Chapter 01

கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தைப் பார்த்து நாக்கைத் துருத்தி பழிப்புக் காட்டினாள் திவ்யா..

“உனக்கு மண்டைக் கனம் ஜாஸ்திடி..”

சொல்லி விட்டுச் சிரித்துக் கொண்டாள்.. அந்தச் சமயம் பார்த்துத்தானா அம்புஜம் உள்ளே வந்து தொலைக்க வேண்டும்..?

தனக்குத்தானே பேசிச் சிரித்துக் கொண்ட மகளை வினோதமாக பார்த்தவளின் விழிகளில் அச்சம் வந்தது..

“அடிப்பாவி மகளே..! இப்புடி என் தலையில கல்லத் தூக்கிப் போட்டுட்டியேடி..”

அவள் ஆலாபனை வைத்ததில் அரண்டு போனாள் திவ்யா..

“ம்மா.. இது உங்களுக்கே நியாயமா இருக்கா..? இப்ப என்ன அலுவலுக்கு இப்படி ராகம் போடறிங்க..? அறியாதவங்க இதைக் கேட்டு வைச்சா என் கதி என்னத்து ஆகிறது..?”

“உன் கதிக்கு என்னடி ஆகும்..?”

“ஊம்..? வார்த்தைக்கு வார்த்தை பிலாக்கணம் வைப்பீங்கள்ல.. வயசுக்கு வந்த பொண்ணா.. லட்சணமா நடந்துக்கனும்ன்னு.. அந்த வயசுக்கு வந்த பொண்ணுக்கு கல்யாணம் காட்சின்னு ஏதும் நடக்கனுமா வேணாமா..?”

“அதுக்கும் இதுக்கும் என்னடி சம்பந்தம்..?”

“அதுசரி.. மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு ஆயிரம் சம்பந்தத்தை அள்ளி விடுவீங்க.. இதைப்பத்தி சொன்னா மட்டும் இமையக் கொட்டி அப்புராணியப்போல என்னடி சம்பந்தம்ன்னு கேப்பீங்க.. நீங்க இருக்கீங்களே..”

“ஏண்டி.. நான் இந்த வீட்டில இருக்கிறது உங்கப்பா.. கண்ணை உறுத்தறதைப் போல உன் கண்ணையும் உறுத்துதா..? வேணும்னாச் சொல்லு..”

“என்னத்தைச் சொல்ல…?”

“இப்பவே பொட்டியக் கட்டிக்கிட்டு பொறந்த வீட்டுக்கு நடையக் கட்டச் சொல்லு..”

“யாரை..?”

“என்னைத்தான்.. வேற யாரைச் சொல்லப் போற..? உன் அப்பாவையா சொல்லப் போற..?”

“நான் ஏம்மா அவரைச் சொல்லப் போறேன்..? பொறந்த வீட்டுக்கு பெட்டியைக் கட்டறதையெல்லாம் பொம்பளைகதான் செய்யனும்.. ஆம்பளைக செய்யக் கூடாதுன்னு எழுதப்படாத சட்டத்தைப் போட்டு வைச்சிருக்காங்களே.. அதை விடுங்க..”

“யாரைடி விடச் சொல்ற..? உங்கப்பாவையா..?”

இப்படி எகனைக்கு மொகனையாய் கேள்வி கேட்டும் தாயை என்னதான் செய்வது என்று நொந்து நூலானாள் திவ்யா..

தலையை ஒரு பக்கமாக சாய்த்து தாயைப் பார்த்தவளை..

“என்னத்துக்குடி ஒரு மார்க்கமா பாத்து வைக்கிற..?” என்று கேட்டு வைத்தாள் அம்புஜம்..

“ஒரு மார்க்கத்தப் பத்தியெல்லாம் நீங்க பேசக்கூடாது.. காலங்கார்த்தாலே வந்து உங்க தலையில நான் கல்லைத் தூக்கிப் போட்டுட்டேன்னு அபாண்டமா பழி போட்டவங்கதானே நீங்க..?”

“அபாண்டமால்லாம் சொல்லலை..”

“பின்னே.. என்ன மண்பாண்டமா சொல்லி வைச்சீங்களாம்..?”

“காலேஜீக்குப் போனோமா.. வீட்டுக்கு வந்தோமான்னு இல்லாம இஷ்டத்துக்கு ஊரைச் சுத்தினா இப்படித்தான் ஆகும்..”

அம்புஜம் பேசிய விதத்தில் தனக்கு எப்படியாகி விட்டது என்று குழம்பிப் போனாள் திவ்யா..

“என்னம்மா சொல்கிறீங்க..?”

