Chapter 09
இன்பத்தை பகிர்ந்து கொள்ள..
ஆயிரம் பேர் வருவார்கள்..
துன்பத்தில் தோள் கொடுக்க..
தோழன் மட்டும்தான் வருவான்..
காதலாகி.. கசிந்துருகி..
இருள் போர்வை கவிய ஆரம்பித்தது.. கடற்கரையில் கூட்டம் கொஞ்சம் குறைய ஆரம்பித்து இருந்தது.. அந்த இருள் போர்வை ஜீவாவுக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது.. அவன் இருளோடு இருளாக தன்னைப் புதைத்துக் கொண்டு கடந்த கால நினைவுகளில் இருந்தான்..
டேனியல் ஜீவாவை விட்டு நகரவில்லை..
“ஜீவா.. பழையபடி ஜிம்முக்குப் போ.. உன்னை நம்பி.. எத்தனை பேர் தினமும் உன் ஜிம்முக்கு வருகிறாங்க.. உன் திறமையை வீணடிக்காதே.. அது கடவுள் உனக்குக் கொடுத்த சொத்து.. அதை பயன்படுத்தாமல் வீணடிக்க உனக்கு உரிமையில்லை..”
ஜீவா ஜிம்முக்கு திரும்பினான்.. வேலையில் மனதை செலுத்த ஆரம்பித்தான்.. அவன் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த போது.. ஜீவாவின் அம்மா மகேஸ்வரி.. அவனைத் தேடிக் கொண்டு வந்தாள்..
“என்னமா வெயிலில் வந்திருக்கீங்க.. கோபி.. போய் ஒரு கூல் டிரிங்க் வாங்கிக் கொண்டு வா..”
கூல்டிரிங்கை குடித்தபடி.. மகேஸ்வரி பேச ஆரம்பித்தாள்..
“நீ விட்டுப் பக்கமே சரியாக வருவதே இல்லை ஜீவா..”
“பணம் கொடுத்து விடுகிறேனேம்மா..”
“ஏண்டா.. பணம் கொடுத்து விட்டால் போதுமா..? பெற்ற தாயையும் கூடப் பிறந்தவங்களையும் பார்த்துப் பேச வேண்டாமா..?”
‘எனக்குத்தான் எல்லாம் அவளாகப் போய் விட்டதேம்மா..’ குற்ற உணர்வுடன் ஜீவா மௌனமாக இருந்தான்..
“போகுது போ.. உனக்கு வேலை அதிகம் இருந்திருக்கும்.. அதனால் வர முடியாமல் போயிருக்கும்.. இந்தா.. இந்தப் போட்டோவைப் பாரு..”
“மகேஸ்வரி கொடுத்த போட்டோவில் ஒரு பெண் சிரித்த முகத்துடன் வெகு அழகாக இருந்தாள்..”
“யாரும்மா இது..”
“பொண்ணு பேரு கலா.. டிகிரி படிச்சிருக்கு கம்ப்யூட்டர் தெரியுமாம்.. இந்த ஊரிலேயே ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்க்குதாம்..”
“இதையெல்லாம் ஏம்மா என்கிட்ட சொல்கிறீங்க..”
“உன்கிட்டச் சொல்லாமல்.. வேறு யாருகிட்டச் சொல்றது..? பெண்ணுக்கு முப்பது பவுன் நகை போடுகிறாங்க.. யமஹா வண்டி வாங்கிக் கொடுக்கிறாங்க.. கையில் ரொக்கமாய் பணம் கொடுத்து கல்யாணச் செலவையும்.. அவங்களே பார்த்துக்கிறாங்க..”
தாயின் பேச்சுப் போகும் திசை ஜீவாவிற்குப் புரிந்துவிட்டது.. அவன் முகம் மாறியது..
“அம்மா.. எனக்குக் கல்யாணம் வேண்டாம்..”
“ஏண்டா.. இந்தப் பெண்ணுக்கு என்ன குறை..”
“கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டமில்லைம்மா..”
“புரியாமல் பேசாதே ஜீவா.. எதுவும் அந்தந்த வயசில் நடந்து விட வேண்டும்.. காலத்தில் பயிர் செய்ன்னு தெரியாமலா.. பெரியவங்க சொல்லியிருக்கிறாங்க..”
“இந்த மண்ணில்.. சந்தியாவைத் தவிர.. எந்தப் பயிரும் முளைக்காதேம்மா..” ஜீவா மனம் குமுறினான்..
“எனக்குப் பிடிக்கலைன்னா விட்டு விடுங்கம்மா..”
“டேய்.. சொந்தமா தொழில் செய்கிறாய்.. கை நிறைய சம்பாதிக்கிறாய்.. உனக்குப் பெண் கொடுக்க.. பெண்ணை பெத்தவங்க நான் நீன்னு போட்டி போடுறாங்க.. மாட்டேன்னு சொல்லாமல் சரின்னு சொல்லு ஜீவா..”
ஜீவா சரியென்று சொல்லவில்லை.. மகேஸ்வரி எவ்வளவு கெஞ்சியும் அவன் கல்யாணத்திற்கு சம்மதிக்கவே இல்லை..
மறுநாள் டேனியல் கோபமாய் ஜீவாவைத் தேடிவந்தான் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.. ஜீவாவை முறைத்தான்..
“உனக்கு அறிவிருக்காடா.. அறிவைக் கடன் கொடுத்து விட்டாயா..?”
“அம்மா.. உன்னிடம் ஏதாவது சொன்னாங்களா..?” என்று அமைதியாய் கேட்டான் ஜீவா..
