Chapter 18
காரை ஓட்டிக் கொண்டிருந்த வினோத் பேச வில்லை.. ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான்.. அது அவனுக்கு பொருத்தமாக இருந்தது.. வாயடிக்கும் வானரமான ரமேஷீம் மோன நிலையில் இருந்ததுதான் பொருத்தமாக இல்லை.
“திடுக்கிடும் திருப்பங்கள்ன்னு இந்த சினிமாக்களுக்கு விளம்பரம் கொடுப்பாங்கள்ல.. அது போலவே இருக்குடா இவங்க காதல் கதை.. ம்ப்ச்.. கடுவன் பூனைக்குள்ள இப்படியொரு காதல் மனசா..? நம்பவே முடியலைடா..”
அமைதியைக் கலைத்த ரமேஷின் அங்கலாய்ப்புக்கு பதில் சொல்லாமல் மௌனமாக காரோட்டுவதில் கவனமாக இருந்தான் வினோத்.. அவன் மனம் பாரதி சொன்ன வார்த்தைகளிலேயே உறைந்திருந்தது.
“என் கல்யாண ரிசப்சனுக்கு முரளி வந்திருந்தார்.. அதுதான் அவரை நான் கடைசியாப் பார்த்த சந்திப்பு.. அதுக்கப்புறம் மீட் பண்ணவே இல்லை.. இப்ப காலேஜில ரெண்டு பேரும் லெக்சரரஸா மீட் பண்ணியிருக்கோம்.. தலை கலைஞ்சு.. கண் சிவந்து.. வெறி பிடிச்ச மாதிரி என் ரிசப்சனில நின்னு என்னை முறைச்சுப் பார்த்தார்.. என் பேரண்ட்ஸ் போலிஸ் புரடொக்சன் கேட்டிருந்தாங்க.. போலிஸ் முரளிதரனை அனுப்பி வைச்சிட்டாங்க..”
துயரம் தோய்ந்த அவளது வார்த்தைகளில் வெளிப்பட்ட இயலாமையில், தன்னைத் தொலைத்து விட்டான் வினோத்.
படிப்பு ஒருவருக்குச் சுதந்திரத்தைக் கொடுத்து விடும் என்ற நம்பிக்கையை பாரதியின் கடந்த காலம் தகர்த்தெறிந்தது.. அமெரிக்க வாழ் குடியுரிமையைப் பெற்றிருந்த பாரதியின் பெற்றோரே மகளின் காதலை மறுத்து உடைத்து விட்டார்கள் எனும் போது மற்றவர்களைச் சொல்ல என்ன இருக்கிறது..?
பெண்ணென்று பிறந்தவளுக்கு உரிமைகள் கிடைப்பதில்லை.. மறுக்கப்பட்ட உரிமைகளுடன்.. தான் ஒரு பெண்.. எந்தவிதமான உரிமைகளைப் பெறவும் அருகதையற்றவள் என்ற தாழ்வு மனப்பான்மையுடன்தான் காலம் முழுவதும் அவள் வாழ வேண்டியிருக்கிறது.
அவள் காதலித்தால் அந்தக் காதலும் மறுக்கப்படுகிறது.. எவரேனும் ஒருவர் அவளைக் காதலித்தால், அந்தக் காதலை மறுக்கும் உரிமையும் அவளுக்கு மறுக்கப் படுகிறது.
“பாவம்டா அந்த முரளிதரன்..” இரக்கத்துடன் சொன்னான் ரமேஷ்..
“ம்ம்ம்..”
“மேம் மாதிரியான ஒரு பெண்ணைக் காதலிச்சவரால அந்தக் காதலை மறக்க முடியாதுதான்.. இவர் கடுவன் பூனையா மாறினதிலே ஆச்சரியமில்லைடா வினோத்.”
“அட..! அவன் இவன்னு சொல்லுவ.. இப்ப என்ன மரியாதை தூள் பறக்குது..”
“ஆயிரம்தான் நமக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிற லெக்சரரா இருந்தாலும் அவரும் யூத்துதானேடா..? கல்யாணம் ஆகாத பேச்சிலர் வேற.. அந்த சொந்தத்திலதான் அவன், இவன்னு பேசினது..”
“இப்ப மட்டும் அவர் கல்யாணம் பண்ணி பத்துப் பிள்ளையைப் பெத்துப் போட்டுட்டாரா..?”
“ஒரு பிள்ளையை வளர்த்து ஆளாக்கிறதுக்கே உன்பாடு, என் பாடுன்னு ஆகுது.. இதில பத்துப் புள்ளைக்கு நீ போயிட்ட.. அடேய் வினோத்து.. இப்படியொரு காதலைக் காதலிச்சு வாழ்ந்து பார்த்த மனுசன்மேலே மனசுக்குள்ள மரியாதையா பொங்குதுடா மச்சான்.”
“ரொம்பவும் பொங்கல் வைக்காம அடங்கு..”