தலையாலே தண்ணீர் குடிக்க வைக்கும் தாயிடம் பரிதாபமாக கேட்டாள்..

“காடே, பரதேசமேன்னு அலைஞ்சா.. காத்துக் கருப்பு அரட்டத்தான் செய்யும்..”

அம்புஜம் கூறியதும் தன்னை எந்தக் காற்றும் கருப்பும் அரட்டியது என்று ஆழ்ந்து யோசித்தாள் திவ்யா..

‘ஒருவேளை குச்சி மேடத்தையும்.. கருப்பு மேடத்தையும் சொல்கிறாங்களோ..’ நெற்றியில் ஒற்றை விரலால் தட்டிக் கொண்டாள்..

திவ்யாவின் கல்லூரியில் லெக்சரராக இருக்கும் சகுந்தலா மேடம் மிக ஒல்லியாக இருப்பதினால் ‘குச்சி மேடம்’ என்ற சிறப்புப் பெயரை மாணவ மணிகளின் மத்தியில் பெற்றிருந்தாள்.. அடுத்து ‘கருப்பு மேடம்..’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிருந்த மேகலா.. அண்டங்கருப்பாக இல்லாமல் மஞ்சள் கலந்த சந்தனத்தின் சிகப்பு நிறத்தில் இருப்பாள்.. என்ன ஒன்று.. அவளின் அதீத சிவப்பழகை கருப்பு வண்ணங்கள்தான் தூக்கிக் காட்டும் என்ற நினைவில் ஆழ்ந்த கருப்பு வண்ணப் புடவைகளையே கட்டி வருவதினால் அவளுக்கு ‘விடாது கருப்பு..’ என்ற காரண சிறப்புப் பெயர் எற்பட்டது..

ஆனால்.. அந்தப் பெயர்களையெல்லாம் அம்புஜ வள்ளி அறிய மாட்டாளே.. அறிந்திருந்தால் அதற்கும் திவ்யா வாங்குப் பெற்றிருப்பாளே..

“உன்ன படிக்க அனுப்பி வைச்சா.. நீ டீச்சர்களுக்கு பட்டப் பெயர வைச்சுக்கிட்டா அலையற..? உருப்படுவியா நீ..?”

இப்படிப்பட்ட ஆசிர்வாதங்களைப் பெற வேண்டுமே என்ற அச்சத்தில் எதற்கு வம்பு என்று இதைப் போன்ற சிறப்புப் பெயர்களைப் பற்றிய விவரங்களை வீட்டில் பகிர்ந்து கொள்ள மாட்டாள் திவ்யா..

அப்படியிருந்தும் எப்படி காற்றில் பறந்து விடும் ஒல்லிக் குச்சி உடம்புக்காரியான சகுந்தலாவையும்.. கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு என்றிருக்கும் மேகலாவையும் அம்புஜவள்ளி இனம் கண்டு கொண்டாள் என்று மகா குழப்பமாக இருந்தது திவ்யாவுக்கு..

“ஏம்மா.. காலேஜீன்னு இருந்தா அங்கே நாலு காத்தும் கருப்பும் நம்மை அரட்டத்தான் செய்யும்.. அதுக்குப் பயந்தா காலேஜீப் பக்கம் தலை வைச்சுக்கூட படுக்க முடியாதும்மா..”

அம்புஜத்திடம் அவள் எடுத்துச் சொல்ல ஆரம்பிக்க.. அம்புஜம் கலவரமாகிப் போனாள்..

“ஆத்தி..! இது என்னடி கோராமையா இருக்கு.. கொடும கொடுமன்னு ஆத்துப் பக்கம் போனா அங்கிட்டு ரெண்டு கொடும ஜிங்கு.. ஜிங்குன்னு ஆடிக்கிட்டு வந்த கதையாயில்ல இந்தக் கதை இருக்கு..”

“சேச்சே..! அப்படியெல்லாம் ரொம்பக் கொடுமை பண்ண மாட்டாங்கம்மா.. அப்படிப் பண்ணினா ஸ்டூடண்ட்ஸ் பவர் என்னான்னு காட்டி.. காத்தையும் கருப்பையும் ஓட்டிற மாட்டோம்..?”

“அடியாத்தி..! என்னடி மகளே.. என்னென்னத்தையோ சொல்ற.. ஆளில்லாத ஆத்தங்கரையிலதான் காத்தும், கருப்பும் சுத்தும்ன்னு கண்டிருக்கோம்… இப்புடி படிக்கப் போன காலேசிலயுமா காத்தும் கருப்பும் சுத்தி வைக்கும்..? ஏண்டி திவ்யா..?”

