாவென அழைத்தால் போய்விட முடியுமா..?’

வாட்டத்துடன் கூடிய நாணச்சிரிப்புடன் அவள் காற்றில் விரல்களைச் சுண்டினாள்.. அதைக் காற்று அந்த முரட்டு உருவத்திடம் எடுத்துச் சொல்லுமா என்று யோசித்தாள்.. குழந்தைத்தனமான யோசனையில் சிரிப்பு வந்தது.. மேக உருவத்துக்கு லிகிதம் வரைந்தாலென்ன என்று தோன்றியது.. மேகம் விடு தூதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாள்.. மேகத்துக்கே தூதனுப்ப என்ன செய்வாள்..?

முரட்டு மேகத்தின் பக்கத்தில் துகள் துகளான மேகங்கள் மிதந்தன.. அவற்றில் ஒன்று கரைந்து காகித வடிவில் மாறியது.. பூர்ணிமாவின் மனதில் பாடல் வந்து நின்றது.

“காதல் கடிதம் தீட்டவே..

மேகமெல்லாம் காகிதம்

வானின் நீலம் கொண்டுவா..

பேனா மையோ தீர்ந்திடும்..

சந்திரனும் சூரியனும்

அஞ்சல் காரர்கள்..

இரவு பகல் எப்பொழுதும்

அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்..”

மனதில் வந்த பாடலை வாய் விட்டு அவள் பாடியதில் பக்கத்தில் வந்து நின்ற ஆஷாக்குட்டி ஆச்சரியம் கொண்டு இது அத்தையா இல்லை கானம் பாடும் யட்சக் கன்னிகையா என்று அடையாளம் பார்ப்பதைப் போல உற்றுப் பார்த்து வைத்தாள்..

“பாத்தா பாதின..?” மழலையில் கேட்டாள்..

அவள் சந்தேகமாக கேட்டதில் பூர்ணிமா சிரித்துவிட்டாள்.. அவள் பாடியது பாட்டா இல்லையா… என்று குழந்தை சந்தேகப்படும் அளவிற்கு மட்டக் கேவலமாகவா பாடி வைத்துத் தொலைத்தாள்..?

“நீயே இப்படிக் கேட்டா அத்தை மனசு தாங்குமா.. ஆஷாக்குட்டி..?” குழந்தையை அணைத்துக் கொண்டாள்..

“விது அத்தை..” ஆஷா திமிறினாள்..

“ஏன் குட்டி..?” பூர்ணிமா விடவில்லை..

“பாத்தி உன்னக் கூப்பித்தாங்க..”

அவளது மழலையில் மகிழ்ந்து போனாள் பூர்ணிமா.. மூன்றாம் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆஷாவுக்கு ‘ட்’ என்ற எழுத்து இன்னமும் சரியாக நாவில் வந்து உட்காரவில்லை.. ‘ட்’க்குப் பதில் ‘த்’ என்று உச்சரிப்பாள்.. இன்னும் பல எழுத்துக்களை அவளது வசதிக்கு ஏற்ப மாற்றியமைத்துச் சொல்லுவாள்.. அதைக் கேட்கும் பொழுதெல்லாம் செவிகளில் இன்பத்தேன் பாய்வதைப் போல புளகாங்கிதப் பட்டுப் போவாள் பூர்ணிமா..

‘குழலினிது யாழினிது என்பர் – தம்மக்கள்

மழழைச் சொல் கேளாதவர்…’

பொய்யாமொழிப் புலவரின் ஹைக்கூக் கவிதையான திருக்குறள் அவள் மனதில் ஒலித்தது.. வள்ளுவர் மனித மனங்களை எத்துணை நுட்பமாக ஆய்வு செய்திருக்கிறார் என்று எப்போதும் போல அப்போதும் வியந்து போனாள் பூர்ணிமா..

“உங்க பாட்டி என்ன மகாராணியா..? அவங்க கூப்பிட்டதும் ஓடோடி வந்துடனுமா..?” குழந்தையை அள்ளியபடி எழுந்து நின்றாள்..

“ஆமா..” குழந்தை அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டது..

“என் தங்கம்..!”

குழந்தையை முத்தமிட்டபடி தாயைத் தேடிப் போனாள் பூர்ணிமா..

0Shares

Reviews — Akalvizhku / அகல் விளக்கு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link