Chapter 22
“அது மிடில் கிளாஸ் தயக்கம்…” என்று சொன்னான் ரமணன்..
“எனக்குப் புரியல…”
“நாலு பேர் என்ன சொல்வாங்களோன்னு.. நம்ம வாழ்க்கையை நாலு பேருக்கு பயந்து வாழ்கிறதுக்குப் பெயர்தான் மிடில்கிளாஸ் வாழ்க்கை.. உன் அப்பாவையும்.. அக்காவையும் அந்த பயம்தான் தடுத்து கட்டிப் போட்டு வைச்சிருக்கு.. அவன் அதை அவனுக்குச் சாதகமா யூஸ் பண்ணிக்கிட்டான்..”
“ம்ப்ச்.. என்னவோ ஒன்னு.. நான் இதைப் பத்தியெல்லாம் யோசிக்கிறதில்ல…”
“யோசிக்காதே.. மூளை குழம்பிப் போகும்…”
“இப்ப நான் என்னதான் செய்யறது..?”
“கவலைப்படாம வீட்டுக்குப் போ.. உன் அக்கா புருசன் வந்து உன் அக்கா காலில விழுந்து கூப்பிட்டுக் கிட்டுப் போவான்..”
“நிஜமாவா சொல்றீங்க..?”
“உன்கிட்டப் பொய் சொல்வேனா மாலு…”
ரமணன் சொன்னதைச் செய்தான்.. மனதில் ரமணனின் பராக்கிரமத்தின் மீது நம்பிக்கையிருந்தாலும்.. பூமிகாவின் பிரச்னை தீருமா என்ற சஞ்சலத்துடன் வீட்டை அடைந்தாள் மாளவிகா..
பூமிகா தலையில் கட்டுடன் கண்மூடிப் படுத்திருக்க.. சேலை முந்தானையால் கண்ணீரைத் துடைத்தபடி.. சமையலறையில் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள மதுரா…
சிதம்பரம் ஒரு பக்கம் விட்டத்தை வெறித்துக் கொண்டிருக்க.. அஸ்வின் ஒரு பக்கம் சோபாவில் சரிந்து கிடந்தான்..
“என்னடா.. காலேஜீக்குப் போகலியா..?”
“முதல்ல.. நீ எங்கே ஊர் சுத்தப் போன..?”
“பிரண்டு வீட்டுக்குப் போயிருந்தேன்டா.. நான் கேட்டதுக்கு பதிலைச் சொல்லு…”
“காலேஜீக்குப் போனா சம்பளமா கொடுக்கிறாங்க..?”
“உனக்கு அதையும் கொடுக்கணுமா..?”
“சம்பளம் வாங்கற அப்பாவே வேலைக்குப் போகல.. அது உன் கண்ணில படவே படாதே…”
“ஏம்ப்பா ஆபிஸீக்குப் போகல…”
“ம்ப்ச்சு.. ஆபிஸீக்குப் போய் என்னத்தைக் கண்டேன்ம்மா..?”
“சம்பளத்தைக் காணலியா..?”
“லீவு போட்டுட்டேன்ம்மா.. இன்னைக்குப் போனா முழு மனசா வேலை பார்க்க முடியாதுன்னு தோணுச்சு.. அதான்..”
ஒருநாளும் அவர் இதுபோல் இருந்தவரல்ல.. அந்தத் திருநாளை பூமிகா கொடுத்து விட்டாளே என்ற நினைவுடன் மதுராவைத் தேடிப் போனாள் மாளவிகா…
சேலை முந்தானையால் கண்ணீரைத் துடைப்பதும்.. காய்களை வெட்டுவதுமாக இருந்தாள் மதுரா..
“நகருங்கம்மா.. நான் காயை நறுக்கறேன்..”
“வேணாம்..”
“ஏன்ம்மா..? நான் சும்மாதானே இருக்கேன்..? ஹெல்ப் பண்றேனே…”
“அதைத்தான் வேணாம்ன்னு சொன்னேன்..”
“நான் ஹெல்ப் பண்ணினா உங்களுக்கு வேலை சீக்கிரமா முடிஞ்சிரும்ல்ல…”
“அதையும்தான் வேணாம்ன்னு சொன்னேன்..”
பட்ட உபத்திரவத்தில் தாய்க்கு மூளை கலங்கி விட்டதோ என்று கலங்கிப் போனாள் மாளவிகா.. அதெல்லாம் இல்லையென்று சொன்னாள் மதுரா…
“மனசெல்லாம் வேதனை நிறைஞ்சிருக்குடி.. வேலை செஞ்சா அதை மறக்கலாம்.. என்னை வேலை செய்யவிடு..”
தாயின் நிலையைக் காணக்காண மாளவிகாவுக்கு உள்ளம் சகிக்கவில்லை.. சமையலறையை விட்டு வெளியே வந்தவள் பூமிகாவைத் தேடிப் போனாள்..
“அக்கா..”
கண்விழித்த பூமிகா.. மாளவிகாவை உயிரற்ற பார்வை பார்த்தாள்…
‘எப்படியிருந்தவ..’ மாளவிகாவின் மனம் வலித்தது..
