Chapter 31
எத்தனை யுகங்களாய் அறிந்ததைப் போன்ற ஜென்ம ஜென்மாந்திர பந்தம் ஒன்று அனுராதாவைப் பார்த்த நொடியிலேயே ஆகாஷிற்கு ஏற்பட்டது.. எவராலும் சலனப்படுத்த முடியாத அனுராதாவின் மனதை அவன் சலனப்படுத்தினான்.. அவள் அவனை விரும்பினாள்.. அவனோ அவளால் ஈர்க்கப்பட்டான்..
இருந்தும் இருவரும் ஒருவர் அன்பை ஒருவர் உணராமல் பிரிந்தனர்.. பிரிந்தபோதும் அனுராதாவின் இடத்தில் இன்னொருத்தியை நினைத்துப் பார்க்கக் கூட ஆகாஷ் விரும்பவில்லை.. அனுராதாவோ அவனைத் தவிர வேறு யாரையும் திருமணம் பண்ணிக் கொள்ளக் கூடாதென்பதில் உறுதியாக நின்றாள்..
இருவரின் உள்ளமும் அறிந்த பண்பட்ட தொண்டைமான் இருவரையும் வாக்குறுதியால் கட்டிப் போட்டு விட்டுக் காலமானார்.. திருமணம் செய்து கொண்டு தம்பதிகளான பின்னும் ஒருவர் மனதை ஒருவர் உணராமல் இதயத்தில் வலியோடு இருவரும் பிரிந்தே வாழ்ந்தனர்..
அதிரடியாய் ஆகாஷ் நடவடிக்கையில் இறங்கி அவளது இதயத்தின் சாளரத்தைத் திறந்தான்.. அவன் பார்வையென்னும் காற்றுப்பட்டதும் அவள் இதயத்தில் பதுங்கியிருந்த காதல் உணர்வு கட்டவிழ்ந்து வெளியே வந்தது..
மோக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆகாஷும் அனுராதாவும்.. இரவு உணவை மறந்தனர்.. ஆகாஷின் தாகம் பொங்கி எழ அனுராதா அவன் கைக்குள் அடங்கினாள்.. நெஞ்சம் நிறைந்து விலகிச் சென்றவள்.. நித்தமும் சிந்தையில் வந்து அவன் நிம்மதியைக் கொன்றவள்.. இன்று தென்றலாய் அவன் தேகம் தழுவினாள்.. குளிர் ஊற்றாய் அவனது தாகம் தீர்க்க மருகினாள்..
விடியலின் அருகாமையில்தான் பசியே அவர்களுக்கு உறைத்தது..
தன் கைக்குள் அடங்கியிருந்த அனுராதாவின் காதுகளில் ஆகாஷ் முணுமுணுத்தான்..
“அனு.. பசிக்குதுடி..”
“அச்சச்சோ.. நாம் நைட் சாப்பிடவே இல்லையே..”
அனுராதா பதறி விலகினாள்.. ஆகாஷ் விட மறுத்தான்..
“இப்ப ஏன் எழுந்து போகிறாய்..?”
“போகாமல் டிபன் செய்ய முடியுமா..?”
“இங்கேயே ஏதாவது பிஸ்கட் இருக்கான்னு பாரு..”
“அது எப்படிப் பசி தாங்கும்..?”
“ஸ்ஸ்.. எல்லாம் ஓர் அவசரத்திற்கு உதவுவது தானே.. அது போதும்..” ஆகாஷ் அவள் கன்னத்தில் வாசம் பார்த்தான்..
“எந்த அவசரத்திற்கு.. உதவுவதாம்..?” அனுராதாவிற்கு சிரிப்பு வந்தது..
“இந்த அவசரத்திற்குத்தான்..” ஆகாஷ் அவளை இறுக்கிக் கொண்டான்.. அனுராதா கிறங்கினாள்..
“ப்ளீஸ்.. கொஞ்ச நேரம் அத்தான்.. நேற்று மதியம் சாப்பிட்டது..”
“இதுவரை தாங்கவில்லையா..? அது போலதான்.. நீ கிட்ட வா..” ஆகாஷ் கரம் நீட்டி அவளை அழைத்தான்..
அவள் விலகி எழுந்து அறைக்கதவைத் திறந்து கொண்டு விரிந்து கிடந்த கூந்தலை கொண்டையிட்ட வண்ணம் மாடிப்படிகளில் இறங்கினாள்..
அவளது அழகை ரசித்த வண்ணம் ஆகாஷ் அவளை “அனு.. ஏய் அனு.. நில்லுடி..” என்று அழைத்த வண்ணம் தொடர்ந்து இறங்கினான்..
அனுராதா சமையலறைக்குள் நுழைந்து புடவையை இழுத்துச் செறுகிக் கொண்டு பரபரவென்று வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தாள்.
ஆகாஷ் அனுராதாவின் பின்னால் நின்று கொண்டு அவளை அணைத்துக் கொண்டான்.. அனுராதா அவனுக்கு இசைவாய் நின்று கொண்டே வேலையைப் பார்த்தாள்.. அனுராதாவின் பின்னங்கழுத்தில் முகம் புதைத்துக் கொண்ட ஆகாஷ்..
“அனு.. என்ன பண்ணுகிற..” என்றான்..
“உப்புமா பண்ணுகிறேன்..”
அனுராதா சிரித்துக் கொண்டே அடுப்பை பற்ற வைத்து வாணலியை அடுப்பில் வைத்தாள்.. நெய்யை ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்க ஆரம்பித்தபோது ஆகாஷ்..
“ஷ்ஆஆ.. என்ன ஓர் வாசனை பார்..” என்று வாசம் பிடித்தான்..
அடுப்பில் நீர் கொதிக்க ஆரம்பிக்க வறுத்த ரவையை அதில் கொட்டி கிளற ஆரம்பித்த அனுராதா..
“நெய்யில் வெங்காயம் வதங்கினால் வாசம் வரத்தான் செய்யும்.. ஐந்து நிமிடம் பொறுங்கள்.. ரெடியாகிவிடும்..” என்று கூறினாள்..
“உன் சமையல் வாசனையை யாருடி சொன்னது.. உன் கூந்தல் வாசனையைச் சொன்னேன்..”
“அதுதானே பார்த்தேன்..”
அனுராதா செல்லமாய் கணவனின் காதைப் பிடித்து டைனிங் டேபிளில் அமர வைத்தாள்.. உப்புமாவை பரிமாறி..
“சாப்பிடுங்கள்..” என்றாள்..
“நீயும் வா சாப்பிடலாம்..”
“ஒரே தட்டிலா..”
“ஒரே கட்டிலில் படுக்கிறோம்.. ஒரே தட்டில் சாப்பிடக் கூடாதா..? பேசாமல் வாடி..”
இருவரும் சாப்பிட்டார்கள்.. விடியலின் போது எழுந்திருக்க மறந்து அயர்ந்து தூங்கினார்கள்.. பத்து மணிக்கு பதறி எழுந்து வேலைக்கு விடுப்புச் சொன்னார்கள்.. மீண்டும் முதல்நாள் கதையைத் தொடர்ந்தார்கள்..
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.