“சொன்னாங்க.. எல்லாத்தையும் சொன்னாங்க.. ஏன் ஜீவா இப்படி பிடிவாதம் பிடிக்கறே..”
“என்னால் எப்படிடா கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியும்..?”
“ஏன் முடியாது..? இப்போது நீ இருக்கும் நிலைமைக்கு கல்யாணம் என்பதுதான் மிகச் சரியான மருந்து.. நீ வாழ வேண்டும் ஜீவா..”
“யாருக்காக வாழ வேண்டும்..?”
“உனக்காக உன் அம்மா… அண்ணன்.. தங்கைக்காக.. உன் நண்பர்களுக்காக.. ஏன் எனக்காக நீ வாழ வேண்டும்..”
“வாழு.. வாழு.. என்றால் எப்படிடா.. வாழ்வதற்கு ஆசை வேண்டாமா..? எனக்கு அது சுத்தமாக இல்லை..”
“நீ சொல்வது உனக்கே பைத்தியக்காரத்தனமாக இல்லையா..?”
“இல்லை..”
“உன்னை பெத்தவங்க உன் நல்லதற்குத்தானே சொல்வாங்க..”
“எனக்கு அது நல்லதுதான்.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறவளுக்கு கெட்டதாச்சே..”
“டேய்.. நான் ஏற்கனவே.. உன்மேல்.. ரொம்ப காண்டாக இருக்கிறேன்.. இதில் நீ இப்படி வந்து பண்ணினே.. பிளந்து கட்டி விடுவேன்.. உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கு கொடுத்து வைத்திருக்கனும்டா.. உனக்கு என்னடா குறை..?”
“என் இதயம் சந்தியாவிடம் இருக்கிறதுடா.. என் இதயத்துடிப்பு.. அவள் பெயரைச் சொல்லித்தான் துடிக்கிறது.. ஒரு நாளின் இருபத்து நாலு மணி நேரமும் அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்..”
“அதுதான் எனக்குத் தெரியுமே.. மனுசனை தூங்க விடாமல் எழுப்பி.. வைத்துக் கொண்டு இம்சை பண்ணுகிற ஆசாமியாச்சே நீ.. தூங்கினாலும் அவளைப் பற்றி கனவு கண்டுக்கிட்டு கிடக்கிற ஆளாச்சே நீ..! இதை என்னவோ புதிதாய் சொல்கிறது போல என்னிடம் வந்து சொல்கிறாயே.. இந்த ரோதனையைத்தான் நான் தினமும் பார்த்துக்கிட்டு இருக்கேனே..”
“சந்தியாவை மனதில் வைத்துக் கொண்டு.. இன்னொரு பெண்ணுடன் என்னால் வாழ முடியுமா..? பாவம்.. முன்னே.. பின்னே தெரியாத.. யாரோ ஒரு பெண்ணின் வாழ்க்கையை நான் ஏண்டா கெடுக்க வேண்டும்..”
ஜீவா பேசிய நியாயத்தைக் கேட்டுத் தலையில் கை வைத்துக் கொண்டான் டேனியல்..
“டேய்.. நீ உருப்படுகிற வழியை பாருடா..”
“இப்போது உருப்படியாத்தானே இருக்கிறேன்..”
“இதுதான் நீ உருப்படியாக இருக்கும் லட்சணமா..? ஏண்டா.. சந்தியா.. சந்தியா..ன்னு அவளையே நினைத்து புலம்பிக் கொண்டு அலைகிறாய்.. உனக்கென்று ஒரு வாழ்க்கை இருக்குடா..”
“சந்தியாவுக்குன்னும் ஒரு வாழ்க்கை வேண்டுமில்லையா..?”
“அவள்.. எப்படியோ போகிறாள்.. உனக்கென்ன..?”
“அப்படி என்னால் அவளை விட்டு விட முடியாது டேனியல்.. அவளை முழுமையாகப் புரிந்தவன் தான் அவளோடு வாழ முடியும்.. என்னை விட அவளை நன்றாகப் புரிந்து கொண்டவன் யாருமில்லை. என்னை விட்டு இன்னொருவனை அவள் கல்யாணம் செய்து கொண்டால் நிம்மதியாக அவளால் வாழ முடியாதுடா டேனியல்..”
“அவளுக்கென்ன வந்தது.. அமைதியாக இருந்த குளத்தில் கல்லை விட்டெறிந்து கலக்கியது போல.. உன் மனதைக் கலக்கி விட்டுவிட்டு.. அவள் நிம்மதியாகத்தானே இருக்கிறாள்.. அதுபோல யாரைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் நிம்மதியாகத்தான் வாழ்வாள்..”
“இல்லை டேனியல்.. அவளைச் சுற்றியிருக்- கிறவங்க.. அவள் மனதைப் புண்படுத்தி பேசுவதை அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவன் நம்பிவிட்டால் அவள் வாழ்க்கை நரகமாகி விடாதா..? அதுவே நான் என்றால்.. யார் என்ன சொன்னாலும் கேட்பேனா..? என் சந்தியாவைப் பற்றி எனக்குத்தானே தெரியும்..? என்னை விட.. யாருக்குடா.. அவளைப் பற்றித் தெரியும்..”
ஜீவா உணர்ச்சிவசப்பட்டான்.. டேனியல் புருவங்களை நெரித்து நண்பனை செய்வதறியாத கோபத்துடன் முறைத்துப் பார்த்தான்.
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.