“பார்க்கலாம்.. ஆனாலும் பாருடா வினோத்.. இவர் நினைச்சிருந்தா மேமை விட அழகா, பணக்காரியா, மெத்தப் படிச்ச புத்திசாலியா ஒரு பொண்ணப் பாத்து கல்யாணம் பண்ணி செட்டிலாகியிருக்கலாம்.. இவர் அப்படிச் செய்யாம மேமின் நினைவோடயே வாழ்ந்துக்கிட்டு இருக்காரு.. பணம் கொழிக்கற மல்ட்டி இண்டர்நேசனல் கம்பெனியை விட்டுட்டு காலேஜில லெக்சரரா வந்து குப்பை கொட்டறாரு.. இளசா, புதுசா, தளதளன்னு தக்காளிப் பழமாட்டம் இருக்கிற வர்ஷா துரத்தினா அவளை ஏறெடுத்தும் பார்க்காம துரத்தி விடறதிலேயே குறியாய் இருக்காரு..”
“என்னது..? இளசா, புதுசா, தளதளன்னு தக்காளிப் பழமாட்டம் இருக்கிற வர்ஷாவா..?”
வினோத் பாரதியின் காதல் கதையிலிருந்து முற்றிலும் வெளிவந்து விட்டவனாக கண்களில் அனல் பொறி பறக்கக் கேட்டான்..
“ஒரு ஃப்ளோவில வந்துருச்சுடா மச்சி..” உடனடியாக சரணடைந்தான் ரமேஷ்…
“ஊஹீம்.. நீ அடங்க மாட்ட.. காரை நிறுத்தறேன்..”
“எதுக்குடா..?”
“நீ இறங்கி.. பொடி நடையாய் நடந்து உன் வீடு போய்ச் சேரு.. அப்பத்தான் புத்தி வரும்..”
“என் வீட்டு வாசலில இறக்கி விட்டா எனக்குப் புத்தி வராதுன்னு யாருடா உன்கிட்டப் போட்டுக் கொடுத்தது..? சொல்வார் பேச்சைக் கேட்டு நண்பனை சந்தேகப்படாதேடா நண்பா..”
“உன்னைப் பத்தி இன்னொருத்தன் சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கனுமா..? கூடவே கும்மியடிக்கிறவனுக்கு உன் புத்தியைப் பத்தித் தெரியாது..?”
“தெரியும்டா.. தெரியும்.. இனியொருதரம் யோசிக்காம வாய் விட மாட்டேன்..”
“இதை நம்பச் சொல்ற..?”
“யார்மேல சத்தியம் பண்ணட்டும்..?”
“என் தலையில கைவைச்சே.. நண்பன்னும் பார்க்காம மவுண்ட்ரோடு டிராபிக்கில தள்ளி விட்டிருவேன்..”
“சொப்னா மேல வைக்கவா..?”
“உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு ஊரான் வீட்டுப் பொண்ணோட உயிரோட நீ விளையாடுவியா..?”
“வேற யார் மேல சத்தியம் வைக்க..?”
“ஏன்..? உன்னைப் பார்த்தா மனுசனாத் தோணலியா..? உன் தலைமேல கையை வைக்கிறது..?”
“ஹி.. ஹி.. என்ன வினோத்து.. இப்படியெல்லாம் விசப்பரிட்சை செய்யச் சொல்ற..? என் தலை மேல கை வைச்சு சத்தியம் பண்ணினாத்தான் நீ நம்புவியா..? பொத்தாம் பொதுவில சத்தியம் வைச்சா நீ நம்ப மாட்டியா..?”
“வாடா வா.. உன் தலைமேல கை வைக்கச் சொன்னதும் எப்படியெல்லாம் ஜகா வாங்கற.. கெட்டிக்காரண்டா நீ.. உன்னது மட்டும் உயிரு.. மத்தவங்கதெல்லாம்..”
வினோத் தொடரும் முன் அவன் வாயைப் பொத்திக் கவி மிகு முடியை வர்ணிக்கும் அந்தச் செந்தமிழ் வார்த்தையைச் செப்ப முடியாமல் தடுத்தாட் கொண்டான் ரமேஷ்..
“உன் வாயில அந்த வார்த்தையைச் சொல்லிராதேடா வினோத்.. உலகம் தாங்காது..”
“இப்ப நான் எந்த வார்த்தையைச் சொல்ல வந்தேன்னு சீன் கிரியேட் பண்ற..?”
“உன் வாயாலதான் அதைச் சொல்லக் கூடாதுன்னு சொன்னேன்.. என்வாயாலே தாராளமாச் சொல்லலாம்.. சொல்லவா..?”
“ஒரு கூந்தல் இழையும் வேண்டாம்..”
“வினோத்து.. அதை எம்புட்டு அழகாச் சொல்றடா நீ..”
ரமேஷ் மகிழ்ந்து போனான்.. அவனை அவன் வீட்டு வாசலில் இறக்கி விட்டு கையாட்டி விட்டுத் தன் வீட்டைப் பார்த்துப் போனான் வினோத்.. மனமெல்லாம் பாரதியின் கடந்த காலக் காதல் கதையில் அமிழ்ந்திருந்தது.. மனம் கனத்தது..
அந்த வார நாள்களில் ஒன்றில் கல்லூரியின் இலக்கிய விழாவில் முரளிதரனின் மனம் கவர்ந்த பாடலைப் பாடினாள் பாரதி..
Reviews – Netru Intha Neram / நேற்று இந்த நேரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.