“என்னம்மா..?”

“உங்க காலேஜ் கட்டறதுக்கு முன்னாலே அந்த இடத்தில சுடுகாடு இருந்திருக்குமோ..?”

“ம்மா..”

தலையில் கை வைத்த திவ்யாவிற்கு அப்போதுதான் அம்புஜவள்ளி சொல்லிய காத்துக்கும்.. கருப்புக்கும் அர்த்தம் என்னவென்று விளங்கித் தொலைத்தது..

“ஏம்மா இப்படிப் படுத்தறிங்க..? என்னப் பாத்தா காத்தும் கருப்பும் அரண்டு ஓடியே போயிரும்.. அப்படியாப்பட்ட மகளைப் பெத்து வைச்சுக்கிட்டு இப்புடியா காத்தையும் கருப்பையும் வம்புக்கு இழுப்பீங்க..? விட்டிருங்கம்மா.. அதுகளாவது பிழைச்சுப் போகட்டும்..”

“அப்படின்னா.. நீயும் உன் அப்பாவும் என்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கறீங்கன்னு சொல்றியா..?”

“வேணாம்மா.. இந்த வார்த்தையை நான் சொல்லவே இல்லை.. நீங்களா எடுத்துக்கட்டிக்கிட்டு சொல்லாதீங்க.. ஆமாம்.. எதுக்காக இப்ப அப்பாவையும் திட்டித் தீர்க்கறிங்க.. என்ன..? புருசனும் பெண்டாட்டியும் சண்டை போட்டுக்கிட்டிங்களா..?”

“அடச்சீ.. அப்பாவையும்.. அம்மாவையும் பத்தி பேசற பேச்சா இது..? புருசனாம்.. பொண்டாட்டியாம்..”

“அடக்கடவுளே..! நீங்க ரெண்டு பேரும் புருசன் பெண்டாட்டி தானேம்மா.. அதத்தானே நானும் சொன்னேன்.. என்னவோ.. உறவு மொறையை மாத்திச் சொல்லிட்டாப்புல இல்ல பிடிச்சு உலுக்கறிங்க..”

“வாயிலயே போட்டிருவேன்.. வயசுக்கு வந்த பொண்ணா லட்சணமா இரு.. வாயடிக்காதே..”

கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன வார்த்தைகளை அம்புஜவள்ளி சொல்லி வைத்ததில் ஏண்டா வயதுக்கு வந்தோம் என்று வெறுத்துப் போனாள் திவ்யா.. அந்த வெறுப்புடன் உதடு கோண புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தவளின் பக்கம் வந்த ரம்யா அரண்டு போனாள்..

“ஏண்டி.. முகத்த இந்த லட்சணத்தில கோணிக்கிட்டு இருக்க..?”

“ஊம்.. காத்தும், கருப்பும் அடிச்சுருச்சு..”

“அதுகள நீ அடிச்சு பத்தி விட்டாப் பத்தாதா..? இப்ப என்ன அலுவலுக்கு இஞ்சி தின்ன குரங்கப் போல முகத்த வைச்சிருக்கிறவ..? அதச் சொல்லுவியா.. அத விட்டுட்டு காத்தையும் கருப்பையும் பிடிச்சு வம்புக்கு இழுக்கிறவ..”

“எல்லாம்.. உன்னையும்.. என்னையும் பெத்த நம்ம அம்மா பண்ற காலக் கொடுமையிலதான்..”

“அடியாத்தி..! இப்பத்தான் என்கிட்ட வந்து ஒன் அக்காவப் பாத்துக் கத்துக்கன்னு சொல்லிட்டுப் போறாங்க.. உன்ன இந்தக் கொடுமைக்கு ஆளாக்கிட்டுத்தான் அங்க வந்து பஞ்ச் டயலாக்க பத்த வைச்சாங்களாமா..? சூப்பர் லேடி நம்ம அம்மா..”

“நீதான் மெச்சிக்கனும்.. எப்பப் பாரு.. நீ வயசுக்கு வந்த பொண்ணுன்னு சொல்லிக்கிட்டு..”

“அதச் சொல்லு.. என்கிட்டயும் இந்த ராமாயணம்தான்..”

“ஏண்டி ரம்யா..”

“சொல்லு.. கேக்குது..”

“இந்த ஆம்பளப் பய புள்ளைகள்ளாம் வயசுக்கே வர மாட்டான்களா..? அவங்களுக்கு இந்தக் கோராமை இல்ல பாரு..”

திவ்யாவின் அங்கலாய்ப்பில் அடக்க மாட்டாமல் சிரித்து விட்டாள் ரம்யா..

0

Subtotal