“இப்ப எப்படியிருக்கு..? வலி இருக்கா..?”
“எந்த வலியைக் கேட்கிற மாளவிகா.. உடம்பில இருக்கிற வலியை விட.. மனசு அதிகமா வலிக்குதே.. நான் என்னடி தப்பு செஞ்சேன்..? அப்பா அம்மா பார்த்து கல்யாணம் செய்து வைத்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டினேன்.. அது தப்பா..?”
“விடுக்கா…”
“அவர் பண்ணின கொடுமைக்கெல்லாம் வெறுப்பைக் காட்டாம இந்தியப் பெண்களின் பிரதிநிதியா.. பெண்டாட்டியாய் லட்சணமா.. இணக்கமா குடும்பம் நடத்தினேன்.. அது தப்பா..?”
“அக்கா…”
“பிள்ளைகளுக்காக.. அவர் கட்டின தாலியை அவிழ்த்து வீசாம பொறுமை காட்டினேன்.. அது தப்பா..?”
“வேணாம்க்கா…”
“எதுக்காகடி இந்த சித்திரவதை..? பெத்தவங்களுக்கு அடங்கின மகளாய் இருந்தேனே.. அதுக்கா இந்த சித்திரவதை..? கட்டின புருசனை மதிச்சு காதலிச்சு குடும்பம் நடத்தினேனே.. அதுக்கா இந்த சித்திரவதை..? குடும்பம் உடைஞ்சிரக் கூடாது என் பிள்ளைக மனசு உடைஞ்சிரக் கூடாதுன்னு நினைக்கிறேனே.. அதுக்கா இந்த சித்திரவதை..?”
“போதும்க்கா.. அலட்டிக்காம படுத்துத் தூங்கு..”
“முடியலையே மாளவிகா.. மனசெல்லாம் ரணமாயிருக்கே.. முள் படுக்கைமேல படுத்திருக்கிறதைப் போல வேதனையாயிருக்கே..”
இந்தத் துக்கத்திலிருந்து இவளை எப்படி மீட்பது என்ற வழிவகை தெரியாமல் திகைத்தாள் மாளவிகா…
மீள முடியாத துன்பப் படு குழியில் மீண்டும்.. மீண்டும் புதையுண்டு கிடப்பவளை இழுத்து வெளியே போடும் வழிவகை தெரியாமல் தவித்தாள்…
‘உன் கையில் என்னைப் பெத்தவங்க பிடிச்சுக் கொடுத்தாங்களே.. நீயே கதின்னு நான் உன் பின்னால் வந்தேனே.. நீ என்னை இந்தப் பாடு படுத்தறயே..’ என்று துக்கம் கொள்ளும் அந்த உத்தமியின் கண்ணீருக்கு சக்தியில்லையா என்று கலங்கிப் போனாள்..
வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது..
“அம்மா…”
ஆவலுடன் ஓடிவந்த பூமிகாவின் பிள்ளைகள் தாயைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்..
அந்த அழைப்பிற்குத்தான் எத்தனை சக்தி..!
எழுந்து கொள்ள முடியாமல் சோர்ந்து கிடந்த பூமிகா வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து இரு கைகளையும் விரித்து குழந்தைகளை அள்ளிக் கொண்டாள்…
“தன்யா.. தனுஷ்.. நீங்களா..? எப்படி வந்தீங்க..?”
“ஆட்டோவில…”
“தனியாவா வந்தீங்க..”
“ஊஹீம்.. அப்பா கூட்டிக்கிட்டு வந்தார்…”
அதற்குள் அறைக்குள் வந்து விட்ட கங்காதரன் இரு கைகளையும் கூப்பி..
“பூமிகா.. என்னை மன்னிச்சுரு..” என்றான்..
அந்த கண்கொள்ளாக் காட்சியினை யாராலும் நம்ப முடியவில்லை.. மாளவிகாவைத் தவிர.. மற்ற எல்லோரும் இமை கொட்டி.. கைகளைக் கிள்ளி.. அது கனவா.. இல்லை நனவா என்று ஊர்ஜிதம் பண்ணிக் கொள்ள முயன்றார்கள்..
‘சொன்னதைச் செய்துட்டான்..’
மாளவிகாவின் மனதில் சந்தோசம் பொங்கியது.. அவள் கேட்டதை ரமணன் செய்து விட்டதில் அவள் மனம் ஆனந்தக் கூத்தாடியது…
“வா.. நம்ம வீட்டுக்குப் போகலாம்.. இனி உன்மேல என் விரல்கூட அடிக்கன்னு படாது.. நான் அடாவடியா மாமாகிட்டயிருந்து வாங்கின பணத்தை அவருக்கே திருப்பித் தந்துடறேன்..” கங்காதரன் பூமிகாவின் கால்களில் ஏறக்குறைய விழுந்தான்..
திரைப்படக் காட்சியில் கூட இப்படி ஒரு திருப்பம் நேராதே என்று குழம்பிப் போனார் சிதம்பரம்…
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.